தமிழக அரசை இயக்குவது யார்? கேட்கிறார் ஸ்டாலின்
முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும் நிலையில், தமிழக அரசை இயக்குவது யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை: திருப்பரங்குன்றம் சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டாக்டர் பா.சரவணனுக்கு ஆதரவாக விரகனூர், ஐராவதநல்லூர், சிந்தாமணி, அனுப்பானடி, வில்லாபுரம், திருப்பரங்குன்றம் ஆகிய இடங்களில் செவ்வாய்க்கிழமை ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார்.
நமக்கு நாமே பாணியில் வாக்கு சேகரித்து வரும் ஸ்டாலின், அவ்வப்போது வேனில் ஏறி பேசுகிறார். நேற்று திருப்பரங்குன்றத்தில் முருகன் கோவில் அருகே பிரச்சாரத்தை முடித்தார்.
மக்கள் மத்தியில் பேசிய ஸ்டாலின், தமிழக அரசு நிறுவனங்களான கூட்டுறவு அமைப்புகளின் அங்காடிகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், ஆவின், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கப்படும் ரூ. 100 மற்றும் அதற்கு குறைந்த மதிப்பிலான பணம் எங்கே போகிறது என்று ஆளுநர் விசாரிக்க வேண்டும் என்றார்.
570 கோடி பணம் என்னவானது?
கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி எடுத்துள்ள நடவடிக்கை வரவேற்புக்குரியது. ஆனால், அதில் ஏழை, எளிய மக்கள், சிறு வணிகர்கள்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கண்டெய்னர் லாரியில் சென்ற ரூ. 570 கோடி பணம் என்ன ஆனது, என்பதற்கு கணக்கு இல்லை.
விரலில் மை வைப்பதா?
ரூ. 500, 1000 சேமித்து வைத்துள்ள சாமானியர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர். அதோடு, பணம் எடுக்க வருபவர்களின் கையில் மை வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களை கேவலப்படுத்தும் செயலாக உள்ளது. இந்த முடிவைக் கைவிட வேண்டும்.
ஆளுநர் விசாரிப்பாரா?
தமிழக அரசு நிறுவனங்களான கூட்டுறவு அமைப்புகளின் அங்காடிகள், டாஸ்மாக் மதுபானக் கடைகள், ஆவின், போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பொதுமக்களிடம் இருந்து ரூ. 100 மற்றும் அதற்கு குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் வசூலிக்கப்படுகின்றன. ஆனால், வங்கிகளில் ரூ. 500, 1000 ஆக டெபாசிட் செய்யப்படுகின்றன. இடையில் ஆளுங்கட்சியினர் தங்களிடம் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தமிழக ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும். மேலும், தமிழக அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் வங்கி வைப்புத் தொகை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும்.
தமிழகத்தை ஆள்வது யார்?
சரக்கு மற்றும் சேவை வரி, மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய நுழைவுத் தேர்வு, உதய் மின்திட்டம் போன்றவற்றுக்கு முதல்வர் ஜெயலலிதா கடுமையான எதிர்ப்புத் தெரிவித்தார். இப்போது அவர் மருத்துவமனையில் இருக்கும் நிலையில், எதிர்ப்பு தெரிவித்த விஷயங்கள் அனைத்தையும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, தமிழக அரசை இயக்குவது யார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஸ்டாலின் கூறினார்.
எடை போடும் தேர்தல்
இப்போது நடைபெறுவது இடைத் தேர்தலாக இருந்தாலும், ஆளும்கட்சியின் நிர்வாகத் திறனை எடைபோடும் தேர்தலாக அமைய வேண்டும். அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வாக்காளர்கள் உறுதி ஏற்க வேண்டும் என்றார் ஸ்டாலின்.
நமக்கு நாமே பாணி
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக நமக்கு நாமே பயணம் மேற்கொண்ட ஸ்டாலின் மக்கள் மத்தியில் எளிதாக பழகினார். கை குலுக்குவது, செல்ஃபி எடுப்பது என இயல்பாக பழகியதால் வலிமையான எதிர்கட்சியாக அமர்ந்துள்ளது. அதே பாணியில் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின் வாக்கு சேகரித்தார்.