ரூட் தல யார்? ஆவடி பேருந்து நிலையத்தில் மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டியதால் பரபரப்பு.. மக்கள் பீதி!
ரூட் தல யார் என்பது குறித்து மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவரை ஓட ஓட விரட்டி வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
சென்னை: ரூட் தல யார் என்பது குறித்து மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் ஆவடி பேருந்து நிலையத்தில் மாநிலக் கல்லூரி மாணவரை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஓட ஓட விரட்டி வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னையில் மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் ரயில் மற்றும் பேருந்துகளில் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்கின்றனர்.
இதனால் மாணவர்களை கண்டு மக்கள் அச்சமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில் கல்லூரி மாணவர்களிடையே ஏற்பட்டு வரும் மோதலும் அதிகரித்து வருகிறது.
ரூட் தல யார்?
சென்னையில் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் இடையே மோதல் என்பது தொடர்கதையாக உள்ளது. இரு கல்லூரி மாணவர்கள் இடையே பேருந்து, மற்றும் ரயிலில் ரூட் தல யார் என்பதில் மோதல் ஏற்பட்டு வருகிறது.
மாநிலக்கல்லூரி மாணவர்
குறிப்பாக அண்மையில் ஆவடி ,பட்டாபிராம், அம்பத்தூர்,பட்டரைவாக்கம் போன்ற பகுதிகளில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில்
ஆவடி கோவர்தனகிரியை சேர்ந்த முகேஷ் என்ற 21 வயது மாணவர் மாநில கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
ஓட ஓட விரட்டு வெட்டு
இவர் நேற்று மாலை ஆவடி பேருந்து நிலையத்தில் வந்து இறங்கிய போது அங்கு இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கும்பலாக முகேஷை ஓட ஓட விரட்டி அரிவாளால் வெட்டியுள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்தவரை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
போலீஸ் வலைவீச்சு
ஆயுதங்களோடு தப்பி ஓடிய லோகேஷ் உள்ளிட்ட சில மாணவர்களை ஆவடி டேங்பேக்டரி போலீசார் தேடி வருகின்றனர். தலையில் படுகாயம் அடைந்த முகேஷ் 2017ம் ஆண்டு முகப்பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு 21 நாள் சிறையில் இருந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.