ஆட்டுத் தோல் வியாபாரி டூ நெடுஞ்சாலை கான்ட்ராக்ட் கிங்.. செய்யாதுரையின் விஸ்வரூப பின்னணி!
நெடுஞ்சாலைப் பணி ஒப்பந்த நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ உரிமையாளர் செய்யாதுரை எப்படி இந்த அளவுக்கு வளர்ந்தார்.
Recommended Video
சென்னை: தமிழக நெடுஞ்சாலை பணிகளை செய்யும் ஒப்பந்த நிறுவனம் எஸ்பிகே அண்ட் கோ நிறுவனத்தில் வருமானவரி துறை அதிகாரிகள் நேற்று முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெற்ற வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனையில் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், மூட்டை மூட்டையாக இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அடங்கிய 180 கோடி ரூபாய் பணம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
இரண்டாவது நாளாக இன்றும் செவ்வாய்க்கிழமை வருமானவரி துறை அதிகாரிகளின் சோதனை நடைபெற்றுவருகிறது.
நெடுஞ்சாலை பணி ஒப்பந்த நிறுவனம் எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருமானவரி சோதனையும் அதில் சிக்கிய பல ஆயிரம் கோடி மதிப்புள்ள கணக்கில் வராத பணமும் நகையும் சொத்தும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் வட்டாரத்தையே அதிரடித்துள்ள இந்த எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் யார் அவருடைய பின்னணி என்ன என்பது குறித்து பார்ப்போம்.
ஆட்டுத் தோல் வியாபாரம்
எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனத்தின் உரிமையாளர் செய்யாதுரை. இவருக்கு கருப்புசாமி, நாகராஜ், ஈஸ்வரன், பாலசுப்பிரமணியன் நான்கு மகன்கள் உள்ளனர். செய்யாதுரை 30 ஆண்டுகளுக்கு முன்பு ராமாநாதபுரம் மாவட்டம், மேல்முடிமன்னார் கோட்டையில் ஆடு வெட்டும் தொழிலும் ஆட்டுத் தோல் வியாபாரமும் செய்துவந்துள்ளார். நாளடைவில் நெடுஞ்சாலை துறையில் சிறு சிறு ஒப்பந்த பணிகளை எடுத்து செய்து வந்துள்ளார். படிப்படியாக வளர்ந்த அவர் கடந்த 7 ஆண்டுகளாக தமிழக நெடுஞ்சாலை துறையில் முக்கியமான ஒப்பந்த பணிகளை எடுத்து செய்கிற அளவுக்கு வளர்ந்துள்ளார்.
குடும்ப தொழில்
தொடக்கத்தில் தனது நண்பர்களுடன் சேர்ந்து எஸ்.பி. அண்ட் கோ என்ற நிறுவனத்தை தொடங்கி நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளை செய்து வந்த செய்யாதுரை பின்னர், தனது செல்வாக்கு அதிகரித்தவுடன் தனது நண்பர்களை படிப்படியாக நிறுவனத்தில் இருந்து நீக்கிவிட்டு எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தை தொடங்கினார்.
நாகராஜின் முக்கிய பங்கு
சென்னையில் உள்ள எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் அலுவலகத்தை அவரது 2வது மகன் நாகராஜ் கவனித்து வருகிறார். எஸ்.பி.கே அண்ட் கோ நிறுவனத்தின் கீழ் கிரஷர்கள், குவாரிகள், ஸ்பின்னிங் மில் என பல்வேறு துணை நிறுவனங்கள் நடத்தி வருகிறது. இவற்றை செய்யாதுரை மகன்கள் கவனித்து வருகின்றனர். இதில் செய்யாதுரையின் இரண்டாவது மகன் நாகராஜ் தான், தமிழக நெடுஞ்சாலை துறையில் உள்ள அனைத்து ஒப்பந்த பணிகளையும் கவனித்து வருகிறார்.
வருமான மறைப்பு
கடந்த 7 ஆண்டுகளில் தமிழ்நாடு நெடுஞ்சாலை துறையில் முக்கியமான பெரிய ஒப்பந்தங்கள் எல்லாவற்றையும் எஸ்.பி.கே நிறுவனமே பெற்றுள்ளது. இதன் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய்களை அந்த நிறுவனம் சம்பாதித்துள்ளது. இப்படி லாபம் ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு உரிய வரியை செலுத்தாமல் அந்த நிறுவனம் பல நூறு கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்துள்ளது. இதனை கண்காணித்த வருமானவரி துறை அதிரடி சோதனையில் இறங்கியுள்ளது.
வருமான வரித்துறை சோதனை
இந்த சோதனையில்தான் 180 கோடி ரூபாய் பணம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், செய்யாதுரையின் எஸ்.பி.கே. அண்ட் கோ நிறுவனத்துக்கு சொந்தமான 30 க்கும் மேற்பட்ட இடங்களில் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் மேலும், சொத்து ஆவணங்கள் பணம் பறிமுதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.