முரட்டு மீசைக்காரன்.. யார் இந்த வீரப்பன்?
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் வீரப்பனை பலரும் திரும்பி பார்க்க தொடங்கியுள்ளனர்.
Recommended Video
கோபிச்செட்டிப்பாளையம்: கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ள நிலையில் வீரப்பனை பலரும் திரும்பி பார்க்க தொடங்கியுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாளவாடியை அடுத்த தொட்டகாஜனூரில் உள்ள பண்ணை வீட்டில் 2000 ஆம் ஆண்டு ஜூலை 30-ம் தேதி இரவு தனது மனைவி பர்வதம்மாளுடன் ராஜ்குமார் தங்கியிருந்தபோது, வீரப்பன் மற்றும் அவரது கூட்டாளிகளால் கடத்தப்பட்டார்.
இதுதொடர்பாக தாளவாடி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இவ்வழக்கு கோவை சிபிசிஐடி போலீஸாருக்கு மாற்றப்பட்டது. தூதுவர்கள் மூலம் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து 108 நாட்களுக்கு பிறகு நடிகர் ராஜ்குமாரை, வீரப்பன் விடுவித்தார்.
பலர் மரணம்
இந்த வழக்கில், வீரப்பன், அவருடைய நண்பர்கள் சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா, மல்லு, மாறன், கோவிந்த ராஜ் என்கிற இனியன், அன்றில் என்கிற ஏழுமலை, செல்வம் என்கிற சத்தியா, அமிர்தலிங்கம், பசுவண்ணா, நாகராஜ், புட்டுசாமி, கல் மண்டிராமா, ரமேஷ் ஆகிய 14 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர். இதில் வீரப்பன், சேத்துக்குளி கோவிந்தன், சந்திர கவுடா ஆகியோர் போலீஸாரால் என்கவுன்டர் செய்யப்பட்டனர். மல்லு என்பவர் இறந்து விட்டார். ரமேஷ் தலைமறைவாக உள்ளார்.
[உடும்புத் தைலத்தை முழங்காலில் தேய்த்து.. ராஜ்குமார் மூட்டுவலியை சரி செய்த வீரப்பன்! ]
அனைவரும் விடுதலை
இவ்வழக்கின் விசாரணை கோபி கூடுதல் மாவட்ட 3-வது அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 18 வருடமாக நடைபெற்ற நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குழந்தைக்கும் தெரியும்
2000ஆம் ஆண்டில் தென்னிந்தியாவையே உலுக்கியது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் சம்பவம். 1980, 90ஆம் ஆண்டுகளில் வீரப்பன் யார் என்று கேட்டால் சின்னக்குழந்தையும் பளிச்சென்று சொல்லும் பெரிய மீசை வைத்திருப்பார், காட்டில் இருப்பார் என்று. ஒல்லியான தேகத்தையும் கம்பீர முரட்டு மீசையையும் தனக்கு அடையாளமாக கொண்டிருந்தார் வீரப்பன்.
மலையூர் மம்மட்டியான் நட்பு
வீரப்பன் 1952 ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி கோபிநத்தம் என்னும் கிராமத்தில் பிறந்தார். மலையூர் மம்பட்டியான் என்ற கைதேர்ந்த கொள்ளையனின் செயல்களால் ஈர்க்கப்பட்டார். மம்பட்டியான் இரு கொள்ளை கும்பல்களுக்கு இடையே நடந்த சண்டையில் கொல்லப்பட்டார். மம்பட்டியானை கொன்றவரின் சகோதரனை கொன்றதே வீரப்பன் செய்த முதல் கொலையாகும்.
சவாலாக இருந்த வீரப்பன்
தந்தங்களுக்காக யானைகளைக் கொன்றவர். சந்தனக்கட்டை கடத்தல் செய்தவர். சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் மறைந்து வாழ்ந்தார். பல வருடங்களாக வீரப்பன் தமிழக, கர்நாடக, கேரளா அரசுகளுக்கு பெரும் சவாலாக விளங்கினார்.
பதினேழு வயதில் முதல் கொலை
வீரப்பனுக்கு முத்துலெட்சுமி என்ற மனைவியும் இரு மகள்களும் உள்ளனர். 1972-ஆம் ஆன்று முதன்முறையாக வீரப்பன் கைது செய்யப்பட்டார். சந்தனமரம் கடத்தல் மற்றும் யானைகளை கொன்று அதன் தந்தங்களை கடத்தல் போன்ற சம்பவங்களை ஆரம்ப நாட்களில் வீரப்பன் செய்து வந்தார். பிறகு, தன் குற்றங்களில் குறுக்கிடுபவர்களையும் கொல்ல ஆரம்பித்தார். பதினேழு வயதில் தனது முதல் கொலையை செய்தார் வீரப்பன்.
நக்கீரன் கோபால்
காவலர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் துப்பு கொடுப்பவர்கள் வீரப்பனால் கொல்லப்பட்டவர்கள் பட்டியலில் அடங்குவர். 1987 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் இருந்த சிதம்பரம் எனும் வனத்துறை அதிகாரியை கடத்தி கொன்றார். இந்த கொலை சம்பவம் மூலம் இந்திய அரசின் கவனம் அவர் பக்கம் முதன்முதலாக திரும்பியது. நக்கீரன் ஆசிரியர் கோபால் பல முறை வீரப்பனை நேரடியாக சந்தித்து அவருக்கு தூதுவராக இருந்தார்.
கொல்லப்பட்ட வீரப்பன்
2004 ஆம் ஆண்டு அக்டோபர் 18ஆம் தேதி விஜயகுமார் தலைமையிலான தமிழ்நாடு சிறப்புக் காவல்படையினரால் கொல்லப்பட்டார் வீரப்பன். வீரப்பனை சுட்டுக் கொன்றார்களா அல்லது கொன்று விட்டு சுட்டார்களா என்பது இதுவரை மர்மமாகவே உள்ளது. மோரில் விஷம் கலந்து வீரப்பனை குடிக்க வைத்து விட்டுத்தான் சுட்டார்கள் என்ற தகவலும் அப்போது றெக்கை கட்டி பறந்ததை மறுக்கவும் முடியாது, மறைக்கவும் முடியாது.