கொடநாடு மர்மம்: கொலை, கொள்ளையில் கைதானவர்களின் கைரேகை ஒத்துப்போகலையாம்!
கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் சிலரின் கைரேகை ஒத்துப்போகவில்லையாம்.
சென்னை: கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்ட சிலரின் கைரேகைகள் பங்களாவில் இருந்த கைரேயுடன் ஒத்துப்போகவில்லையாம். இதனால் கொலை வழக்கில் சிக்கியவர்கள் கூலிப்படையினர் மட்டுமே என்றும் முக்கிய குற்றவாளிகள் வெளியில் உலாவி வருகின்றனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தில், 900 ஏக்கரில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில், மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது.
பாதுகாப்புகள் நிறைந்த இந்த பங்களாவில் கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி 10 ஆம் எண் கேட் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஓம் பகதூர், மர்ம நபர்களால் கொலைசெய்யப்பட்டார்.
மற்றொரு காவலாளி கிருஷ்ண பகதூரைத் தாக்கிய மர்ம கும்பல், எஸ்டேட்டில் உள்ள பங்களாவுக்குள் புகுந்த தங்கம், வைர நகைகள், பணம் மற்றும் ஆவணங்களைக் கொள்ளையடித்துச் சென்றது.
கனகராஜ் மர்ம மரணம்
கொடநாடு பங்களா கொலை, கொள்ளை வழக்கில் முக்கிய நபராக, தனிப்படை போலீஸாரால் சந்தேகிக்கப்பட்டவர், கனகராஜ். இவர், போயஸ்கார்டன் முன்னாள் கார் டிரைவர். இவர் கொலை நடந்த சில தினங்களில் ஆத்தூரை அடுத்த சந்தனகிரி தேசிய நெடுஞ்சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார் மோதி உயிரிழந்தார்.
10 பேர் கைது
கனகராஜின் நண்பரும் முக்கிய குற்றவாளியுமான சாயன் சாலை விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அவர் உடல்நலம் தேறிய பின்னர் கைது செய்யப்பட்டார். இதுவரை இந்த கொலை, கொள்ளை வழக்கில் 10 பேர்வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொள்ளைக்கு காரணம்
கொடநாடு பங்களாவில் கொட்டிக்கிடக்கும் நகைகள், பணத்தையும், ஆவணங்களையும் கொள்ளையடிக்கத்தான் மர்ம கும்பல் உள்ளே நுழைந்தது உறுதியாகியுள்ளது. அதே நேரத்தில் கூலிப்படையினரை மட்டும் கைது செய்து விட்டு முக்கிய குற்றவாளிகளை தப்ப விட்டு விடுவார்களோ என்ற சந்தேகம் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.
ஒத்துப்போகாத கைரேகை
பங்களாவில் கைப்பற்றப்பட்ட கைரேகையுடன், கைது செய்யப்பட்டவர்களின் கைரேகையை ஒப்பிட்டு பார்த்த போது சிலரின் கைரேகைகளை ஒத்துப்போகவில்லையாம். அப்படி எனில் அந்த கைரேகைகள் யாருக்கு சொந்தமானவை என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
கிரிமினல்கள் யார்
கேரளாவில் முத்தூட் பைனான்ஸ் நிறுவனர் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள்தான் இந்த கொலை வழக்கிலும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்று நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சந்தேகம் கிளப்புகின்றனர். கொடநாடு வழக்கில் அத்தனை குற்றவாளிகளையும் கைது செய்து விட்டோம், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்போகிறோம் என்று போலீசார் கூறினாலும் முக்கிய குற்றவாளிகள் இன்னமும் வெளியில்தான் இருக்கிறார்கள் என்கின்றனர்.
கைது செய்வது எப்போது
கொலை வழக்கில் முக்கிய குற்றவாளிகளை தப்பவிட பார்க்கிறார்களா? என்று கேள்வி எழுப்புவர்கள் எதையாவது சொல்லக்கூடாது என்பது போலீசின் வாதமாக உள்ளது. எங்களின் விசாரணையும் கைது நடவடிக்கையும் சரியான பாதையில் செல்கிறது என்றே கூறி வரும் போலீசார் கொடநாடு பங்களாவில் நடந்த மர்ம முடிச்சுகளை விரைவில் அவிழ்த்தால் சரிதான் என்பது அதிமுகவின் கோரிக்கையாகும்.