அரவக்குறிச்சியில் யாருக்கு லக்?: செந்தில் பாலாஜியா? செந்தில் நாதனா?
சென்னை: அரவக்குறிச்சி தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படலாம் என்று தகவல் வெளியானதில் இருந்தே அதிமுக வேட்பாளர் யார் என்பதில் பரபரப்பு பற்றிக்கொண்டுள்ளது.
சட்டசபை தேர்தலின் போது அரவக்குறிச்சி தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செந்தில் பாலாஜிதான் மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்படும் நிலையில் முன்னாள் வேட்பாளரான செந்தில்நாதன் பெயரும் அடிபடுகிறது.
கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சரான செந்தில்பாலாஜி திடீரென ஒரு நாள் அமைச்சர் பதவி, கட்சிப்பதவியை பறிகொடுத்தார். என்ன காரணத்துக்காக செந்தில்பாலாஜி டம்மியாக்கப்பட்டார் என்பதுபற்றி யாரும் வாய் திறக்கவே இல்லை.
செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருந்தவர்களும் பதவி பறிக்கப்பட்டனர்.
அரவக்குறிச்சி
செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை அவ்வளவுதான் என்று கூறப்பட்ட நிலையில் யாரும் எதிர்பார்க்காமல் மீண்டும் செந்தில்பாலாஜிக்கு வாய்ப்பு தேடிவந்தது. அவர், அரவக்குறிச்சி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். பணப்பட்டுவாடா விவகாரத்தில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.
செந்தில்பாலாஜிக்கு பல சிக்கல் வந்தது. பணமோசடி புகார்கள் வரிசை கட்டி நின்றன. இதனையடுத்து அவருக்கு மீண்டும் அரவக்குறிச்சி கிடைக்காது என ஒரு தரப்பும், கிடைக்கும் என ஒரு தரப்பும் சொல்ல ஆரம்பித்தனர்.
செந்தில் பாலாஜி
இளவரசியின் மகன் விவேக் திருமண வரவேற்பு நிகழ்ச்சி தஞ்சையில் நடந்தபோது அங்கே சென்று, சசிகலாவுடன் பேசினார் செந்தில்பாலாஜி. மோசடி புகாரில் இருந்தும் செந்தில் பாலாஜி விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து செந்தில் பாலாஜிதான் அரவக்குறிச்சிக்கு வேட்பாளர் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வந்தனர்.
பரபரப்பான தொகுதி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதி 1952ல் உருவாக்கப் பட்டது. 1991ல் அதிக வேட்பாளர்கள் போட்டியிட்டதால் இத்தொகுதி பிரபலமானது. தமிழகத்தில் பெரிய தொகுதியான அரவக்குறிச்சி, 2011 தேர்தலுக்கு முன் மறுசீரமைப்பு செய்யப்பட்டது. 2011 தேர்தலில் இத்தொகுதியில் திமுக சார்பில் கே.சி.பழனிசாமி, அதிமுக சார்பில் வி.வி.செந்தில் நாதன் போட்டியிட்டனர்.
கவனம் ஈர்த்த தொகுதி
கடந்த 2011 சட்டசபை தேர்தலில் கரூர் மாவட்டத்தில் உள்ள மற்ற 3 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்ற நிலையில், அரவக்குறிச்சியில் கே.சி.பழனிசாமி வென்றார்.
2016 சட்டசபை தேர்தலின் போது திமுக-காங்கிரஸ் கூட்டணியில் அரவக்குறிச்சி தொகுதி திமுகவுக்கு ஒதுக்கப்பட்டது வேட்பாளராக கே.சி. பழனிச்சாமி மீண்டும் அறிவிக்கப்பட்டார். அதிமுக வேட்பாளராக, செந்தில்பாலாஜி அறிவிக்கப்பட்டதும், இத்தொகுதி அனைவரின் கவனம் ஈர்க்கும் தொகுதியானது.
தேர்தல் ரத்து
இத்தொகுதி வாக்காளர்களிடமும் பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. திமுக தரப்பில் மேலும் ரூ.1,000 அல்லது ரூ.1,500 வழங்கப்படலாம் என்றும், அதைக் காட்டிலும் இரு மடங்கு வழங்க அதிமுக தரப்பு தயாராக உள்ளதாகவும் தகவல்கள் பரவின. வாக்காளர்களுக்கு பணம் வழங்குவது தொடர்பாக அதிக புகார்கள் வந்ததால், அரவக்குறிச்சி தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் ரத்து செய்யப்பட்டது.
யாருக்கு அதிர்ஷ்டம்?
அரவக்குறிச்சி தொகுதியில் விரைவில் தேர்தல் அறிவிக்கப்பட உள்ள நிலையில் முன்பு அதிமுக வேட்பளாராக போட்டியிட்டுத் தோல்வியடைந்த செந்தில்நாதன் பெயரும் பலமாக அடிபடத் தொடங்கியிருக்கிறது. இதுதவிர, போட்டியில் சிலர் இருந்தாலும் முதல்வர் மருத்துவமனையில் இருக்கும்போது புதிதாக ஒரு வேட்பாளரை அறிவித்தால் அதில் சிக்கல் வரும் என நினைக்கிறார் சசிகலா.
மீண்டும் பரபரப்பு
ஏற்கனவே அங்கு வேட்பாளராக நிறுத்தப்பட்ட செந்தில்பாலாஜி அல்லது முன்னாள் வேட்பாளரான செந்தில்நாதன் இருவரில் ஒருவருக்குத்தான் வாய்ப்பு இருக்கும் என்கிறார்கள். அதிமுக வேட்பாளர் யாராக இருந்தாலும் திமுக வேட்பாளர் யார் என்பதைப் பொறுத்தே பரபரப்பு பட்டையை கிளப்பும், பணப்பட்டுவாடாவும் இருக்கும் என்கின்றனர் வாக்காளர்கள்.