புரோக்கராக மாறிய பேராசிரியை.. மதுரை பல்கலையில் ஒளிந்திருக்கும் கருப்பு ஆடு... அதிர்ச்சியில் பெற்றோர்
புரோக்கராகவே மாறி அருப்புக்கோட்டை பேராசிரியையின் பேச்சு கல்வித் துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
விருதுநகர்: அருப்புக்கோட்டையில் பேராசிரியை நிர்மலா தேவி , மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிக்காக மாணவிகளை படுக்கைக்கு அனுப்ப அவர்களை மூளைச் சலவை செய்யும் ஆடியோ காட்சிகளால் பெற்றோர் மனதில் நெருப்பை அள்ளி கொட்டியது போல் உள்ளது.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியின் கணிதத் துறை பேராசிரியை நிர்மலா தேவி. இவர் கல்லூரி மாணவர்கள் 4 பேருக்கு போன் செய்து அவர்களை மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளின் படுக்கையை பகிர்ந்து கொள்ளுமாறு மறைமுகமாக அழைக்கிறார்.
அதற்கு அந்த மாணவிகள் அதுகுறித்து மீண்டும் பேச வேண்டாம் என மறுப்பு தெரிவிக்கின்றனர். எனினும் அடங்காமல் அவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் செயலில் தள்ளுவதற்காக கேப் விடாமல் 19 நிமிடங்கள் பேசும் ஆடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
பெரும் பரபரப்பு
இந்த ஆடியோ இன்று காலை வெளியான முதல் கல்வித் துறையில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. பொதுவாக பள்ளி, கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியரோ, பேராசிரியரோ அல்லது கல்லூரி முதல்வரோ இதுபோன்ற பாலியல் சீண்டல் காரியங்களில் ஈடுபடுவதை படித்திருக்கிறோம். ஆனால் ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஒரு பேராசிரியையே பெண்களை இப்படி மாபாதக செயலில் ஈடுபடுத்த வற்புறுத்தும் செயலால் அனைவரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அதிர்ச்சியில் பெற்றோர்
மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையில் கடவுளுக்கு ஒரு படி மேலே இருப்பவர்கள் ஆசிரியர்கள்தான். கல்வியுடன் ஒழுக்கத்தை போதிக்கும் அவர்களால் மட்டுமே ஒரு சிறந்த மாணவ சமுதாயத்தை உருவாக்க முடியும். அத்தகைய உயர்ந்த ஸ்தானத்தில் இருக்கும் பேராசிரியை நிர்மலா போன்றோர் தன் மகள் வயதில் இருக்கும் மாணவிகளிடம் இதுபோன்று ஆசை வார்த்தைக் கூறி பாலியல் தொழிலுக்கு அழைப்பது பெற்றோரிடையே அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. வயிற்றை கட்டி வாயை கட்டி சிறுக சிறுக சேர்த்து வைத்து கல்லூரி கட்டணத்தை கட்டி படிக்க வைத்தால் இந்த ஆசிரியை இதுபோல் கேடு கெட்ட செயலில் இறங்கியுள்ளது வேதனையை தருகிறது.
மதுரை பல்கலை
இதுபோல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்த கணபதி முறைகேடு செய்து சிறையில் அடைக்கப்பட்டு தற்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஓரிருவர் செய்யும் தவறுகளால் பாரம்பரியமான பல்கலைக்கழகங்களின் அருமை பெருமைகளை உணர்ந்தோர் மனம் வருந்தியுள்ளனர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் மிகவும் பிரபலமான ஒன்றாகும். படுக்கைக்கு அழைத்தவர் இந்த பல்கலைக்கழகத்தில் உள்ள உயரதிகாரி , மிகப் பெரிய அதிகாரி என்று நிர்மலா அடிக்கடி அந்த ஆடியோவில் கூறியுள்ளார்.
காமவெறி கூட்டம்
இவர் சொல்வதை பார்த்தால் அந்த பல்கலைக்கழகத்தில் காமவெறி பிடித்த ஒரு கருப்பு ஆட்டுக் கூட்டமே இருக்கும் போல் தெரிகிறது. அந்த நபர்கள் யார் என்ற விவரத்தை நிர்மலா தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வெளிக்கொண்டு வருவது போலீஸார் மற்றும் அரசின் கடமையாகும். இதுகுறித்து முறையான விசாரணை நடத்தினால் அத்தனை உண்மைகளும் அம்பலமாகி எதிர்காலத்தில் இதுபோன்றவர்களின் காம இச்சையில் சிக்கி யாரும் பாதிக்கப்படாமல் இருப்பர். மாணவிகளிடம் பேராசிரியை நிர்மலா படுக்கைக்கு அழைப்பது குறித்து நேரடியாக பேசாவிட்டாலும் அவர் எந்த நோக்கத்தில் பேசினார் என்பது பச்சை குழந்தைக்கும் தெரியும். ஆனால் இவரோ தான் பேசியது திரித்துக் கூறப்பட்டுவிட்டதாக கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளது வேடிக்கையாக உள்ளது.
மாணவிகளுக்கு பாராட்டு
பேராசிரியை பேசுவதை பார்த்தால் இவர் நீண்ட காலமாக இது போன்று பெண்களை உயரதிகாரிகளுக்கு சப்ளை செய்யும் வேலையை செய்து வருவதுபோல் தெரிகிறது. இவர் என்னதான் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் பேசினாலும் மதிப்பெண், காசுக்கு ஆசைப்படாமல் ஆசிரியையை மாணவிகள் எதிர்த்து பேசியுள்ளனர். அத்துடன் தைரியமாக கல்லூரி நிர்வாகத்திடம் புகாரையும் அளித்துள்ள இவர்கள் பாராட்டுக்குரியவர்களே... இது போல் தோண்ட தோண்ட எத்தனை பல்கலைக்கழகங்களிலிருந்து எத்தனை பூதங்கள் கிளம்புமோ தெரியவில்லை.