முதல்வர் யார்? அதிமுகவில் ஜல்லிக்கட்டு நடக்கிறது.. துரைமுருகன் கிண்டல்
திமுக ஆட்சியில் கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றதாக அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருவள்ளூர்: அ.தி.மு.க.வில் முதல்வர் யார்? என்பது குறித்தே ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது என திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியில் தி.மு.க. சார்பில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசியதாவது: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தமிழக முதல்வரோ, அமைச்சர்களோ டெல்லி சென்று மத்திய அரசை அணுகவில்லை.
தமிழக அமைச்சர்கள் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அ.தி.மு.க.வில் முதல்வர் யார்? என்பது குறித்தே ஜல்லிக்கட்டு நடந்து வருகிறது. முதல்வர் யார்? என்பது வருகிற 23-ந் தேதிக்கு பிறகுதான் தெரியும்.
தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜல்லிக்கட்டுக்கு தடை இருந்த போதும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு ஜல்லிக்கட்டு நடத்த வழிவகை செய்தோம். ஜல்லிக்கட்டு வழக்கில் அரசு, நீதிமன்றத்தில் வழங்கிய பிரமாண பத்திரத்தில் ஜல்லிக்கட்டை கலாசார பண்பாட்டு விளையாட்டு என்று குறிப்பிடாமல் மதம் சார்ந்த விளையாட்டு என்று தவறுதலாக தெரிவித்து உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.