கவலைக்கிடமான ஜெ.... அதிகாரத்துக்காக அடித்துக் கொள்ளும் மத்திய அரசு- சசிகலா கோஷ்டி!
இடைக்கால முதல்வர் யார் என்பதில் சசிகலா தரப்பும் மத்திய அரசும் முரண்பட்டு நிற்கின்றன.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இடைக்கால முதல்வராக யாரை நியமிக்கலாம் என்பது குறித்த தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற முதல்வர் ஜெயலலிதாவுக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இடைக்கால முதல்வர்...
ஜெயலலிதாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதால் இடைக்கால முதல்வர் ஒருவரை நியமிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு அதிமுகவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள சசிகலா தரப்பும் ஒப்புக் கொண்டது.
மத்திய அரசின் சாய்ஸ்
ஆனால் இடைக்கால முதல்வர் யார் என்பதில் இருதரப்புக்கும் இடையே மல்லுக்கட்டு தொடர் கதையாகி வருகிறது. மத்திய அரசைப் பொறுத்தவரை ஓபிஎஸ்-ஸே இடைக்கால முதல்வராக நீடிக்கட்டும் அல்லது புதியதாக ஒருவரை நியமித்தால் தம்பிதுரை எம்.பியை நியமியுங்கள் என்கிறதாம்.
சசிகலா தரப்பு முன்னுரிமை
இதை ஏற்க மறுத்து வரும் சசிகலா தரப்போ, தாமோ தம்முடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ அல்லது தாங்கள் சுட்டிக்காட்டுகிற அமைச்சர் எடப்படி பழனிச்சாமியைத்தான் இடைக்கால முதல்வராக்கப்படுவார் என கூறி வருகிறதாம். இது தொடர்பாகத்தான் நேற்று மாலை முதல் விடிய விடிய பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றனவாம்.
தமிழகமே தத்தளிக்க...
இந்த பஞ்சாயத்து நடந்து கொண்டிருந்த நேற்றைய இரவுப் பொழுது முழுவதுமே ஜெயலலிதாவின் உடல்நிலை என்னவானதோ என்ற தவிப்பில் தமிழகமே தத்தளித்துக் கொண்டிருந்தது. ஆனால் இப்படி சம்பந்தப்பட்ட நபர்களோ அதிகாரம் யாருக்கு என பஞ்சாயத்து பேசிக் கொண்டிருந்த கொடுமையும் அரங்கேறியுள்ளது.
எந்நேரமும் அறிவிப்பு
இன்று நடைபெற்ற அதிமுகவின் எம்.எல்ஏக்கள் கூட்டத்திலும் கூட இந்த விவாகரம் விவாதிக்கப்பட்டிருக்கிறது. இக்கூட்டத்தில் ஜெயலலிதாவின் உடல்நிலை கவலைக்கிடம் என தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கும் பகிரங்கமாக ஜெயலலிதா உடல்நிலை கவலைக்கிடமாகிவிட்டது என கூறிவிட்டது அப்பல்லோ மருத்துவமனை. மேலும் எந்த நேரமும் இடைக்கால முதல்வர் யார் என அறிவிக்கப்படலாம் எனவும் எம்எல்ஏக்களிடம் சொல்லப்பட்டுள்ளதாம்.
ஓபிஎஸ் தலைமையில்...
அத்துடன் மத்திய அரசின் மல்லுக்கட்டு தொடர்பாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்தே தற்போது மத்திய அரசுடன் பெரிய அளவு மோத வேண்டாம் என முடிவெடுத்து ஓபிஎஸ் தலைமையில் அனைவரும் செயல்படுங்கள் என சுமூகமாக அறிவுறுத்தியுள்ளார்களாம். ஆனாலும் நீருபூத்த நெருப்பாகவே இம்மோதல் இருக்கும் என்றே தெரிகிறது.