தலைவர், பொருளாளரை விடுங்க.. திமுகவின் அடுத்த தலைமை நிலைய முதன்மை செயலாளர் யார்?
திமுகவின் அடுத்த முதன்மை செயலாளர் யார் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.
Recommended Video
சென்னை: ஸ்டாலின் தலைவர், துரைமுருகன் பொருளாளர் என பொறுப்புகள் கொடுத்து முடித்தாயிற்று. ஆனால், திமுகவின் அடுத்த தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவி என்ன ஆனது?
திமுகவை பொறுத்தவரை தலைவர் பதவிக்கு அடுத்த பெரிய பொறுப்பு பொதுச் செயலாளர்தான். கட்சியின் அனைத்து முக்கிய முடிவுகளை எடுப்பவர்களே செயலாளர்தான். ஆனால், அந்த பொறுப்பை வகித்து வரும் பேராசிரியர் அன்பழகனால் வயது மூப்பு காரணமாக சில வருடங்களாக திறம்பட செயல்பட முடியாமல் போனது. இதையடுத்து, செயலாளருக்கு அடுத்தபடியாக இருந்து அந்த பணிகளை நிர்வகிப்பதற்காக 2015 ஆம் ஆண்டு திமுகவில் உருவாக்கப்பட்ட புதிய பதவிதான் தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவி.
இன்னும் சொல்லப்போனால், எப்படி செயல்தலைவர் பதவி ஸ்டாலினுக்காகவே உருவாக்கப்பட்டதோ அதேபோல துரைமுருகனுக்காகவே உருவாக்கப்பட்டதுதான் முதன்மை செயலாளர் பதவி. இப்படி ஒரு பதவியை 9.1.2015-ல் உருவாக்கி அதனை துரைமுருகனிடம் வழங்கியது கருணாநிதிதான். துரைமுருகனும் அதை சரியாக நிர்வகித்து வந்தார் என்றே சொல்ல வேண்டும்.
துரைமுருகனே கவனிக்கிறாரா?
திமுக தலைவராக ஸ்டாலின் பொறுப்பேற்று கொண்டதையடுத்து செயல்தலைவர் பதவி தேவையில்லை என முடிவு செய்யப்பட்டுவிட்டது. இதேபோன்று பொருளாளராக துரைமுருகன் பொறுப்பேற்றுக் கொண்டபின் அந்த முதன்மை செயலாளர் பொறுப்பில் நீடிப்பது யார்? முதன்மை செயலாளர் பொறுப்பையும் சேர்த்து துரைமுருகனே கவனிக்கிறாரா? அல்லது பொருளாளர் பொறுப்பை மட்டும் கவனிக்கிறாரா?
அன்பழகன் கவனிப்பாரா?
அப்படி அவர் பொருளாளராக மட்டுமே செயல்படுவாரேயானால், முதன்மை செயலாளர் பதவியை அலங்கரிக்க போவது யார்? துரைமுருகனுக்காகத்தான் உருவாக்கப்பட்ட துறை என்பதால், தற்போது இந்த பதவி வேண்டாம் என முடிவு செய்யப்பட்டுவிடுமா? அல்லது பொதுச்செயலாளர் அன்பழகனே கட்சியை கவனிப்பாரா? அப்படி கவனிக்கும் அளவுக்கு அவருக்கு உடல்நிலை ஒத்துழைக்குமா? அல்லது இந்த பதவிக்கு வேறு யாரேனும் பொறுப்பில் அமர வைக்கப்படுவார்களா?
2 பேர் பெயர்கள்
அப்படி அமர வைக்கப்பட்டால் அது யாராக இருக்கும்? முதன்மை செயலாளர் பதவி என்பது பொருளாளருக்கு மேலான பதவி. அதனால் நிச்சயம் துரைமுருகன் அளவுக்கு ஈடாகவோ அல்லது மேலும் அனுபவம் வாய்ந்தவராகவோ இருக்கும் ஒருவருக்குத்தான் இந்த பதவியை அளிக்க முடியும். அப்படி யார் இருக்கிறார்கள் என்று திமுக வட்டாரத்தில் விசாரித்தால் 2 பேர் பெயர்கள் அடிபடுகிறது. ஒருவர் டி.ஆர்.பாலு, மற்றொருவர் எ.வ.வேலு.
வேலுவா? பாலுவா?
இதில் டி.ஆர்.பாலுவை பொறுத்தவரை, அரசியல் அனுபவம் நிறைய உள்ளது. ஆனால், அவருக்கு கட்சியில் ஆதரவும் கட்சியின் உயர்மட்ட தரப்பில் ஆதரவும் செல்வாக்கும் இருக்கிறதா என்பது சந்தேகமே. மற்றொருவர் எ.வ.வேலு. இவருக்கு அனைத்து தரப்பிலுமே நிறைய செல்வாக்கு உள்ளது. கருணாநிதி, மு.க.ஸ்டாலினுக்குப் பிறகு அறிவாலயத்தில் செல்வாக்கு செலுத்துபவர். திமுக பொருளாளர் பதவிக்கான போட்டியில் எ.வ.வேலுவின் பெயர்தான் துரைமுருகனுக்கு இணையாக பரிசீலனை செய்யப்பட்டது. அந்த வகையில், தன்னைவிட அனுபவம் குறைந்த எ.வ.வேலுவை திமுகவின் தலைமை நிலைய முதன்மை செயலாளர் பதவியில் அமரவைத்தால் அதற்கு துரைமுருகன் சம்மதிப்பாரா என்று தெரியாது.
கள்ளச்சாராயம்
அதே நேரத்தில் எ.வ.வேலு திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் ஆவதற்கு திமுகவில் உள்ள அவரது எதிர்ப்பாளர்கள் குழு மறைமுகமாக வேலை செய்துவருகிறது. எ.வ.வேலு திமுகவில் சேர்வதற்கு முன்பு அவர் அதிமுகவில் இருந்தவர். அதிமுகவில் இருந்தபோது, திமுகதான் கள்ளச்சாராயத்தை அறிமுகப்படுத்தியது என்று அவர் பேசியதை இப்போது அவருடைய எதிர்ப்பாளர்கள் திமுக தலைமைக்கு நினைவுபடுத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் திமுகவைப் பற்றி இப்படி பேசிய எ.வ.வேலுவுக்கு எப்படி திமுக என்ற மாபெரும் கட்சிக்கு தலைமை நிலைய முதன்மை செயலாளர் என்ற பெரிய பதவியை வழங்கலாம் என்றும் கேள்வி எழுப்பிவருகின்றனர்.
எ.வ.வேலுதானாம்
எ.வ.வேலுவுக்கு துரைமுருகனின் மறைமுக எதிர்ப்பும் அவருடைய எதிர்ப்பாளர்களும் எதிர்ப்பு தெரிவித்தாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடமும் அவரது குடும்பத்தினரிடமும் எ.வ.வேலுவுக்கு நல்ல பெயரும் செல்வாக்கும் உள்ளது. அதனால், இந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி எ.வ.வேலு திமுக தலைமை நிலைய முதன்மை செயலாளர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என்றே திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.