தமிழ்நாடு "வான்ட்ஸ் டூ நோ"... ஜெ.வின் வீடு அரசிடமா, வாரிசுகளிடமா, சசி குடும்பத்திடமா?
Recommended Video
சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி. அரசு கையகப்படுத்திவிட்டது, வாரிசுகள் வழக்கு போட்டிருக்கிறார்கள், சசிகலா குடும்பத்தினர் நிர்வகித்துவருகிறார்கள் இப்படி பல தகவல் வெளியாகிவருகிறது.
அதிகாரிகளிடம் பேசியபோது, ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்ட இல்லத்தை அரசுடமையாக்கும் பணியை அரசு தொடங்கிவிட்டது. இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமி அணிகள் இணைப்பிற்கு பிறகு வெளியிட்டார். இதுதொடர்பாக அரசு ஆணை வெளியிடப்பட்டது. ஆனால் அரசுடைமை ஆக்கும் முயற்சி இன்னும் முழுமையடையவில்லை.
ஒரு தனியார் சொத்தை, கையகப்படுத்தி, அரசுடைமையாக்கவேண்டுமானால், அச்சொத்தின் வாரிசுதாரர்களிடம் முறையான அனுமதிபெறவேண்டும். தேவைப்பட்டால், நீதிமன்ற அனுமதிபெற்று சொத்தை அரசின்பெயரில் பதிவு செய்யப்படவேண்டும். பிறகு தனியார் சொத்து வருவாய்த்துறையால் கையகப்படுத்தப்படும், பிறகு பராமரிப்பு மற்றும் நிர்வாகத்திற்கான பொதுப்பணித்துறையிடன் ஒப்படைக்கப்படும். பாதுகாப்பை உறுதி செய்தபிறகு அரசுடைமையாக்கப்பட்டு, பொதுமக்கள் பார்வைக்கு திறக்கப்படும்.
அறிவிப்பு வெளியிட்ட அரசு
ஆனால், போயஸ் தோட்டத்தில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டை அரசு உடைமையாக்கப்போவதாக அறிவிப்பு வெளியிட்டாலும், இன்னும் இந்த பணிகள் முடிவுக்கு வரவில்லை. இதனால் இன்னும் அரசு கையகப்படுத்தவில்லை.
முழுமையடையவில்லை
வாரிசுகளாக கருதப்படும் ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், மகள் தீபாவுக்கு வேதா இல்லத்தில் உரிமை உள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், இருவரும் வாரிசுகள் என்பதை உரிமைகோர வருவாய்த்துறையினரிடம் இருந்து வாரிசு சான்றிதழ் பெறவேண்டும். நீதிமன்றம் சென்று வாரிசு சான்றிதழ் பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், இவர்களின் முயற்சியும் முழுமையடையவில்லை.
சசி குடும்ப கட்டுப்பாட்டிலேயே
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதும், அவரின் மறைவுக்குப்பிறகும் வேதா இல்லம் தொடர்ந்து சசிகலா வசித்துவந்தார், நிர்வகித்துவந்தார். சசிகலா சிறை சென்ற பிறகு, சசிகலா சார்பில் இளவரசியின் மகன் விவேக் நிர்வகித்து வருகிறார். வேதா இல்லத்திற்கான வரி செலுத்துதல், மின்கட்டணம் செலுத்துதல் என அடிப்படையான பராமரிப்புகளை விவேக் மற்றும் குடும்பத்தார் கவனித்துவருகிறார்கள். எனவே, வேதா இல்லம் இதுவரைக்கும் சசிகலாவின் குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது.
சோதனைக்கு ஆணை தேவையில்லை
தனியார் கட்டுபாட்டில் உள்ள சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனையிட வருமானவரித்துறைக்கு முழு அதிகாரம் உள்ளது என்கிறார்கள் அதிகாரிகள். வேதா இல்லம் யாருடையது என்ற கேள்விக்கு நீதிமன்றம்தான் பதில் செல்லவேண்டும். ஆனால், அதிகாரிகள் சோதனை நடத்த நீதிமன்ற ஆணை தேவையில்லை என்பதே நிதர்சனம்.