யார் இந்த புல்லட்?.. அடுத்தடுத்து கொலை மிரட்டல்.. அதிரும் போலீஸ்!.. ஆச்சரியத்தில் மக்கள்!!
சென்னை: காவல் துறை அதிகாரிகளையே போன் மூலம் கொலை மிரட்டல் விடுக்கும் புல்லட் நாகராஜனை பிடிப்பது போலீஸாருக்கு சவாலாக மாறியுள்ளது.
கொலை, கொள்ளை, வழிபறி, ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடையோரை போலீஸார் கைது செய்து வருகின்றனர். அவ்வாறு கைது செய்யும் சிலருக்கு ஆதரவாக அந்த கும்பலின் தலைவன் போலீஸ் அதிகாரிகளை போன் மூலம் மிரட்டும் சம்பவங்கள் நடந்து கொண்டே வருகின்றன.
இந்த நிலையில் புல்லட் நாகராஜன் என்பவர் பெண் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ள ஆடியோ தற்போது வைரலாகி உள்ளது.
கலக்கத்தில் போலீஸ்
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்களத்தை சேர்ந்தவர் புல்லட் நாகராஜன். பிரபல ரவுடியான இவர் மீது கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வழிபறி என ஏராளமான வழக்குகள் உள்ளன. இவரது அண்ணன் 2006-இல் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பெண் மருத்துவரிடம் அத்துமீறி நடந்ததாக அவரை சிறைத் துறை எஸ்பி ஊர்மிளா தாக்க உத்தரவிட்டார்.
கொலை மிரட்டல்
அண்ணன் நன்னடத்தை விதிகளால் விடுதலை செய்யப்பட்டவுடன் சிறைக்குள் கும்மியதை புல்லட்டிடம் போட்டு கொடுத்துள்ளார். இதனால் புல்லட்டும் பொங்கி போய் ஊர்மிளாவுக்கு போன் செய்து இது போல் சிறைக்குள் அடித்த ஜெயிலரை எரித்து கொன்றது நினைவிருக்கா, லாரி உன் மேல் ஏறும் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
மிரட்டல்
இதையடுத்து பெரியகுளத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் மதனகலாவுக்கும் வேட்டையாடுவேன், யாரையும் செல்லில் அடிக்கக் கூடாது என்று மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் போலீஸார் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த ஆடியோக்கள் வைரலாகி வருகிறது.
விரைந்து பிடிக்க
போலீஸாரின் கண்களிலேயே விரலை விட்டு ஆட்டும் புல்லட் நாகராஜனை பிடிப்பது என்பது போலீஸாருக்கு சவாலாக உள்ளது. போலீஸாரையே மிரட்டியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். அவரை விரைந்து கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். போலீஸாரும் தீவிரமாக புல்லட்டை தேடி வருகின்றனர். ஒரு ரவுடி போலீஸ் அதிகாரிகளை தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.