தமிழகத்தையே அல்லோகல்லப்படுத்திய நிர்மலா தேவி!
அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியால் தமிழகமே மீண்டும் பெரும் பரபரப்பாகி போய் விட்டது.
சென்னை: கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த புகாரில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அருப்புக்கோட்டை பேராசிரியை நிர்மலா தேவியால் இன்னும் என்னென்ன அக்கப்போர்களை தமிழகம் சந்திக்க வேண்டுமோ!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக் கல்லூரியில் கணிதத் துறையில் பணியாற்றி வந்தார் பேராசிரியை நிர்மலா தேவி. சமீபத்தில் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியவர் இவர்.
இவர், அதே கல்லூரியில் பி.எஸ்ஸி படிக்கும் மாணவிகள் நான்கு பேரை தவறான தொழிலுக்கு அழைத்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பான ஆடியோவும் வெளியாகி அதிர்ச்சியைக் கிளப்பியது.
யார் இந்த நிர்மலா?
நக்கீரன்தான் இதை ஆரம்பத்தில் பிரேக் செய்தது. தொடர்ந்து நிர்மலா தேவி தொடர்பான செய்திகளையும் அதிரடியாக வெளியிட்டு வந்தது. சமீபத்தில் மிகப் பரபரப்பான செய்தியை அது வெளியிட்டது. அந்த கட்டுரைதான் இன்று கைது வரைக்கும் போய் விட்டது. இடையில் அமைதியாக இருந்த நிர்மலா தேவி விவகாரம் தற்போது தமிழகம் முழுவதும் மீண்டும் சூடு பிடித்து விட்டது.
தந்தை ஆசிரியர்
அருப்புக்கோட்டையில் உள்ள சொக்கலிங்கபுரம்தான் இந்த நிர்மலா தேவியின் சொந்த ஊர். இவரது தந்தை பரமசிவம் தனியார் பள்ளியில் ஓய்வு பெற்ற ஆசிரியர். 46 வயதாகும் நிர்மலாதேவி, எம்எஸ்சி, எம்பில், பிஎச்டி படித்துள்ளார். தேவாங்கர் நடுநிலைப் பள்ளியில் ஆரம்ப கல்வியும், தேவாங்கர் மகளிர் பள்ளியில் மேல்நிலைக் கல்வியும் படித்துள்ளார்.
தேவாங்கர் கலைக்கல்லூரி
தேவாங்கர் கலைக் கல்லூரியில் இளங்கலை முதுகலை படிப்பும் பயின்றதோடு காமராஜர் பல்கலைக்கழகத்தில் பிஎச்டி முனைவர் பட்டமும் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து அவர் பயின்ற தேவாங்கர் கலைக் கல்லூரியில் கடந்த 3-01-2008 ம் நாளில் உதவி பேராசிரியராக பணியில் சேர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி பேராசிரியையாக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
கணவருடன் கருத்து வேறுபாடு
இவரது கணவர் பெயர் சரவண பாண்டி. இவர் வெளிநாட்டில் பணிபுரிந்து விட்டு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் அருப்புகோட்டை சொக்கலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். தற்போது அருப்புக்கோட்டை நகராட்சி ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கணவர் சரவண பாண்டியுடன் நிர்மலா தேவிக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
கணவர் கண்காணிப்பில்..
இவர்களுக்கு இரண்டு மகள்கள். முதல் மகள் தனியார் மருத்துவ கல்லூரியில் பிடிஎஸ் படித்து வருகிறார், இரண்டாவது மகள் 9ஆம் வகுப்பு பயின்று வருகிறார். மகள்கள் இருவரும் பேராசிரியையின் கணவர் கண்காணிப்பில் வாழ்ந்து வருகின்றனர்.
சிறையில் உள்ளார்..
இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தன்னிடம் பயிலும் கல்லுரி மாணவிகள் 4 பேரை தவறான பாதைக்கு அழைத்து சர்ச்சையில் சிக்கி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் மீதான வழக்கு விசாரணையும் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. நிர்மலா தேவி விவகாரம் இன்னும் என்னென்ன அக்கப்போர்களை பார்க்கப் போகிறதோ!