ராகுல்காந்தியை கேள்வி கேட்க விஜயதாரணி யார்? திருநாவுக்கரசர் ஆவேசம்
ராகுல்காந்தியை கேள்வி கேட்க விஜயதாரணி யார் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சென்னை: ராகுல்காந்தியை கேள்வி கேட்க விஜயதாரணி யார் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவப்படம் சட்டசபையில் நேற்று திறக்கப்பட்டது. சபாநாயகர் தனபால் ஜெயலலிதாவின் படத்தை திறந்து வைத்தார்.
இதில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பலர் கலந்துகொண்டனர். ஆனால் திமுக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்நிகழ்ச்சியை புறக்கணித்தன.
டிவி விவாதம்
ஆனால் காங்கிரஸ் எம்.எல்.ஏவும் அக்கட்சியின் கொறடாவுமான விஜயதாரணி ஜெயலலிதாவின் படத்தை திறந்த சபாநாயகருக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இதுதொடர்பாக புதிய தலைமுறை தொலைக்காட்சியில் விவாத நிகழ்ச்சி நடைபெற்றது.
யாருக்கும் உரிமையில்லை
இதில் பங்கேற்ற விஜயதாரணி, ஜெயலலிதா படத்திறப்புக்கு ஆதரவு தெரிவிப்பது எனது தனிப்பட்ட உரிமை என்றார். மேலும் இது குறித்து தன்னை கேள்விக் கேட்க யாருக்கும் உரிமையில்லை என்றும் அவர் கூறினார்.
இறுதிச்சடங்கில் பங்கேற்றது ஏன்?
அதுமட்டுமின்றி ஜெயலலிதாவை காண ராகுல்காந்தியும் திருநாவுக்கரசரும் அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்றது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் அவர்கள் ஏன் கலந்து கொண்டனர் என்றும் கேள்வி எழுப்பினார்.
விஜயதாரணி யார்?
இந்நிலையில் விஜயதாரணியின் இந்த பேச்சுக்குறித்து அவர் மீது நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். மேலும் ராகுல் காந்தியை கேள்வி கேட்க விஜயதாரணி யார் என்றும் அவர் ஆவேசமாக கூறினார்.
ஆளுநரே பங்கேற்கவில்லை
மேலும் விஜயதாரணியின் பேச்சு குறித்து கட்சி தலைமைக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் திருநாவுக்கரசர் தெரிவித்தார். ஜெயலலிதா படத்திறப்பு தொடர்பாக விஜயதரணி பேசியது சரியல்ல என்று கூறிய அவர் சர்ச்சை இருப்பதால்தான் மாவட்டம் மாவட்டமாக செல்லும் ஆளுநரே ஜெயலலிதா படத்திறப்பில் பங்கேற்கவில்லை என்றார்.