மதனுக்கு 'அடைக்கலம்' கொடுத்த திருப்பூர் வர்ஷா யார்- 2வது மனைவி சுமலதா விளக்கம்
திருப்பூரைச் சேர்ந்த வர்ஷா தனது உறவினர் என்று என்று மதனின் இரண்டாவது மனைவி சுமலதா விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை : மருத்துவக் கல்லூரியில் மாணவர்களை சேர்க்க பணம் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரின் தலைமறைவான மதன் 6 மாதங்களுக்குப் பின்னர் திருப்பூரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் 7 நாட்கள் மதனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். விசாரரணயில் மதன், தனக்கு உதவியவர்கள் குறித்த விவரங்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
மதன் குறித்து பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் மதனின் தாயார் தங்கம், அவரது இரண்டாவது மனைவி சுமலதா மற்றும் வக்கீல் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.
கணவருக்கு மிரட்டல்
அப்போது பேசிய மதனின் மனைவி சுமலதா, தனது கணவர் பச்சமுத்து குடும்பத்தினரின் மிரட்டலுக்கு பயந்துதான் தலைமறைவானதாக தெரிவித்தார். காவல்துறையினர் பலரும் தனது கணவரை மிரட்டியதாகவும் கூறினார்.
கீதாஞ்சலி தெரியாது
கீதாஞ்சலி என்று யாரையும் தனது கணவருக்கு தெரியாது. அவருக்கு வேறு பெண்களுடன் தொடர்பு இல்லை என்றும் அவர் கூறினார். ஊடகங்கள் தனது கணவரைப்பற்றி சித்தரித்து எழுதுவதாகவும் கூறினார் சுமலதா.
வர்ஷா யார்?
திருப்பூரில் வசிக்கும் வர்ஷா தனது உறவுக்கார பெண்தான். அவர் தனது கணவருக்கு வீட்டில் தங்குவதற்கு அடைக்கலம் மட்டுமே கொடுத்தார். அது மட்டுமே உண்மை. அதை விடுத்து எதுவும் தெரியாமல் ஒரு பெண்ணைப் பற்றி தவறாக எழுதுவது நியாயமா என்றும் கேட்டார் சுமலதா.