ரகுவை கொன்றது யார்? கோவை சாலையில் எழுதப்பட்ட வாசகம் இரவோடு இரவாக அழிப்பு!
கோவையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு மோதி சாஃப்ட்வேர் என்ஜினியர் ரகு உயிரிழந்தது தொடர்பாக சாலையில் எழுதப்பட்ட வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
கோவை: அவினாசி சாலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா அலங்கார வளைவு மோதி சாஃப்ட்வேர் என்ஜினியர் ரகு உயிரிழந்தது தொடர்பாக ஹு கில்டு ரகு என சாலையில் எழுதப்பட்ட வாசகம் அழிக்கப்பட்டுள்ளது.
கோவை அவினாசி சாலையில் டிசம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவுக்காக கடந்த வாரம் ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டன. சாலையை ஆக்கிரமித்து பல இடங்களில் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
விழாவுக்காக அலங்கார வளைவும் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் சாலையில் அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவில் இருந்த மூங்கில் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
அலங்கார வளைவால் விபத்து
நீட்டிக்கொண்டிருந்த மூங்கில் மீது கோவை சின்னியம்பாளையத்தைச் சேர்ந்த ரகு என்ற இளைஞரின் பைக் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை மோதியது. இதில் ரகு நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்தவழியாக வந்த லாரி ரகு மீது ஏறியது.
தலை நசுங்கி பலி
இதில் தலை நசுங்கி ரகு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் பார்க்க வந்தார்
உயிரிழந்த ரகு என்கிற ரகுபதி அமெரிக்காவில் தகவல் தொழில்நுட்பப் பொறியாளராகப் பணியாற்றி வந்தார். திருமணத்திற்குப் பெண் பார்ப்பதற்காக சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்
கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலையில் பழனி கோவிலுக்குச் செல்ல இருசக்கர வாகனத்தில் சிங்காநல்லூர் பேருந்து நிலையம் நோக்கிச் சென்றார் ரகு. அப்போது பீளமேடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே அமைக்கப்பட்டிருந்த அலங்கார வளைவுக் கம்பத்தால் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியது.
|
ஹு கில்டு ரகு?
இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரகு உயிரிழந்ததை தாங்கிக்கொள்ள முடியாத அவரது நண்பர்களும் உறவினர்களும் சாலையில் அவர் உயிரிழந்த இடத்திலும், அலங்கார வளைவுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட இடத்திலும் வட்ட மிட்டு காட்டியதோடு, ஹு கில்டு ரகு? என எழுதி வைத்திருந்தனர்.
|
இரவோடு இரவாக அழிப்பு
இதனால் இந்த விவகாரம் பூதாகரமானது. இந்நிலையில் அந்த வாசகம் இரவோடு இரவாக அழிக்கப்பட்டுள்ளது. இதனிடையே ரகு உயிரிழப்புக்கு அலங்கார வளைவு காரணம் அல்ல. குப்பை லாரிதான் காரணம் என கோவை காவல்துறை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.