பரபரப்புக்காக போலி ஐ.டி ஆபீஸரை அனுப்பியது தீபாவா? மாதவனா? தப்பியது எப்படி?
Recommended Video
சென்னை: ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் விஷயத்தில் அனைத்துமே மர்மமாகத் தான் இருக்கிறது. நள்ளிரவில் தனது வீட்டை யாரோ அடித்து உடைத்தார்கள் என்றார், ஆனால் அந்த சம்பவத்திற்குப் பிறகு தீபாவின் ஆதரவாளர்களே வெளியில் நடமாடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகின. இந்நிலையில் இன்று போலி வருமான வரி அதிகாரி தீபாவின் வீட்டிற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
செய்திகளில் தங்களது பெயர் அடிபடவேண்டும் என்பதற்காக தீபாவும், மாதவனும் அடிக்கடி சண்டை போட்டுக்கொள்வதுண்டு. பேரவை தொடங்கிய அதிருப்தியில் தீபாவின் கணவர் மாதவன் வீட்டை விட்டு வெளியேறினார். தீபாவின் நெருங்கிய நண்பரான ராஜா தான் மாதவன், தீபா இடையிலான பிரச்னைக்கு காரணம் என்று சொல்லப்பட்டது.
உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது, எனது வீட்டை யாரோ நள்ளிரவில் அடித்து உடைத்தார்கள் என்றார் தீபா. ஆனால் இந்தப்புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது தீபாவின் ஆதரவாளர்களே சேர்களை தூக்கி வீசும்காட்சிகள் கிடைத்தன. என்னுடன் இருக்கும் ஆட்களை வைத்தே எனக்கு அச்சுறுத்தல் தருகிறார்கள் என்றார்.
நள்ளிரவில் தாக்குதல் நாடகம்
தி.நகர் வீட்டின் மீது யாரோ கல் எறிவதாக காவல்துறைக்கு போன் செய்து புகார் அளித்தார் தீபா. போலீசார் விசாரணையில் அதுபோல் நடக்கவில்லை என தெரியவந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்னாள், ஒரு நாள் நள்ளிரவில், தீபாவுக்கும், மாதவனுக்கும் சண்டை ஏற்பட்டதாக தீபாவின் ஆதரவாளர்கள் தி.நகர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்ததால், வீட்டின் முன்பு போலீசார் குவிக்கப்பட்டனர். ஆனால், சினிமா படத்தில் வரும் காட்சிகளைப்போல் இருவரும் சரமாரியாக திட்டிக்கொண்டனர்.
தீராத சண்டை
வீட்டிற்குள் மாதவன் வரக்கூடாது என்றெல்லாம் அன்று பேசினார் தீபா. ஆனால், ஒரு சில நாட்களில் சமாதனம் அடைந்தனர். இதுபோல், பல முறை இருவருக்கும் இடையில் மோதல், எங்கள் தலைவிக்கு பாதுகாப்பு வேண்டும் என தீபா தரப்பு போலீஸில் புகார் கொடுத்துள்ளனர். இதனால் கடுப்பான தி.நகர் போலீசார் தீபாவின் வீட்டு முன் நிரந்தரமாக ஒரு வாகனத்தை நிறுத்தினர்.
வலிய போய் தகவல் கொடுத்துள்ளனர்
இந்த நிலையில், இன்று காலை வருமானவரித்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக தீபாவின் உதவியாளர் செய்தியாளார்களை அழைத்து சொல்லியுள்ளார். செய்தியாளர்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் கேட்டபோது நாங்கள் சோதனை செய்யவில்லை என்று சொல்லிவிட்டார்கள். இதையடுத்து, வந்தவர் போலி நபர் என்பது உறுதியானது. ஆனால், அங்கிருந்த போலீசாரும் அவரிடம் விசாரணை நடத்தும்போது, அந்த நபர் தப்பியோடிவிட்டார்.
அனுப்பியது யார்?
6 போலீசார் சம்பவ இடத்தில் இருந்தும், யாரும் போலி நபரை பிடிக்கவில்லை. தப்பியோடியவரை கேமிராமேன்கள் துரத்திச்சென்று படம்பிடித்தனர். அப்போது சிவஞானம் தெருவே போர்க்களமாக காட்சியளித்து. தப்பியோடிய நபரை யார் அனுப்பியது? தீபாவா? அல்லது அவரது ஆதரவாளர்களா? அல்லது மாதவனின் வேலை என்பது தப்பியவர் சிக்கினால்தான் தெரியும்.