ஜெ.வுக்கு சிகிச்சையளித்த டாக்டரை போயஸ் கார்டனுக்குள் வரவிடாமல் தடுத்த சக்தி எது?
ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர் சாந்தாராம், போயஸ் கார்டனுக்குள் செல்ல அனுமதிக்காமல் தடுத்தது யார் என ஓ. பன்னீர் செல்வம் அணியின் பி.எச்.பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை: சென்னையில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தின் அணியைச் சேர்ந்த பி.எச்.பாண்டியன், நேற்று ஜெயலலிதா மரணம் குறித்த பல்வேறு சந்தேகங்களைக் கூறினார். அதில் ஜெயலிதாவுக்கு சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சாந்தாராமை போயஸ் கார்டனுக்குள் வரவிடாமல் தடுத்தது யார்? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
டாக்டர் சாந்தாராம் எம்ஜிஆர் மருத்துவ பல்கலை கழகத்தில் துணைவேந்தராக இரண்டரை ஆண்டுகள் பணிபுரிந்தவர். தமிழ்நாட்டில் இருக்கும் புகழ்பெற்ற, சிறந்த நீரழிவுநோய் நிபுணர்களில் ஒருவர்.
சுமார் முப்பதாண்டுகளுக்கு முன்பே நீரிழவு நோய் பட்டமேற்படிப்பை முடித்தவர். இந்தத் துறையில் மிகுந்த அனுபவம் வாய்ந்தவர். அதுமட்டுமில்லாமல், இவர் எம்ஜிஆர் பல்கலை கழகத்தில் பணியாற்றிய காலகட்டங்களில் மிகவும் நேர்மையாக பணியாற்றியவர், தைரியமான முடிவுகளை எடுத்தவர் என்று அனைவராலும் பாராட்டப்பட்டவர்.
போயஸ் கார்டன் சிகிச்சை
இவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு போயஸ் கார்டனுக்கே சென்று 2016ஆம் ஆண்டு மே மாதம் வரை சிகிச்சை அளித்தார். ஜெயலலிதாவுக்கு பல வருடங்களாக நீரிழிவு பிரச்சனை இருந்திருக்கிறது. அவருடைய போயஸ் இல்லத்தியே மருத்துவமனை வசதிகள் உள்ளன.
ஸ்டிரோக் வரலாம் என எச்சரித்தார்
ஜெயலலிதாவின் இல்லம் சென்று சிகிச்சை அளித்து வந்த டாக்டர் சாந்தாராம், ஒருமுறை ஜெயலலிதாவிடம், 'தற்போது நீங்கள் உங்கள் இல்லத்தில் பெறுகின்ற சிகிச்சைகள் உங்களுக்கு 'ஸ்ட்ரோக்'கை உருவாக்கலாம், அதாவது கை,கால்கள் செயல் இழந்து பக்கவாதம் உருவாகலாம் என எச்சரித்துள்ளார்.
அனுமதி மறுப்பு
அப்படி அவர் ஜெயலலிதாவை எச்சரித்த அடுத்தநாளில் இருந்து, அவர் போயஸ் கார்டனுக்குள் அனுமதிக்கப்படவில்லை. யார் அவரை வரக் கூடாது என்று கூறினார்கள் என்பது தெரியவில்லை.
தடுத்தது யார்
அவரை வர வேண்டாம் என்று கூறியதற்கான காரணங்களும் தெரியவில்லை. ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் இருக்கும் பல சந்தேகப்ங்களில்டாக்டர் சாந்தாராம் வருகை நிறுத்தப்பட்டதும் மிக முக்கியமானது.
சசிகலாவின் மருமகன் சிவக்குமார்
அதன்பிறகு, ஜெயலலிதாவின் மருத்துவராக சசிகலாவின் அண்ணன் ஜெயராமன் - இளவரசியின் மருமகன் டாக்டர் சிவகுமார்தான் செயல்பட்டு வந்தார். ஜெயலலிதாவுக்கு அப்பல்லோவில் சிகிச்சை அளித்த போது உடன் இருந்த மருத்துவக் குழுவில் டாக்டர் சிவக்குமாரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வாயே திறக்காத சிவக்குமார்
ஆனால் இந்த சிவக்குமார், அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்களின் விளக்கத்தின்போது உடன் இருக்கவில்லை. சிவக்குமார் இதுவரை எந்த ஒரு விளக்கத்தையும் அளிக்கவில்லை. ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்தும் இந்த சிவக்குமார் வாயே திறக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.