பின்னணியில் ஏகப்பட்ட கணக்கு.. ஜெயேந்திரரை, டி.டி.வி.தினகரன் சந்திக்க ஏற்பாடு செய்தது யார் தெரியுமா?
தினகரன் ஏன் ஜெயேந்திரரை சந்தித்து பேச வேண்டும், அதற்கான வாய்ப்பு எப்படி அவருக்கு கிடைத்தது என்பதன் பின்னணியில் இருப்பவர்தான் சுப்பிரமணியன் சாமி.
சென்னை: காஞ்சி சங்கர மடத்திற்கு அதிமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் அதிமுக கொடியோ வேறு எந்த அடையாளங்களோ இல்லாமல் தனது காரில் தனிப் பாதுகாப்பு அதிகாரிகள் இருவருடன் சமீபத்தில் சென்று வந்துள்ளார்.
மத்திய அரசின் பாராமுகம், கவர்னரின் கோபமுகம், தமிழக பாஜகவினரின் தீவிர அதிமுக எதிர்ப்பு மற்றும் ஒரு வார இதழ் ஆசிரியரின் தொடர் விமர்சன கட்டுரைகள் ஆகியவற்றால் விரக்தியடைந்துதான் தினகரன் ஜெயேந்திரரை சந்தித்து ஆசி பெற்றுள்ளார்.
சுமார் 2 மணி நேரம் சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காஞ்சி மடத்துக்குள் வரும்போது இறுக்கமான மனநிலையுடன் வந்த தினகரன் வெளியேறும்போது உற்சாகமாக காணப்பட்டதாக தகவல் அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.
ஆசி வங்கிய ஜெயேந்திரர்
தினகரன் கிளம்பும்போது, எல்லாம் நல்லதாக ஆகும் என ஆசிர்வதித்ததோடு ஆப்பிள்களை கொடுத்ததோடு குங்குமத்தை நெற்றியில் திலகம் இட்டு அனுப்பிவைத்தாராம் ஜெயேந்திரர். எவ்வளவு பெரிய வி.ஐ.பியாக இருந்தாலும் மிக அரிதான சந்தர்ப்பங்களில் மட்டுமே ஜெயேந்திரர் தன்னை வணங்குபவர்களின் நெற்றியில் குங்குமம் இடுவார். மற்றநேரங்களில் எல்லாம் கைகளில்தான் கொடுப்பார். எனவே தினகரனுக்கு நெற்றியில் குங்குமம் இட்டதன் மூலம், அவரது கோரிக்கைகளை ஜெயேந்திரரின் பரிசீலிப்பதாக ஏற்றுக்கொண்டதாக அர்த்தம் என்ற குதுகலிப்பு போயஸ் இல்லத்தில் காணப்படுகிறதாம்.
சு.சாமி கொடுத்த ஐடியா
தினகரன் ஏன் ஜெயேந்திரரை சந்தித்து பேச வேண்டும், அதற்கான வாய்ப்பு எப்படி அவருக்கு கிடைத்தது என்பதன் பின்னணியில் இருப்பவர்தான் சுப்பிரமணியன் சாமி. சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்துள்ள சு.சாமி, கூவத்தூரில் அதிமுக எம்.எல்.ஏக்கள் காத்திருந்தபோது, போலீசார் அங்கு அனுப்பி வைக்கப்பட்டபோது, அதை எதிர்த்து குரல் கொடுத்தார். டெல்லியில் லாபி செய்தார். டிஜிபிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அச்சமூட்டினார். எனவே பழனிச்சாமி அரசு தப்பியது.
பின்னணியில் சு.சாமி
இருப்பினும் மத்திய அரசு மற்றும் தமிழக பாஜக தொடர்ந்து சசிகலா எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்து வருவதை அறிந்து கொண்ட, சு.சாமி, அதற்காகவே, தினகரன்-ஜெயேந்திரர் சந்திப்புக்கு ஐடியா கொடுத்து, அப்பாய்ட்மென்ட் வாங்கி கொடுத்துள்ளார். ஜெயலலிதா நடவடிக்கையால் விரக்தியில் இருந்த காஞ்சி மடம் தரப்பில் சமாதானம் பேசி, தினகரனை சந்திக்க சம்மதம் பெற்றுக்கொடுத்துள்ளார் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
கோபம் குறையும்
சங்கராச்சாரியார்களுடன் தனிப்பட்ட நட்பு பாராட்டுவது போன்ற செயல்களால் பாஜக தலைவர்கள், பத்திரிகை ஆசிரியர், தமிழக பாஜகவினர் தானாக கோபத்தை குறைத்துக்கொள்வார்கள். அதிமுகவோடு நட்பு பாராட்டுகிறார்களோ இல்லையோ, விமர்சனத்தின் வேகத்தையும், எதிர்ப்பையும் குறைத்துக்கொள்வார்கள் என்பது சு.சாமி கணக்கு.
மதிப்புக்குறிய மடம்
கைது செய்த அதிமுக அரசாங்கத்தின் தலைமையே தற்போது உங்களே தேடி வந்து சரணடைவது உங்களுக்கு பெருமைதானே என்று கூறிதான் ஜெயேந்திரரிடம், தினகரனுடனான, சந்திப்புக்கு சு.சாமி அனுமதி கேட்டதாக கூறப்படுகிறது. அதேபோல, மோடி உட்பட பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் அனைவரும் மிகவும் மதிக்கும் ஜெயேந்திரரிடம் ஆசி பெற்று வந்துவிட்டால், தங்கள் அபிமான ஆன்மீக தலைவரின் அன்புக்கு பாத்திரமானவர், இந்துத்துவா கொள்கை கொண்டவர் என்ற அனுதாபம் காரணமாக, அரசுக்கு குடைச்சல் தரமாட்டார்கள் என்பது சு.சாமி, தினகரனுக்கு போட்டுக்கொடுத்த திட்டமாம்.
சிறுபான்மையினரும் வேண்டும்
அதேநேரம், இந்த சந்திப்பு வெளிப்படையானதாக இருந்தால், அதிமுகவுக்கு சிறுபான்மையினர் ஆதரவு கிடைக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தால், வெளியே அறிவிக்காமல் சந்திப்பு நிகழ்ந்ததாம்.