பால் விலையைப் பத்தி எந்தக் கட்சியாச்சும் கவலைப்பட்டுச்சா.. அதை விட்டுட்டு ரஜினி பின்னாடியே திரிங்க!
சென்னை: இன்று காலை மளிகை கடைக்கு சென்ற போது நாளை முதல் அரை லிட்டர் பால் விலை 28 ரூபாய் என்றார் கடைக்காரர். பூரி போட ஒரு லிட்டர் சன்பிளவர் ஆயில் வாங்கலாம் என்று வந்தால் 114 ரூபாய் கொடுங்க என்றார். இதை கேட்டு அதிர்ந்த நான்.. என்ன இவ்வளவு விலை விற்குது என்று கேட்ட போது.. இது விலை ஏறி ரொம்ப நாளாச்சு என்கிறார்.
தலைபோற விஷயமாக இங்கே ஆயிரம் விவாதங்கள் ரஜினி பெரியார் சர்ச்சை குறித்து ஓடிக்கொண்டிருக்கும் போது, அதிரவைக்கும் விலை வாசி உயர்வை பற்றி யார் கேட்பார்கள் என்று மனம் ஏனோ கவலையுடன் இன்று காலை பொழுதை கடத்தியது.
ஆம் இங்கே மக்களை அன்றாடம் பாதிக்கும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பற்றி எல்லாம் வாயை திறக்க மறுப்பது ஏன்? சும்மா கடமைக்கு சில கண்டன அறிக்கைகள் விட்டு, நானும் எதிர்த்தேன் பார்த்துக்கோ என்பது போல் இருந்து விடுகிறார்களே ஏன்?
வெங்காயம் விலை
உண்மையில் மக்கள் தினமும் சாப்பிடும் இட்லிக்கு மிக முக்கியமானது உளுந்து. அதன் விலை உயர்ந்தது பற்றி யாராவது வாயை திறந்திருக்கிறார்களா.. சிலிண்டர் விலை கடந்த இரு மாதத்தில் 110 ரூபாய்க்கு மேல் உயர்ந்துவிட்டது. வெங்காயம் பற்றாக்குறை ஏற்பட போகிறது என்று தெரிந்தும் அதனை உடனே அதிக அளவு இறக்குமதி செய்யாமல் அமைதியாக இருந்துவிட்டு தாமதமாக இறக்குமதி செய்து, ஐந்து மாதங்கள் 100 ரூபாய்க்கு மேல் இருக்க வேண்டிய நிலைக்கு தள்ளியது யார்? தினமும் குடிக்கும் தண்ணீர் கேன் விலை என்ன தெரியுமா? கேபிள் கட்டணம் எவ்வளவு உயர்ந்திருக்கு தெரியுமா?
திசை திருப்புதல்
மக்கள் எதை பேச வேண்டும்? எப்படி பேச வேண்டும்? இதை பற்றி தான் விவாதிக்க வேண்டும் என்று நிர்ணயிப்பது யார்? இப்போது ரஜினி பேசியது குறித்த பிரச்சனை, போன வாரம் வரை சிஏஏ மற்றும் என்பிஆர் குறித்த பிரச்சனை, அதற்கு முன் காஷ்மீர், அதற்கு முன் பாகிஸ்தான், இப்படி ஒவ்வொன்றாக மக்களை திசை திருப்புவது யார்? மக்கள் விலைவாசி உயர்வை பற்றி கேள்வியே கேட்கக்கூடாது, மக்கள் ஏதாவது ஒரு பிரச்சனையை பற்றி நினைத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களா? .
பால்விலை உயர்வு
இன்றைக்கு விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு இருக்கிறது. சராசரியாக குடும்பம் நடத்த மாதம் 15 ஆயிரம் சாதாரணமாக வேண்டும் என்கிற அளவுக்கு நிலைமை இங்கே மாறிக்கிடக்கிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, வேலையிருக்குமோ இருக்காதோ என்ற நிச்சயமற்ற நிலை, பள்ளிகளில் ஒவ்வொரு வருடமும் உயரும் கல்விக்கட்டணம், தினமும் உயரும் பெட்ரோல் டீசல் விலை, பால் விலை உயர்வு, பேருந்து கட்டண உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, ஆம்னி பேருந்து நிறுவனம் போல் செயல்படும் ரயில்வேயின் ரயில் டிக்கெட் கட்டண உயர்வு இதையெல்லாம் யார் கேட்பார்கள். மக்கள் யாரிடமும் பணப்புழக்கம் சுத்தமாக இல்லையே இதை பற்றி யார் வாயை திறக்க போகிறார்கள்?
இறை நம்பிக்கை
கடவுள், மதம், இறை நம்பிக்கை, சினிமா, நடிகர்கள், அரசியல் தலைவர்களின் பேச்சுக்கள் இதை பற்றி மட்டுமே விவாதங்கள் அண்மைக்காலமாக சுழல்வது ஏன்? விலைவாசி உயர்வை கண்டித்து எல்லாம் இன்றைக்கு சர்ச்சை பேச்சு பேசும் ரஜினி போன்ற தலைவர்கள் குரல் கொடுத்தது உண்டா..ரஜினி மட்டுமல்ல..அரசியல் களத்தில் உள்ள எத்தனை பேர் விலைவாசியை பற்றி பேசுகிறார்கள். அது விவாதமாக ஊடகங்களில் விவாதிக்கப்படுகிறதா? ஏன் இந்த பொருளின் விலை உயருகிறது இதற்கு என்ன காரணம் என்று எந்த கேள்வியும் இங்கே எழுப்பப்படுவதில்லை. எழுப்புவது சாமர்த்தியாக தவிர்க்கப்படுகிறதா என்ற சந்தேகமே எழுகிறது.