இலை துளிர்க்குமா? சூரியன் உதிக்குமா? குக்கர் ஜொலிக்குமா? இன்று தெரியும்
ஆர்கே நகரில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள நிலையில் எந்த கட்சி வெற்றி பெறும் என்பது தெரிய வரும்.
சென்னை: ஆர்கே நகர் இடைத்தேர்தலில் வெற்றி வாகை சூடப்பபோவது யார் என்பது இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில் தெரியவரும்.
ஜெயலலிதாவின் தொகுதியான ஆர்கே நகருக்கு டிசம்பர் 21-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர், தினகரன் அணி ஆகியன கட்சிகள் போட்டியிட்டன.
இவை தவிர சுயேச்சைகளுடன் சேர்த்து மொத்தம் 59 பேர் போட்டியிட்டனர். இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று ராணி மேரி கல்லூரியில் நடைபெறுகிறது.
பணவிநியோகம்
ஆர்கே நகரில் கடந்த வாரம் ஆளும் கட்சியினர் ரூ.100 கோடியை விநியோகம் செய்ததாக எதிர்க்கட்சிகள் புகார் தெரிவித்தன. இந்நிலையில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்ட தினகரனும் குக்கரை விநியோகம் செய்துவிட்டதாகவும் புகார் எழுந்தது. இதையும் தாண்டி வாக்கு எண்ணிக்கை அன்று ஹவாலா முறையில் பணம் விநியோகம் செய்வதாக தினகரன் மீது பாஜக வேட்பாளர் கரு நாகராஜன் பகீர் புகார் அளித்தார்.
மத்திய அரசு இசைவு
பொதுவாக இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும் என்பது எழுதப்படாத சட்டமாகும். ஆனால் இந்த தேர்தலில் அப்படி நடக்க வாய்ப்பிருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. நீட் தேர்வு, ஹைட்ரோ கார்பன் திட்டம் என தமிழகத்துக்கு வஞ்சகம் இழைக்கும் மத்திய அரசின் திட்டங்களுக்கு அதிமுக துணை போனது. மேலும் ஓகி புயலால் காணாமல் போன குமரி மீனவர்களை தமிழக அரசு கண்டுபிடிக்க இதுவரை எந்த முயற்சியும் எடுக்கவில்லை. மேலும் ஆர்கே நகரில் மீனவ மக்கள் அதிகம் என்பதால் ஓகி புயல் விவகாரம் இந்த தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தெரிகிறது.
தமிழகத்துக்கு காலூன்றுமா?
வடமாநிலங்களை போல் பாஜக தமிழகத்தில் கால் ஊன்றுவது சாத்தியம் இல்லை என்றே ஒவ்வொரு தேர்தல்களும் வெளிப்படுத்தி வருகின்றன. மீனவர்கள் விவகாரம், நீட் விவகாரம், ஹைட்ரோ கார்பன் திட்டம் என தமிழகத்துக்கு எதிரான நடவடிக்கைகளையே மத்திய அரசு எடுத்ததால் அது சார்ந்த கட்சிக்கு தமிழகத்தில் பின்னடைவு ஏற்படும் என்றே சொல்லலாம்.
இரட்டை மெழுகுவர்த்திகள்
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த வேட்பாளருக்கு வாக்கு சதவீதம் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம். ஆனால் வெற்றி வாய்ப்பு என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். சீமானின் பேச்சுகள் என்னதான் இளைஞர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் அவை இடைத்தேர்தலில் கிளிக் ஆகுமா என்பது இன்று மதியத்துக்குள் தெரியவரும்.
உதயசூரியன்
2ஜி வழக்கிலிருந்து கனிமொழி, ஆ.ராசா விடுவிக்கப்பட்டதால் இனி எல்லாவற்றிலும் வெற்றி பெறுவோம் என்றே திமுகவினர் கூறுகின்றனர். ஆளும் கட்சியின் ஊழல், ஜெயலலிதாவுக்கு பின்னர் அதிமுகவின் நிலை, பதவியை காத்துக் கொள்ள இவர்கள் ரிசார்டுகளில் அடித்த லூட்டி ஆகியவற்றை முன்வைத்தும் திமுக பிரசாரம் செய்தது.
சுயேச்சை வேட்பாளர் தினகரன்
சுயேச்சை வேட்பாளராக களம் இறங்கிய தினகரன் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டார். தாய்மார்கள் தினம்தோறும் உறவாடும் ஒரு பொருள் குக்கர் என்பதால் அந்த சின்னம் அவர்கள் மத்தியில் எளிதில் பதிவாகி தினகரனுக்கு வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தினகரனுக்கு ஓட்டு போட்டு ஓட்டு போட்டு வாக்கு பதிவு இயந்திரத்தில் அந்த சின்னமே தேய்ந்துவிட்டது என்று வாக்காளர் ஒருவர் தெரிவித்திருந்தார். மேலும் பெரும்பாலான கருத்து கணிப்பு முடிவுகளும தினகரனுக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக கூறுகின்றன. எனவே இரட்டை இலை துளிர்க்குமா? சூரியன் உதிக்குமா? தாமரை மலருமா? குக்கர் ஜொலிக்குமா? என்பது இன்று மதியத்துக்குள் தெரிந்துவிடும்.