அரசியலுக்கு எந்த நடிகர் தேவை.. தலைத்தெறிக்க ஓடிய வாசகர்கள்.. சுவாரஸ்ய கருத்துக் கணிப்பு
சென்னை: அரசியலுக்கு எந்த நடிகர் தேவை என ஒன் இந்தியா தமிழ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் ஆளை விடுங்க சாமி என்று வாசகர்கள் தலைத்தெறிக்க ஓடியுள்ளனர்.
ஜெயலலிதா மற்றும் கருணாநிதி ஆகிய மாபெரும் ஜாம்பவான்கள் மறைந்தவுடன் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டதாக கூறி நடிகர்கள் தலைத்தூக்கி விட்டனர்.
ரஜினி, கமல் வரிசையில் சிம்பும், விஜய்யும் வந்துவிட்டனர். சிம்புவை அரசியலில் கொண்டு வர அவரது தந்தை டி.ராஜேந்தர் முயற்சிகளை எடுத்து வருகிறார். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் விஜய்யும் அரசியல் பேசினார். அவரை அரசியலுக்கு கொண்டு வர ஆசைவுள்ளதாக அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் வெளிப்படையாக கூறியுள்ளார்.
அரசியல் குறித்த கருத்துக் கணிப்புகள்
தமிழகத்தில் தற்போதைய சூழலில் யார் அரசியலுக்கு வர வேண்டும் என வாசகர்களிடம் ஒன் இந்தியா தமிழ் கருத்து கணிப்பை நடத்தியது. இந்த கேள்விக்கு ரஜினி, கமல், விஜய், அஜிக், சிம்பு, இவங்களுக்கு ஈபிஎஸ்- ஓபிஎஸ் பெட்டரப்பா, ஆளை விடுங்க சாமி ஆகிய ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டன.
ஆளை விடுங்க சாமி
இதில் ஆளை விடுங்க சாமி என்ற ஆப்ஷனை 34.2 சதவீதம் பேர் தேர்வு செய்துள்ளனர். மற்ற ஆப்ஷன்களை காட்டிலும் இதையே அதிகம் பேர் தேர்வு செய்துள்ளனர். எந்த நடிகரும் வேண்டாம் என்ற முடிவில் இவர்கள் உள்ளனர். அனைத்து அரசியல்வாதிகள் மீதும் நம்பிக்கையை இழந்துவிட்டனர் போலும்.
மக்கள் நீதி மய்யம்
தமிழகத்துக்கு தேவை இவர்தான் என மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவரும் நடிகருமான கமலுக்கு 17.58 சதவீதம் வாக்குகள் கிடைத்துள்ளன. கட்சி தொடங்கியது முதல் மக்களை சந்திப்பது, அரசை எதிர்ப்பது என கமலின் செயல்பாடுகள் மக்களுக்கு திருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே அவர் தேவை என வாசகர்கள் கூறியுள்ளனர்.
கமலுக்கு பிறகு விஜய்
தற்போதைய சூழலில் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என 16.74 சதவீதம் பேர் விரும்புகின்றனர். மெர்சல் படத்திலிருந்தே மக்களை தனது வசனத்தால் ஈர்த்துள்ளார் விஜய். இந்நிலையில் தற்போது சர்கார் பட இசை வெளியீட்டு விழாவில் விஜய் டாப் கியரில் மக்களின் மனதை கொள்ளை கொண்டுவிட்டார்.
கட்சி ஆரம்பிக்காத ரஜினி
ரஜினி அரசியலுக்கு வருவதாக கூறிவிட்டு கட்சியை தொடங்காவிட்டாலும் கூட அவர்தான் அரசியலுக்கு வேண்டும் என்று 12.32 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். ரஜினியை பொருத்தமட்டில் அவர் இந்த ஆண்டில் கட்சியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் பாஜகவின் பிரதிநிதி என்றே பெரும்பாலானோரால் நம்பப்படுகிறது.
சூப்பர் ஆப்ஷன்
இந்த நடிகர்களுக்கு முதல்வர் எடப்பாடியும், துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் பெட்டர் என்று 9.05 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். நடிகர்கள் சினிமாவில் வசனம் பேசுவது போல் இருப்பதால் அவர்களை நம்ப மக்கள் முன்வரவில்லை என்றே தெரிகிறது.
தல அஜித்
அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என 8.57 சதவீதம் பேர் விரும்புகின்றனர். தல என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் அஜித் நல்ல மனிதர் , பண்பாளர் என்பது ரசிகர்களின் கருத்தாகும். இதனால் அவர் அரசியலுக்கு வருவதாக கூறாவிட்டாலும் அவரை விரும்புகின்றனர்.
இவ்ளோதானா
கடைசியாக சிம்புதான் அரசியலுக்கு வரவேண்டும் என 1.53 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். விஜய்க்கு அடுத்தபடியாக சிம்புக்கு ரசிகர்கள் மன்றங்கள் உள்ளதாக டி.ராஜேந்தர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. சிம்பு காவிரிக்காக ஒரு வேலை செய்தார். அதாவது ஒரு தேதியை குறிப்பிட்டு அதற்குள் கர்நாடக மக்கள் தமிழக மக்களுக்கு ஒரு கிளாஸ் தண்ணீர் கொடுப்பது போன்று வீடியோ எடுத்து சமூகவலைதளங்களில் பரப்புங்கள் என்றார். இதற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது.