ஜா கட்டருக்கான செலவை அரசே ஏற்குமா? அல்லது அதுவும் சென்னை சில்க்ஸ்தானா?
தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிக்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: தீ விபத்தில் சேதமடைந்த சென்னை சில்க்ஸ் கட்டடத்தை இடிக்கும் பணிக்கு ஆகும் செலவை தமிழக அரசே ஏற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழக அரசின் சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என அமைச்சர் உதயக்குமார் கூறியிருந்த நிலையில் இந்த கேள்வி எழுந்துள்ளது.
தி சென்னை சில்க்ஸ் கட்டடத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து 400க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 2 நாட்களாக போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.
இந்நிலையில் விதியை மீறி கட்டப்பட்ட அந்த கட்டடத்தை இடிக்கும் பணிகள் இன்று தொடங்கியுள்ளன. ஜா கட்டர் எனும் நவீன கருவிகள் மூலம் கட்டடத்தை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஜா கட்டர் கட்டணம்
இடிப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஜா கட்டர் எந்திரத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு 20000 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த எந்திரம் மூன்று நாட்களில் கட்டடத்தை இடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வசூலித்த தமிழக அரசு
முன்னதாக தீயை அணைக்க ஆகும் செலவுகள் தி சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் இருந்து தான் பெறப்படும் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருந்தார். அதன்படியே தீயை அணைக்க ஆன செலவாக சென்னை சில்க்ஸ் நிர்வாகத்திடம் இருந்து 30 லட்சம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அரசு சார்பில் கட்டடம் இடிப்பு
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்பி உதயக்குமார் தமிழக அரசு சார்பில் கட்டடம் இடிக்கப்படும் என்றார். அப்படியானால் ஜா கட்டருக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அரசே ஏற்குமா?
ஏற்கனவே பேரிழப்புக்கு ஆளாகியுள்ள சென்னை சில்க்ஸ் நிர்வாகம், தீயை அணைக்க ஆன செலவு, ஊழியர்களுக்கான சம்பளம் என அனைத்தையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் 2 ஜா கட்டர்களுக்கான கட்டணம் 60 மணி நேரம் என்று வைத்துப் பார்த்தால் கூட 24 லட்சத்தை எட்டிவிடுகிறது. ஜா கட்டருக்கான செலவை அரசே ஏற்குமா? அல்லது அதுவும் சென்னை சில்க்ஸ்தான் கொடுக்க வேண்டுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.