ஸ்ரீரங்கத்தில் மல்லுக்கட்டுக்குத் தயாராகும் அதிமுக, திமுக பாஜக, காங்... குஸ்திக்கு வருவது யாரோ?
சென்னை: புலி வருது... புலி வருது என்று சொல்லிக்கொண்டிருந்த நிலையில் கடைசியில் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் என்ற புலி வந்தே விட்டது. பிப்ரவரி 13ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்துள்ளது. இதனையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்துவிட்டன.
இடைத்தேர்தல் என்றாலே மக்கள் குஷியாகிவிடுவார்கள். தமிழகம் இதுவரை பல இடைத்தேர்தல்களை சந்தித்துள்ளது. திருமங்கலம் தொகுதிக்கு கடந்த 2009ஆம் ஆண்டு நடந்த இடைத்தேர்தல்தான் புது பார்முலாவை ஏற்படுத்தியது. பண பலத்தின் தாக்கத்திற்கு சரியான உதாரணமாக இன்றளவும் அது பார்க்கப்படுகிறது.
அதுமுதலே தமிழகத்தில் இடைத்தேர்தல்கள் திருவிழாக்கள் போலவே நடைபெறுகிறது. ஒரு தொகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்றவர் திடீரென மரணத்தை தழுவினால் காலியாக இருக்கும் அந்த தொகுதிக்கு 6 மாதத்திற்குள் தேர்தல் நடைபெற வேண்டும் என்பது விதி. அந்த அடிப்படையில் நான்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன.
ஒருவர் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த காரணத்தால் 5வது முறையாக தமிழகம் இடைத்தேர்தலை சந்தித்தது. தற்போது நடைபெறப்போவது ஊழல் வழக்கில் தண்டனை பெற்றதால் ஸ்ரீ ரங்கம் தொகுதியில் எம்.எல்.ஏவாக இருந்த ஜெயலலிதா பதவியிழந்தார். இதன்காரணமாக காலியாக இருந்த தொகுதிக்கு தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
ஆறாவது இடைத்தேர்தல்
அ.தி.முக., அரசு, 2011ல் பொறுப்பேற்ற பிறகு, தற்போது நடக்க இருப்பது, ஆறாவது இடைத்தேர்தல். ஏற்கனவே, திருச்சி மேற்கு, புதுக்கோட்டை, சங்கரன்கோவில், ஏற்காடு, ஆலந்தூர் தொகுதிகளில், இடைத்தேர்தல் நடந்துள்ளது. ஆலந்தூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த, பண்ருட்டி ராமச்சந்திரன் ராஜினாமா செய்ததால், அந்த தொகுதிக்கு, கடந்த மே மாதம் லோக்சபா தேர்தலுடன் இடைத்தேர்தல் நடந்தது. இந்த இடைத்தேர்தல்களில், அ.தி.மு.க.,வே வெற்றி பெற்றுள்ளது.
2 வது முறையாக
திருச்சி மாவட்டம் சந்திக்க உள்ள 2வது இடைத்தேர்தல் ஆகும். கடந்த தேர்தலில் இந்த தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டு 41848 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவர் 1 லட்சத்து 5 ஆயிரத்து 328 வாக்குகள் பெற்றிருந்தார். அவரை எதிர்த்து தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆனந்த் 63 ஆயிரத்து 480 வாக்குகள் பெற்றிருந்தார். பாரதிய ஜனதா வேட்பாளர் அறிவழகன் 2 ஆயிரத்து 17 வாக்குகள் பெற்றார்.
தேர்தல் களம்
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி தனது எம்.எல்.ஏ பதவியை இழந்தார் ஜெயலலிதா. எனவே 6 மாத காலத்தில் தேர்தலை நடத்த வேண்டிய கட்டாயம் என்பதால் பிப்ரவரி 13ஆம் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
போட்டி யாருக்கு
இந்த தேர்தலைப்பொறுத்தவரை அதிமுகவிற்கும் பாஜகவிற்கும்தான் அதிக போட்டி என்கின்றனர். காரணம் தொகுதியை மீட்டெடுக்க வேண்டும் என்று அதிமுகவும், தங்களின் கணக்கை வரவு வைக்கவேண்டும், வெல்ல முடியாவிட்டாலும் டெபாசிட் பெறவேண்டும் என்றும் என்று பாஜகவும் கருதுகின்றன.
அம்மா தொகுதி
இது அம்மாவின் தொகுதி என்ற எண்ணத்தில் அதிமுகவினர் அத்தனைபேரும் களமிறங்குவார்கள். எண்ணற்ற நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு அதிமுகவின் செல்லப்பிள்ளையாக உள்ளது ஸ்ரீரங்கம் தொகுதி.
அசத்தும் ஸ்ரீரங்கம்
சர்வதேச தரத்தில் சட்டக்கல்லூரி, மிகப்பெரிய மார்கெட், ரங்கநாதர் கோவில் யாத்ரி நிவாஸ், சர்வதேச தரத்தில் சாலைகள், மாணவர்களுக்கு இலவச கம்யூட்டர் பயிற்சி, தமிழ்நாடு காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை,வாழை விற்பனை மையம் என எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தியுள்ளது அதிமுக அரசு.
அதிமுக வேட்பாளர் யார்
அதிமுகவைப் பொருத்தவரை பெண் வேட்பாளர்தான் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருச்சி மேயராக உள்ள ஜெயா ராஜேந்திரன் முதலிடத்தில் உள்ளார். ஸ்ரீரங்கம் கோவிலில் ரங்கநாதருக்கு பூஜை செய்யும் சுந்தர் பட்டரின் மனைவி ஜெயந்தியின் பெரும் அடிபடுகிறது. இவர்களைத்தவிர திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கம் கோட்டத்தலைவர் லதாவின் பெயரும் பரிசீலனையில் உள்ளதாம்.
முத்தரையர் சமுதாயம்
இவர்களைத்தவிர முத்தரையர் சமுதாயத்தை சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான கே.கே.பாலசுப்ரமணியம், ஜெயலலிதா போட்டியிட்டபோது தலைமை ஏஜென்டாக இருந்த செல்வராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர் தமிழரசி சுப்பையா ஆகியோருக்கும் வேட்பாளராகவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறதாம். இளவரசியின் இரண்டாவது மருமகன் ராஜராஜன் பெயரும் வேட்பாளர் பட்டியலில் அடிபடுகிறது.
பிறந்தநாள் பரிசு
வேட்பாளர் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றிபெற வைத்து இந்த ஆண்டு ஜெயலலிதாவிற்கு மிகச்சிறந்த பிறந்தநாள் பரிசாக இதனை சமர்பிக்க வேண்டும் என்று நினைத்துள்ளனர் ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுகவினர்.
களமிறங்கும் திமுக
திமுகவைப் பொறுத்தவரை வெற்றி சரியான வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று நினைக்கிறது. கடந்த முறை போட்டியிட்டு ஜெயலலிதாவிடம் தோற்றுப்போன ஆனந்த்தான் இம்முறையும் வேட்பாளர் என்கின்றனர். இவர் தெற்கு மாவட்ட செயலாளரான நேருவின் ஆதரவாளர் என்பதால் தலைமை இந்த முடிவுக்கு வந்துள்ளது.
பாஜக வேட்பாளர் யார்?
இடைத்தேர்தலில் வெற்றி பெறாவிட்டாலும் இரண்டாவது இடத்தை பெறவேண்டும் என்ற வேகத்தில் உள்ள பாஜக சரியான வேட்பாளரை களமிறக்க நினைக்கிறது. மணச்சநல்லூரில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஆக்ஸ்போர்டு சுப்ரமணியம் களமிறக்கப்படுவார் என்று கூறப்படுகிறது. இல்லையெனில் ஆ.ராசாவின் உதவியாளராக இருந்து 2ஜி விவகாரத்தில் அவருக்கு எதிராக திரும்பி பாஜகவில் இணைந்த ஆசீர்வாதம் ஆச்சாரி வேட்பாளராக்கப்படுவார் என்கின்றனர்.
விட்டுக்கொடுக்குமா தேமுதிக
ஸ்ரீ ரங்கம் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடும் மனநிலையில் இல்லை. வரும் சட்டமன்ற தேர்தலை மனதில் கொண்டு இடைத்தேர்தலில் பாஜக உடன் இணக்கமாக செல்ல நினைக்கிறது தேமுதிக.
நாங்களும் ரவுடிதான்
இந்த போட்டிகளுக்கு இடையே நாங்களும் போட்டி போடுவோம் தனித்து களமிறங்குவோம் என்று அறிவித்துள்ளது காங்கிரஸ் கட்சி. ஆனால் வேட்பளராக யாரை அறிவிப்பார்கள் என்று தெரியவில்லை.
என்னென்ன கலாட்டா
இடைத்தேர்தலுக்கு இன்னும் சரியாக ஒருமாதம் இருக்கிறது. வேட்புமனு தாக்கல் தொடங்கி பிரச்சாரம் வரைக்கும் என்னென்ன கலாட்டக்கள் அரங்கேறப்போகிறதோ? எத்தனை கோடிகள் புரளப்போகிறதோ? அந்த அரங்கநாதனுக்கே வெளிச்சம்.