முருகா.. திருப்பரங்குன்றத்தை யாருக்குப்பா தரப் போற??
திருப்பரங்குன்றம் வெற்றி பெற திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதா?
சென்னை: எப்போது வேண்டுமானாலும் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் வரலாம்... இந்த நினைப்பில்தான் முக்கிய கட்சிகள் களப்பணி கண்டு வருகின்றன.
அதிலும் இங்கு முதல் ஆளாக களமிறங்கியது டிடிவி தினகரன்தான். எல்லா வேலைகளும் கமுக்கவும் அதே நேரத்தில் துரித வேகத்தில் நடைபெற்று வருகிறது.
[லோக்சபா தேர்தல்.. சத்தம் போடாமல் பக்காவாக ரெடியாகிறது திமுக!]
காளிமுத்து மகன்
ஆர்.கே. நகர் என்ற அறிமுகம் இல்லாத தொகுதியில் வெற்றி பெற முடிந்த நமக்கு திருப்பரங்குன்றத்தில் எளிதில் வெற்றி பெற்றுவிடலாம் என்பதே டிடிவியின் எண்ணமாகவும், நம்பிக்கையாகவும் உள்ளது. இந்த கட்சியின் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் காளிமுத்துவின் மகன் டேவிட் அண்ணாதுரையை வேட்பாளராக நிறுத்தப்படலாம் என்ற பேச்சு அடிபடுகிறது.
தங்கதமிழ்செல்வன் முகாம்
இதற்கு முக்கிய காரணம் முக்குலத்தோர் இனத்தை சேர்ந்தவர் என்பதுதான். காளிமுத்துவின் மகன் என்பதாலும், சாதி பின்னணியின் அடிப்படையிலும், நல்ல பேச்சாளரான டேவிட் அண்ணாதுரையை களமிறக்க டிடிவி தினகரன் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக தங்க தமிழ் செல்வன் திருப்பரங்குன்றத்திலேயே தங்கி தேர்தல் வேலைகளை நேரடியாக இறங்கி கண்காணித்தும், அமமுக ஆட்களை முடுக்கிவிட்டும் வருகிறார்.
சைக்கிள் பேரணி
பொதுவாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி தரப்புதான் வெற்றி பெறும். ஆனால் இந்த எண்ணம் ஆர்.கே.நகர் தேர்தலில் சுக்குநூறாக உடைந்து போயிற்று. எனவே இன்னொரு தோல்வியை எதிர்கொள்ள வேண்டிய அவசியம் இல்லாமல் அதிமுக களம் இறங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்காக சதுர்த்தி அன்று பிள்ளையார் சுழி போட்டு அதிமுகவினர் சைக்கிள் பேரணியில் களம் இறங்கினர்.
நத்தம் விசுவநாதன்?
ஆனால் 5000 பேருக்கு பேரணி என்று சொல்லிவிட்டு, கடைசியில் 300 பேர்கூட பேரணியில் பங்கேற்கவில்லையாம். அதுமட்டுமல்லாமல் அந்த சைக்கிள் பேரணியோடு வேறு எந்த களப்பணியிலும் அதிமுக ஈடுபட்டதாக தெரியவில்லை. ஆனால் நிறைய ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியது. தற்போது, அ.தி.மு.க.சார்பில் முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன் போட்டியிடலாம் என்று கூறப்பட்டு அது தற்போது கிட்டத்தட்ட உறுதியும் ஆகிவிட்டது.
ஆர்வம் காட்டவில்லை
ஆனால் திமுக என்ன செய்து கொண்டிருக்கிறதே என்றே யாருக்கும் புரியயே இல்லை. ஆனால் திமுகவை பொறுத்தவரையிலும் இடைத்தேர்தல்களில் இன்னும் ஆர்வம் காட்டவில்லை என்பது பரவலான கருத்து. ஆனால் தற்போது இரண்டு வகையான கருத்துக்கள் நிலவுகிறது.
அழகிரியின் அச்சுறுத்தல்?
அ.தி.மு.க- அ.ம.மு.க, கட்சி தலைமை தங்கள் வேட்பாளர்களை ஓரளவு முடிவு செய்துவிட்ட நிலையிலும் அதேபோல, அக்கட்சிகளை ஒப்பிடும்போது, தி.மு.க. இந்த தொகுதியில் மிகவும் பலவீனமான நிலையில் உள்ளதாகவும் மேலோட்டமாக தெரிகிறது. இதற்கு காரணம் அழகிரியின் அச்சுறுத்தலோ, அல்லது இடைத்தேர்தலை சந்திக்க விருப்பமில்லாமல் நாடாளுமன்ற தேர்தலில் உரிய கவனம் செலுத்தலாம் என்றும் கூறப்படுகிறது.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
மற்றொரு பக்கம், திமுக களமிறங்கிவிட்டால் ஏற்கனவே இங்கு போட்டியிட்ட டாக்டர் சரவணனையே மீண்டும் நிறுத்தலாம் என்றும் பேசப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் ஏற்கனவே திமுகவுக்கு என்று நிலையான ஓட்டு வங்கி திருப்பரங்குன்றத்தில் இருக்கிறது. கருணாநிதி இறந்த பிறகு ஒரு அனுதாப அலையும் கூடவே எழுந்துள்ளது. ஆளும் தரப்பின் மேல் எழுந்துள்ள சில அதிருப்திகளும் கூடியுள்ளதால் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பார்ப்போம்! திருப்பரங்குன்றம் யாருக்கு என்று!!