கர்நாடகாவில் யார் ஆட்சி அமைத்தாலும் நமக்கு தண்ணீர் வழங்க வேண்டும்: டிடிவி தினகரன்
கர்நாடகாவில் ஆட்சியை யார் அமைத்தாலும் தண்ணீர் வழங்க வேண்டும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
Recommended Video
ஈரோடு: கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழகத்திற்கான தண்ணீரை வழங்க வேண்டும் என்று டி.டி.வி.தினகரன் தெரிவித்துள்ளார்.
கொங்குநாடு வேட்டுவ கவுண்டர் இளைஞர் நலச்சங்க 3-வது மாநில மாநாடு மற்றும் புதிய கட்சி தொடக்கவிழா ஈரோடு கருங்கல்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. இதில் புதிய திராவிட கழகம் என்ற புதிய அரசியல் கட்சி தொடங்கப்பட்டது.
இந்த மாநாட்டில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுசெயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியபோது, கொங்கு மண்டலம் புரட்சிதலைவரின் கோட்டை எனவும், தமிழர்கள் வாழ்வு சிறக்க புதிய திராவிட பாதையில் செல்ல வேண்டும் என்றார். ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்பட்டதால் பதவியில் இருந்து இறக்கப்பட்டார் எனவும் தெரிவித்தார்.
இதேபோல் மூலையில் இருந்த பழனிச்சாமியை முதல்வர் ஆக்கியது யார் என்று மக்களுக்கு தெரியும் எனவும் ஆட்சி பொறுப்பில் உள்ள அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் அடுத்த தேர்தலில் டெப்பாசிட் இழப்பார்கள் எனவும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 200 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு டி.டி.வி தினகரன் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
18 சட்டமன்ற உறுப்பினர்கள் குறித்த தீர்ப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில் எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறேன். மேலும் கர்நாடகாவில் ஆட்சி அமைப்பவர்கள் யாராக இருந்தாலும் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய காவிரி நீரை உடனடியாக வழங்க வேண்டும். அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தினர் மீது காவல்துறையினர் திட்டமிட்டு பொய்யான வழக்கு பதிவு செய்வதற்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன். அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி போன்றவர்கள் தொடர்ந்து நெருக்கடிகள் கொடுத்தாலும் அவற்றை சமாளிப்போம்.
இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.