"கமெண்ட்" மூலம் எச்சரிக்கை விடப்பட்டதால் பேஸ்புக்கை விட்டு விலகினாரா சிவக்குமார்?
சென்னை: பழம்பெரும் நடிகர் சிவக்குமார், ஜூன் 20ம் தேதி பேஸ்புக் பக்கத்தில் எழுதிய தீரன் சின்னமலை குறித்த போஸ்ட்தான் அவரது பேஸ்புக் விடைபெறலுக்கு வித்திட்டுள்ளதாக கூறப்படுகிறது. காரணம், அந்தப் பதிவில் கருத்திட்டுள்ள பலரும் சிவக்குமாரின் இளைய மகன் நடிகர் கார்த்திக்கு எச்சரிக்கை விடுத்து கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும் சாதி ரீதியிலான மோதல்களும் கருத்துக்களில் சரமாரியாக காணப்படுகின்றன. இதனால்தான் மனம் வெறுத்துப் போய் சிவக்குமார் பேஸ்புக்கிலிருந்து விடைபெறும் முடிவுக்கு வந்ததாக தெரிகிறது.
சிவக்குமார் எழுதிய தீரன் சின்னமலை குறித்த போஸ்ட் இதுதான்...
வேலு நாச்சியார் பிறந்து 26 வருடம் கழித்து 1756-ல் கொங்கு மண்ணில் பிறந்தவர்- தீரன் சின்னமலை.
இளம் வயதிலேயே கல்வி,கேள்வி - வில்,வாள், சிலம்பம், குதிரை ஏற்றத்தில் தேர்ச்சி....எல்லாச் சாதியினரும் கூட்டாளிகள்.....
மைசூர் திப்பு ஆட்கள் சேலம், தர்மபுரி, சங்ககிரி பகுதியில் கப்பம் வசூல்...
அவர்களைத் தடுத்து நிறுத்தி -வசூல் தொகையை வாங்கிக் கொண்டு -'சிவன்மலை- சென்னிமலைக்கிடையே - சின்னமலை நான்' என்று திப்புவிடம் சொல் என்றார்..பின் 10,000 வீரர்களுடன் மைசூர் சென்று, திப்புவுடன் கைகோர்த்து, பொது எதிரி வெள்ளையனோடு மோதினார்.
கள்ளிக்கோட்டையிலிருந்து 27,000 வீரர்களுடன் வந்து 2 மாதம் போரிட்ட ஜெனரல் ஹாரிஸ், திப்புவைக் கொன்று மைசூரைக் கைப்பற்றினான் . ஊர் திரும்பிய தீரன், ஓடாநிலையில் கோட்டை கட்டி படைபலம் பெருக்கினார்..புதிதாய் வந்த கர்னல் மேக்ஸ்வெல் -'கொங்கு நாட்டை நீ வைத்துக்கொள்.
காவிரிக் கரையில், குதிரைப்படை நிறுத்த அனுமதி கொடு' எனக் கேட்க தீரன் மறுத்தார்...1801 -ல் காவிரி ஆற்றுக்குள் மேக்ஸ்வெல் குதிரைப் படை.. சுழலுக்குள்ளும் பாறை இடுக்குகளிலும் குதிரைகள் சிக்கித் தத்தளிக்க - தீரன் அந்தக் குதிரைகளை வெட்டிச் சாய்த்தார்...
1802 -ல் பழிவாங்க, ஓடாநிலை கோட்டையில் முற்றுகைப் போர்..தீரன் கையாள் கருப்பன் சேர்வை தலையை, மேக்ஸ்வெல் வாள் பதம் பார்க்க,பாய்ந்து சென்ற தீரன், இளநி போல், கர்னல் தலையைச் சீவி, கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி - கட்டை வண்டியில் தலையை ஊர்வலமாக எடுத்துச் சென்றார்..
மைசூர், ஜென்ரல் ஹாரிஸ், இப்போது இங்கே...1804 - அரச்சலூர் அம்மன் திருவிழா..3000 வீரர்களுடன் ஹாரிஸ்... ஷூ காலில் கோயிலுள் சென்று தேரை உடைத்தான்... செய்தி எட்டிட ஒற்றை ஆளாக, எறிகுண்டுகளுடன் குதிரையில் வந்து, அத்தனை வீரர்களையும் எறிகுண்டால் தாக்கி,விரட்டினார் தீரன்.
அவமானப்பட்ட ஹாரிஸ் -சென்னையிலிருந்து 70 பீரங்கிகள்- கள்ளிக்கோட்டையிலிருந்து, யுத்த தளவாடங்களுடன் வந்து, அதிகாலை 4 மணிக்கே கோட்டையைத் தாக்கி உள்ளே நுழைந்தால்.! .ஈ காக்கை அங்கு இல்லை. அறுந்து போன செருப்புகளின் அடிப்பகுதியில் -மைசூரில் கைதாகி அப்ரூவரான,தீரனின் வலது கரம் வேலப்பன்- உளவாளியாக இருந்து- அவ்வப்போது கள்ளிக் கோட்டையிலிருந்து தீரனுக்கு ரகசியமாகச் செய்தி அனுப்பிய கடிதங்கள்.!! அடுத்த கணம், செருப்புத் தைத்த பொல்லான், ரகசியம் சொல்ல மறுக்க, கோட்டை மீது வைத்து சுட்டுக் கொன்றனர்...அடுத்து வேலப்பன் தலை தரையில் உருண்டது....
சின்னமலை எங்கே ? பழனி கருமலைப் பகுதியில் தலை மறைவு.அங்கே தேடுதல் வேட்டை.. திண்டுக்கல் ஷேக் ஹுசைன் வீட்டு திருமணத்திலும் மாறு வேடத்தில் தப்பி விட்டார்.. வெறிநாயைப் போல் வெள்ளையர் தேடல்.. காட்டுக்குள் ஒரு குடிசை !! நல்லான் சமையல். அவனை நம்பி, ஆயுதங்களை வாசலில் வைத்துவிட்டு சாப்பிட இலையில் உட்கார, 200 வீரர்கள் சுற்றி வளைத்து கைது.. துரோகி நல்லான் காட்டிக் கொடுத்துவிட்டான். 1805 -ஜூலை 31-ந்தேதி சங்ககிரிக்கோட்டை உச்சியில், தம்பி கிலேதருடன், தீரன் சின்னமலை நாட்டு விடுதலைக்காக தூக்குக் கயிறை முத்தமிட்டார்!!
இந்த கட்டுரைக்கு ஏராளமான பதில்கள் வந்துள்ளன. அதில் பாதிக்கும் மேற்பட்டவை சாதி ரீதியிலான கருத்துக்கள். நேரடியாகவும், மறைமுகமாகவும் அவை சிவக்குமாரை விமர்சித்துள்ளன. நடிகர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் குறிப்பிட்ட சாதியை விமர்சித்ததையும் கண்டித்து கருத்துக்கள் இடம் பெற்றுள்ளன.
இதனால்தான் சிவக்குமார் மனம் வெறுத்துப் போய் பேஸ்புக்கிலிருந்து விடைபெற்றுள்ளதாக கருதப்படுகிறது.