என்னடா இது அதிமுவுக்கு வந்த "பெருங்காய" சோதனை.. பதவி வேணாம்னு சொல்றாங்களே!!
சென்னை: அதிமுகவில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரே ஒரு கனவுதான் இருக்கும். எப்படியாவது ஒரு பதவியைப் பெற்று பல தலைமுறைகளுக்கு தேவையானதை சேர்த்து விட வேண்டும் என்பதே அது. ஆனால் தற்போது அது தலைகீழாக மாறி வருவது அதிமுகவினருக்கே கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது.
மற்ற கட்சிகளை விட அதிமுகவில் பதவி என்பது ஜெயலலிதா காலம் வரை ஜாக்பாட் புதையல் போலத்தான் இருந்தது. பதவி கிடைத்தால் போதும் பல தலைமுறைக்கு சொத்து சேர்த்து விடலாம். அந்த அளவுக்கு அது அட்சயப் பாத்திரம் போல இருந்தது.
அதிமுகவில் ஒரு சாதாரண வார்டு கவுன்சிலர் கூட பெரும் கோடீஸ்வரராக வலம் வருவதைப் பார்க்கலாம். அந்த அளவுக்கு பணம் சம்பாதித்துத் தரும் கருவி போலத்தான் அதிமுகவில் பதவி என்பது. அமைச்சர் பதவியெல்லாம் எந்த ரேஞ்சுக்கு என்பதை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
நிலைமை தலைகீழ்
ஆனால் இன்று நிலைமை தலைகீழாக உள்ளது. தினகரன் தரும் பதவி தேவையில்லை என்று தூக்கிப் போட்டு வருகின்றனர் எம்எல்ஏக்கள். இதுவரை 3 எம்.எல்.ஏக்கள் தினகரன் கொடுத்த பதவி தங்களுக்குத் தேவையில்லை என்று கூறி விட்டனர்.
ஜெ. கொடுத்த பதவியே போதும்
சத்யா பன்னீர் செல்வம், பழனி மற்றும் ஏ.கே.போஸ் ஆகிய மூன்று எம்.எல்ஏக்களுமே தினகரன் கொடுத்த கட்சிப் பதவிகளை வேண்டாம் என்று கூறி விட்டனர். அதிமுக வரலாற்றில் இது ரொம்பப் புதுசு, வினோதமானதும் கூட.
எம்ஜிஆர் - ஜெ. காலத்தில்
எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் கட்சிப் பதவிக்காக கடுமையாக முட்டி மோதுவார்கள். பணத்தை கொட்டிக் கொடுக்க தயாராக இருப்பார்கள். சொத்தையெல்லாம் விற்று கட்சிப் பதவி வாங்கியவர்களை அதிமுக வரலாறு பார்த்துள்ளது. ஆனால் இப்போது நடப்பது வித்தியாசமாக உள்ளது.
இதற்கும் காரணம் பணம், பதவிதான்
தினகரன் கட்சிப் பதவி கொடுத்தாலும் அதை மறுப்பதற்கும் ஒரு முக்கியக் காரணம் உள்ளது. அதுவும் பணம் பதவிதான். அதாவது தினகனரிடம் ஆட்சி அதிகாரம் இல்லை. எனவே கட்சிப் பதவியை வைத்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாது. அதுவே எடப்பாடியுடன் இருந்தால் பணம் சம்பாதிக்கலாமே.. இதுதான் பதவியை மறுப்பவர்களின் லாஜிக்காக இருக்க முடியும்.
ஓபிஎஸ் கொடுத்தாலும் வாங்க மாட்டார்கள்
இதே பதவிகளை ஓபிஎஸ் கொடுத்தாலும் இவர்கள் யாரும் வாங்க மாட்டார்கள். காரணம், ஓபிஎஸ் பதவியில் இல்லை, அதிகாரத்தில் இல்லை. அதேசமயம், எடப்பாடி பழனிச்சாமி என்ன பொறுப்பு கொடுத்தாலும் தட்டாமல் வாங்கிக் கொள்வார்கள். காரணம், அதை வைத்து சம்பாதிக்க முடியும் என்பதால்.
மொத்தத்தில் காசு பணம் துட்டு மணி.. பவர்!
இப்போது தினகரன் தரும் பதவியை வேண்டாம் என்று சொல்பவர்கள் யாரும் கொள்கை ரீதியில் எந்த முடிவையும் எடுத்தவர்கள் கிடையாது. போஸ் பேசியதைக் கேட்டிருந்தாலே அதை புரிந்த கொள்ள முடியும். பணம் கூடவே அதிகாரம். இது எங்கிருந்தாலும் அங்கு போய் ஒட்டிக் கொள்ளக் கூடியவர்கள்தான் இவர்கள். அதிமுக இதை மீண்டும் நிரூபித்துள்ளது.
இப்ப தெரியுதா இந்த ஆட்சி ஏன் இன்னும் கவிழாமல் நீடித்து வருதுன்னு. பணம் பாஸ் பணம்!