வேல்முருகனை கழற்றிவிட்டதால் நெய்வேலியையும் என்எல்சி யூனியன் அங்கீகாரத்தையும் பறிகொடுத்த அதிமுக
கடலூர்: சட்டசபை தேர்தலில் கடைசி நேரத்தில் கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை கழற்றிவிட்டதன் பயனை இப்போது அதிமுக நன்றாகவே உணரத் தொடங்கிவிட்டது. அதுவும் ஆளும் கட்சியாக இருந்து கொண்டு என்.எல்.சி.யில் தொழிற்சங்க அங்கீகாரத்தை பறிகொடுத்திருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.
சட்டசபை தேர்தலில் கடைசிவரை அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அக்கட்சியின் தலைவர் வேல்முருகனுடன் பல கட்ட தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்தியது அதிமுக.
குறைந்தது 5 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று வேல்முருகன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் அதிமுகவோ அதிகபட்சமாக 2 தொகுதிகளைத்தான் தர முடியும் என கறாராக நின்றது. இதனால் கடைசி நேரத்தில் அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வெளியேற்றப்பட்டது.
நெய்வேலி தொகுதியில்...
தேர்தலுக்கு 25 நாட்களே இருந்த நிலையில் தனித்து போட்டியிட்டது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. நெய்வேலி தொகுதியில் பண்டிருட்டி வேல்முருகன் தனித்து போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுகவுக்கு பலத்த அதிர்ச்சி காத்திருந்தது. திமுகவின் சபா ரத்தினமும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் பண்ருட்டி வேல்முருகனும்தான் கடுமையான போட்டி காட்டினர்.
2-வது இடத்தில் அதிமுக
கடைசி சில சுற்றுகளில்தான் வேல்முருகனை விட சற்று கூடுதலான வாக்குகளை பெற்று அதிமுக வேட்பாளர் ராஜசேகர் 2-வது இடத்துக்கு முன்னேறினார். கடைசியாக திமுகவின் சபா ராஜேந்திரன் 54,299 வாக்குகளையும் அதிமுகவின் ராஜசேகர் 36,058; வேல்முருகன் 30,528 வாக்குகளைப் பெற்றனர். அதிமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி நீடித்திருந்தால் நெய்வேலியில் மிக எளிதாக அதிமுக அணி வென்றிருக்க முடியும். இதேபோல் வாழ்வுரிமைக் கட்சியின் வாக்குகள் கிடைக்காமல் போனதால் மேலும் சில தொகுதிகளையும் அதிமுக இழந்தது.
என்.எல்.சி.யில் அங்கீகாரம் பறிபோனது
தற்போது என்.எல்.சி. தொழிற்சங்கத் தேர்தலில் சிஐடியூ, தொமுச, அண்ணா தொழிற்சங்கம் என 6 தொழிற்சங்கங்கள் போட்டியிட்டன. இதில் சிஐடியூவை வேல்முருகன் கட்சியின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம் ஆதரித்தது. இத்தேர்தலிலும் அதிமுக 3-வது இடத்துக்குத்தான் போய் தொழிற்சங்க அங்கீகாரத்தை இழந்துவிட்டது.
391 வாக்குகள்தான்...
இத்தனைக்கும் திமுகவின் தொமுசவுக்கும் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கத்துக்குமான வாக்கு வித்திசாயம் 391 தான். வேல்முருகனின் தொழிலாளர் வாழ்வுரிமை சங்கம், அதிமுக அணியில் இருந்திருந்தால் திமுகதான் தொழிற்சங்க உரிமையை இழந்திருக்கும் நிலை உருவாகியிருக்கும் என்று சுட்டிக்காட்டுகின்றனர் என்.எல்.சி. தொழிலாளர்கள்.