வேகமாக துண்டு போடும் அதிமுக தலைகள்.. ரஜினிக்கு புகழாரம்.. சசிகலாவுக்கும் ஜால்ரா.. என்ன மேட்டர்?!
ரஜினிக்கு சில அதிமுக அமைச்சர்கள் புகழாரம் சூட்ட தொடங்கி உள்ளனர்
சென்னை: நடப்பதை எல்லாம் எப்படி எடுத்து கொள்வது என்று தெரியவில்லை.. ஆளாளுக்கு ரஜினி புகழ் பாடுவது அதிமுகவுக்குள் ஆரம்பமாகி உள்ளது.. எதற்காக இது? என்ன காய் நகர்த்தல்? யாரை சமாளிக்க? யாரை தூக்கி பிடிக்க? ரஜினியா? சசிகலா? அல்லது இவர்கள் இரண்டு பேரின் பின்னணியில் உள்ள பாஜகவா?
கூடிய சீக்கிரம் தேர்தல் வர போகிறது.. அதற்கான பேச்சுவார்த்தைகள், கூட்டணி விவகாரங்கள் என இப்போதே சில சமாச்சாரங்கள் கசிந்து வருகின்றன.
அந்த வகையில், பாஜக மிக மிக தீவிரமாகவே உள்ளது.. ரஜினிகாந்த ஒரு பக்கம் வைத்தும், சசிகலாவை மறு பக்கம் வைத்தும் பிளானிங் நடப்பதாக சொல்கிறார்கள்.
நீங்க வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.. ஆனால்...! டுவிட்டரில் கெஜ்ரிவால் மோடி நெகிழ்ச்சி உரையாடல்கள்!
ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் என்று எடுத்து கொண்டால் இவரை பாஜக எப்படி கையாள போகிறது என தெரியவில்லை.. அதே சமயம், தனியாக கட்சி ஆரம்பித்தாலும் சரி, பாஜகவுடன் சேர்ந்தாலும் சரி, எதுவாக இருந்தாலும் பின்னாளில் நமக்கு உதவும் என்றே சில அமைச்சர்கள் தயாராகி விட்டனர் போல தெரிகிறது. அதனாலேயே ரஜினிகாந்த்தை மானாவாரியாக புகழ்ந்து தள்ள ஆரம்பித்துள்ளனர்.
மா.பா பாண்டியராஜன்
துக்ளக் விழாவின்போது, ரஜினி பேசியது தவறு என்று சொன்னது வைகைசெல்வன், ஜெயக்குமார் போன்றோர் மட்டுமே.. மற்றவர்கள் இதை பற்றி வாயே திறக்கவில்லை.. இதில் மா.பா.பாண்டியராஜன் ஒருபடி மேலே போய், "நான் சிறுவயது முதலே துக்ளக் படிக்கிறேன். அந்த வகையில் துக்ளக் படிப்பவர்கள் அறிவாளிகள் என்று கூறிய ரஜினியின் கருத்தை ஆதரிக்கிறேன்," என்றார்.
விஜய் ரசிகர்கள்
இதையடுத்து ராஜேந்திர பாலாஜி நேற்று முன்தினம் பேசும்போது, ரஜினிக்கு நிகர் அஜித் என்றார்.. அஜித் அரசியலுக்கு வரப்போவதில்லை என்றாலும், அரசியலுக்கு வர உள்ளதாக கருதப்படும் விஜய்க்கு எதிரான ஒரு கருத்தைதான் இது பிரதிபலித்தது! விஜய் அரசியலுக்கு வருவதாக ஒரு பேச்சு உள்ளதால், அதை மட்டுப்படுத்துவது போலவும், ரஜினியை உயர்த்தி பிடிப்பது போலவும் தென்பட்டது!
ரஜினி ராசி
இவருக்கு அடுத்தபடியாக அமைச்சர் உதயகுமார்... "ரஜினிகாந்த் மதுரையில் அரசியல் கட்சி ஆரம்பித்தாலும் கூட அவரின் ராசி எவ்வாறு உள்ளது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அவர் அரசியலுக்கு வருவதை நாங்கள் மனதார வரவேற்கிறோம்" என்றார். இவர்கள் எல்லாருமே அதிமுகவின் அமைச்சர்கள்.. யாரும், எந்த கருத்தையும் பேசி வைக்காதீர்கள் என்று முதல்வர் உத்தரவிட்டும், தொடர்ந்து இவ்வாறு கருத்துக்களை உதிர்த்து வருகின்றனர்.
அபிமானிகளா?
கட்சியே ஆரம்பிக்காத ரஜினிக்கு ஏன் இவ்வளவு ஆதரவு? அதிமுக அமைச்சர்களில் சிலர் ரஜினியை ஆதரிப்பது என்பதை ரஜினி ரசிகர்கள் என்று பார்ப்பதா? அல்லது ரஜினியை உயர்த்தி பிடித்தால் பாஜகவின் அபிமானத்தை பெறுவதற்காக என்று எடுத்து கொள்வதா தெரியவில்லை. அதுவும் ராஜேந்திர பாலாஜியின் பேச்சுக்கள், பேட்டிகளை பார்த்தால் பாஜகவை நோக்கி நகர்வதுபோலவே அமைந்து வருகிறது! இதே ராஜேந்திர பாலாஜிதான் "சசிகலா விரைவில் சிறையிலிருந்து வர வேண்டும் என்பதே எனது பிரார்த்தனை" என்றார்.
குடைச்சல்கள்
அதனால் அதிமுக அமைச்சர்களின் பேச்சு சசிகலாவின் வருகையை எதிர்நோக்கியா? அல்லது ரஜினியின் அரசியல் கட்சியை முன்வைத்தா? அல்லது இவர்களுக்கு பின்னிருந்து இயக்கும் பாஜகவை தாஜா செய்வதற்கா என தெரியவில்லை. ஆனால், எப்படி பார்த்தாலும் எடப்பாடியாருக்கு இது பெரிய குடைச்சலைதான் தரும் என்று தெரிகிறது. மற்றொரு புறம் பார்த்தால், ரஜினிக்கு ஆதரவாக பேசுபவர்கள் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என்பது போன்ற தோற்றமும் ஏற்பட்டுள்ளது.. அதனால் இந்த நூல்விடும் பேச்சுக்கு அச்சாரம் யார் என்றுதான் பிடிபடவில்லை!