ஜிஎஸ்டி வரிக்கு எதிராக விஜய், அஜித் குரல் கொடுக்காதது ஏன்? ஜெயம் ரவி
சென்னை: ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் குரல் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிக்கும் வகையில் ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டுள்ளது என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிலும் சினிமா தியேட்டர்களுக்கு 28 சதவீதம் வரி விதித்துள்ளது மத்திய அரசு. இதனுடன் தமிழக அரசு கேளிக்கை வரியாக 30 சதவீதம் விதித்துள்ளது. இதனால் தியேட்டர்களில் டிக்கெட் கட்டணம் 58 சதவீதம் உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வரி விதிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழகம் முழுவதும் கடந்த 4 நாட்களாக தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் ஜிஎஸ்டி வரிக்கு எதிராக நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் குரல் கொடுக்காதது வருத்தம் அளிப்பதாக நடிகர் ஜெயம் ரவி தெரிவித்துள்ளார். இதுகுறித்து சென்னை சாலிகிராமத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் தமிழ் திரைத்ததுரைக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதன் காரணமாக தான் திரையரங்கு உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என்று கூறினார்.
மேலும் விஜய், அஜித் போன்ற பிரபல நடிகர்கள் ஜி.எஸ்.டிக்கு எதிராக குரல் கொடுக்கவில்லை. திரையுலக்கிற்கு பிரச்சினை ஏற்பட்டால் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். தமிழ் திரை உலகினரிடையே ஒற்றுமை இல்லை. இதனால் திரையுலகில் உள்ள பல பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாமல் இருக்கிறது என்றார்.