தமிழை தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது.. பாஜகவுக்கும் அது புரியும்!
பாஜக தலைவர்களுக்கு தமிழ் மொழிமேல் அக்கறை வர என்ன காரணம்?
சென்னை: இது காலம் வரை திராவிடக் கட்சிகள் மட்டுமே தமிழை இறுகப் பற்றியிருந்தன. ஆனால் இன்று பாஜகவினருக்கு திடீர் தமிழ்ப் பற்று ஊற்றெடுக்க ஆரம்பித்திருக்கிறது.
இதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. காரணம், தமிழைத் தொடாமல் இனி யாரும் பிழைக்க முடியாது என்ற நிதர்சனத்தை பாஜகவினர் புரிந்துள்ளனர்.. அதை விட முக்கியமாக தேர்தல் நெருங்கி வருகிறது! சமஸ்கிருதத்தை தாலாட்டும் வேலையை கடந்த 4 ஆண்டுகளாக சிறப்பாக செய்தது மத்திய பாஜக. சாலையோரங்களில் நடப்படும் மைல்கற்களில் ஹிந்தியை புகுத்தியது.
பாமரனுக்கு புரியுமா?
எங்கோ குக்கிராமத்தில் தமிழே படிக்காத பாமரனுக்கு எப்படி கல்லில் எழுதி வைக்கும் ஹிந்தி எழுத்து புரியும் என்பதை பாஜகதான் விளக்க வேண்டும். தனியார் பள்ளி, கல்லூரிகளில் சமஸ்கிருதங்கள் நுழைந்தன. அதேபோல, குடியரசு தலைவர் விருது மற்றும் மஹரிஷி பத்ராயன் வியாஸ் சம்மான் விருதுகளில் தமிழ் புறக்கப்பட்டது.
தமிழ்மொழி அஸ்திரம்
இதைத்தான் ராகுல் கடுமையாக கண்டித்தார். தமிழா்கள் தங்கள் மொழியிலிருந்து பிற மொழிக்கு மாறுமாறு நிர்பந்திக்கப்படுகிறார்கள் எனவும், தமிழா்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுகிறது என்றும் பகிரங்கமாகவே குற்றம் சாட்டினார். இப்படி ராகுல் புகார் கூறியதையடுத்துதான் கொஞ்சம் கொஞ்சமாக மத்திய பாஜக தமிழ் மொழியையும் தங்களுக்கான ஒரு அஸ்திரமாக கையில் எடுத்தது.
ஹிந்தியை வளருங்கள்
கடந்த மாதம் மோடி மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசும்போது தமிழ் மொழி போல தொன்மையான மொழி எதுவும் இல்லை என்றார். மோடி இப்படி சொன்னதும் நாட்டு மக்கள் எல்லோருமே ஷாக் ஆகிவிட்டனர். முக்கியமாக நாம்!! ஆனால் அந்த ஷாக் அடுத்த வாரமே பொசுங்கி போனது. மற்றொரு நிகழ்ச்சியில் "அரசு அதிகாரிகள் எல்லோரும் தப்போ, ரைட்டோ ஹிந்திலேயே பேசுங்கள், சுத்தமான ஹிந்தியில் பேசிவிடப் போகிறீர்கள். வழக்கமான ஹிந்தியே பேசுங்கள். அப்போதுதான் ஹிந்தி மொழி வளரும்" என்றார் மோடி.
வாஜ்பாய் அளித்த சிறப்பு
ஆனால் வடமாநிலங்கள், குறிப்பாக வடமாநில தலைவர்களை பொறுத்தவரை, இந்தி மற்றும் சமஸ்கிருதத்தைவிட சிறந்த மொழி உலகில் இல்லை என்ற இறுமாப்பு மேலோங்கியே இருக்கிறது. இது போதாதென்று நாடாளுமன்றத்திலும் இந்த மொழி சார்ந்தோரின் எண்ணிக்கையும் அதிகம் என்பதால் ஆட்டம் அதிகமாகவே இருந்தது.. இருந்தும் வருகிறது. ஆனால் இதிலிருந்து விதிவிலக்காக இருந்தவர் மறைந்த வாஜ்பாய்தான். தமிழ்மேல் அவருக்கிருந்த மரியாதையை இதே இந்துத்துவா அன்று நேரிடையாக பார்த்து வாயடைத்தும் போனது.
தருண்விஜய்
வாஜ்பாயை தொடர்ந்து அவரது வழிவந்த தருண்விஜய் மட்டுமே தமிழின் சிறப்பு பற்றி பாராளுமன்றத்தில் பகிரங்கமாக உரையாடி, திருவள்ளுவர் நாளை இந்திய மொழிகள் நாளாக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தார். இத்தனைக்கும் தருண் விஜய் சமஸ்கிருதத்தை அடிப்படையாக கொண்ட உத்திரகாண்ட் மாநிலத்தை சேர்ந்தவர்.
இனிமையான மொழி
ஆனால் தற்போதைய பாஜக தலைவர்கள் இப்படித்தான் தமிழுக்காக பேசுகிறார்களா, ஆதரிக்கிறார்களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். தமிழின் மேன்மை பற்றி பேச இப்போது சிலர் பாஜக தரப்பில் கிளம்பி இருக்கிறார்கள். ஏற்கனவே மோடி தமிழை பாராட்டிவிட்டதால் தன் தரப்புக்கும் பேச வேண்டுமே என்ற ஆளுநர் "தமிழ் மொழி இனிமையான மொழி. தமிழ் மொழியை நான் விரும்புகிறேன்" என்றார்.
தெரிந்த சமாச்சாரம்
இவர்கள் இருவரும் பேசிவிட்டதால் நாமளும் ஒரு வார்த்தையை பேசி வைப்போம் என்று பி.ஜே.பி-யை சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவும் தமிழ் மொழியை உயர்த்தி பிடித்து பேசினார். இவர்கள் மட்டுமல்ல, பாஜக வட இந்திய , பிற மாநிலத் தலைவர்களும் தமிழ் மீது காதல் கொள்ள ஆரம்பித்துள்ளனர். இதற்கு என்ன காரணம்? தமிழ்மொழிதான் காலங்காலமாகவே இருந்து வருவது தெரிந்த சமாச்சாரம்தானே?
தேர்தல் கணக்கு?
இவ்வளவு காலம் இல்லாமல் இப்போது ஏன் வரிசை கட்டிக் கொண்டு பாஜக புகழ வேண்டும்? வரப்போகும் தேர்தலை கணக்கு பண்ணியா? பாஜக தரப்பில் தேர்தலை முன்னிறுத்தி இப்படி ஒரு கணக்கு போட்டால், அதை வைத்து நம் மக்கள் வேறு கணக்கு போடுவார்கள் என்றுகூடவா இவர்களுக்கு தெரியாமல் போய்விட்டது. ஆனால் உண்மை அதுதான்.. தேர்தல் கணக்கு மட்டுமே இதில் உள்ளது. காரணம், தமிழைத் தொடாமல் தமிழகத்தில் குப்பை கூட கொட்ட முடியாது.
வணக்கம்
தமிழ் வளம், தமிழ் சிறப்பு, தமிழ் இனிமை, தமிழ் தொன்மை என்று வரிந்து கட்டி பேசி வரும் பாஜக வடமாநில தலைவர்கள், இதுவரை பொதுக்கூட்டங்களில் இன்னும் "வணக்கத்தை" தாண்டவில்லை என்பதே உண்மை.