பப்ளிசிட்டிக்காக எதையும் செய்வதா? தே.. பயலே வார்த்தை எப்படி உருவானது தெரியுமா?
Recommended Video
சென்னை: 'தேவடியா பயலே' என்ற வார்த்தையை ஜோதிகா கதாப்பாத்திரம் பேசியதன் மூலம், இயக்குநர் பாலாவின் புது திரைப்படமான 'நாச்சியார்' சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
ஜோதிகா இவ்வாறு பேசுவதை போல டீசரின் இறுதியில் காட்சி உள்ளது. பாலா ஒரு யதார்த்த இயக்குநர் என்றும், உண்மையிலேயே சில போலீசார் இப்படித்தான் பேசுவதாகவும், எனவே பாலா அதை படத்தில் வைத்ததாகவும் சப்பை கட்டுகள் அவரது ரசிகர்களால் முன் வைக்கப்படுகிறது.
பாலாவின் படங்களில் பெரிதாக டீசன்சி எதிர்பார்க்க முடியாது என்பதே பழைய படங்கள் உணர்த்தும் பாடம். 'அவன் இவன்' படத்தில், 'ஆய்' போவது பற்றிய வர்ணனை போன்ற பல காட்சிகளை இதற்கு உதாரணமாக சொல்ல முடியும்.
பப்ளிசிட்டி
ஆனால், பச்சையாக ஒரு கெட்ட வார்த்தையை படத்தில் உபயோகித்திருப்பது சமூக நலனுக்காகவோ அல்லது யதார்த்தத்திற்காகவோ இருக்க முடியாது. வெறும் பப்ளிசிட்டிக்காகத்தான் இருக்க முடியும் என்கிறார்கள் சினிமா உலகை உற்று கவனித்து வருவோர்கள்.
தேவதாசி முறை
தேவடியா என்ற வார்த்தையின் மூலம் எது என்பது கவனிக்கப்பட வேண்டியது. தேவரடியார் என்ற பெயரில் அமலில் இருந்த தேவதாசி முறைதான் தேவடியா என மாற்றப்பட்டதாக தமிழ் அறிஞர்கள் கூறுகிறார்கள். பல ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள உருவாக்கப்பட்ட ஒரு கட்டமைப்புதான் இது.
இழிவு செய்யலாமா
தமிழகத்தில் தற்போது தேவதாசி முறை ஒழிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த பெயரை பெண்களை இழிவுபடுத்த பயன்படுத்துகிறார்கள். எனவே இப்படிப்பட்ட வார்த்தைகளை பயன்படுத்துவது என்பது அநாவசியமான ஒன்று. மேலும் பெண்களை இழிவுபடுத்துவதுதான் அந்த வார்த்தை.
பரப்புவது சினிமா
சமூகத்தில் அந்த வார்த்தை பயன்படுத்தப்படுகிறது என்பதற்காக அதை வெள்ளித்திரைக்கு கொண்டு வந்து அம்பலப்படுத்த அவசியம் இல்லை. ஏங்கோ ஓரிடத்தில் இன்செஸ்ட் நடப்பதால் அதையே திரைப்படத்தில் காண்பித்து பிறர் மனதை கெடுப்பதை போன்றதுதான் இதுபோன்ற வார்த்தை பிரயோகமும்.
மக்களை கெடுப்பதா
கல்லூரிகளில் காதல் செய்வது கட்டாயம், புகை பிடிப்பது கட்டாயம், பெண்களை துரத்தி சென்று காதலிக்க வைப்பது அவசியம் என்றெல்லாம் பாடம் நடத்தி அதை மக்களிடம் பரப்பிய திரைத்துறை இப்போது கெட்ட வார்த்தையை கட்டாயப்படுத்தி உள்ளது. ஆங்கில படங்களில் இதுபோன்ற வார்த்தை பயன்படுத்தப்ப்டுகிறதே என்ற அதிமேதாவிகள், ஆங்கில கலாசாரத்தில் நாம் வாழவில்லை என்பதை உணர வேண்டும். இதே வார்த்தையை கிராமத்தில் ஒருவர் மற்றொருவரை பார்த்து கூறினால் அது கொலையில் சென்று முடியும் என்ற யதார்த்தம் இவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.
வித்தியாசமான பப்ளிசிட்டி
படத்தின் விளம்பரத்திற்காக எதையும் செய்யலாம் என்ற நிலை வந்துள்ளது ஆபத்தானது. பிறர் கவர்ச்சி நடனம் வைத்து ரசிகர்களை ஈர்க்கிறார்கள். பாலா வித்தியாசமானவர் என்பதால் வார்த்தைகளில் வித்தியாசம் காண்பிக்கிறார் என்றுதான் இதை எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது. மிகச்சிறந்த இயக்குநராக வர வேண்டிய பாலாவும் இப்படி மார்க்கெட் யுக்திக்காக தன்னை வளைத்துக்கொண்டது அவரது ரசிகர்களுக்கே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.