ஏன் தடை போட்டீங்க? அப்புறம் ஏன் காசு வாங்குனீங்க?: பான் மசாலா, குட்கா விவகாரத்தில் புரியாத புதிர்கள்
குட்கா, பான் மசாலாக்களுக்கு தடை போடுவது போல போட்ட அதிமுக அரசு அதை வைத்து காசு சம்பாதித்துள்ளது வெட்டவெளிச்சமாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட சுவைக்கும் புகையிலை பொருட்களை விற்க அதிமுக அரசு தான் தடை கொண்டு வந்தது, ஆனால் சமீபத்தில் சிக்கிய ஒரு டைரி அதே அதிமுகவைச் சேர்ந்த சுகாதாரத்துறை அமைச்சர் குட்கா விற்பனை செய்ய லஞ்சம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம், குட்கா, பான் மசாலா போன்ற சுவைக்கும் புகையிலைப் பொருட்களைத் தயாரிக்கவும், சேமித்து வைக்கவும், விநியோகம் செய்யவும், விற்கவும் தடை விதித்து சட்டசபையில் விதி 110ன் கீழ் கடந்த 2013ம் ஆண்டு அறிவிப்பை வெளியிட்டார்.
இதனைத் தொடர்ந்து தடை ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு கடந்த ஆண்டும் மேலும் ஓராண்டிற்கு தடையை நீட்டித்து உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயம் அறிவித்தது. எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் உணவுப் பொருளில் இருக்கக் கூடாது என்றும் புகையிலை, அதாவது Tobacco மற்றும் நிக்கோட்டின் Nicotine ஆகியவற்றை உணவுப் பொருளில் சேர்க்கக் கூடாது என்றும் விதிமுறை அறிவிக்கப்பட்டது.
புது திணுசா லஞ்சம்
ஆனால் பான், குட்கா விற்பனை தடை செய்யப்பட்ட காலகட்டத்தில் தமிழகத்தில் விற்பனைக்கு அனுமதிக்க சுகாதாரத்துறை அமைச்சர் லஞ்சம் பெற்றார் என்பதை சொல்லும் வருமான வரித்துறையின் ஆவணம் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. கடந்த 2015-2016 ஆண்டில் தீபாவளி, பொங்கல் பண்டிகை போனஸாகவும், மாதந்திர தொகையாகவும் 40 கோடி ரூபாய் வரை லஞ்சமாக அதிகாரிகளுக்கு தரப்பட்டது என்று டைரியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்லா கட்டியவர்கள் பட்டியல்
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாதந்தோறும் ரூ. 14 லட்சம் பெற்றதாக ஆவணங்கள் கூறுகின்றன. அமைச்சர் மட்டுமில்லீங்க அந்த காலகட்டத்தில் சென்னை காவல்துறை ஆணையர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், மாநகராட்சி அதிகாரிகள் என அனைத்து தரப்பினரும் தலையை சொரிந்து கமுக்கமாக காசு வாங்கி கல்லா கட்டியுள்ளனர்.
பகீர் பக்கம்
அவங்க காசு வாங்குனது எதுக்கு தெரியுமா உடல்நலத்திற்கு தீங்கானது என்று அதிமுக அரசின் முதல்வராக இருந்த ஜெயலலிதா போட்ட தடைக்கு எதிராக விற்பனை நடத்தத்தான். ஒரு சில பக்கங்களிலேயே பல பகீர் கிளம்புதே இன்னும் அடுத்தடுத்த பக்கங்களை திருப்பினால் தான் அதிமுக அமைச்சர்களின் வண்டவாலம் தெரியும்.
எடுப்போமா?
வருமான வரித்துறை அனுப்பிய ஆவணங்கள் அடிப்படையில் மேல்விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளது. இவங்க அரசாங்கத்துலயே தடையும் போட்டு, அதை கள்ள மார்க்கெட்டில் விற்க காசும் வாங்கும் கொடுமையை என்னவென்று சொல்வது. அதுவும் சுகாதாரத்துறையை அமைச்சரே காசு வாங்குவதற்கான பிள்ளையார் சுழியை போட்டுள்ளார் என்பது தான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி.
சிறப்பான ஆட்சி நடத்துறீங்கப்பா
அதெல்லாம் இருக்கட்டும் இந்தப் புகாருக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது. இது வரைக்கும் என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறோம் அதையே தான் இதற்கு என்று முதல்வர் பழனிசாமியின் மைண்ட் வாய்ஸ் கேட்குதா மக்களே! அமைச்சர் சரோஜா மீது லஞ்சப்புகார், தொழிலதிபர் சேகர் ரெட்டியோடு தொடர்பில் இருந்த அமைச்சர்கள், அதிகாரிகள் என்று என்னா வேணாலும் சொல்லுங்க அதையெல்லாம் ஊதித் தள்ளிட்டு எங்களோட 4 ஆண்டு ஆட்சி நல்லா நடக்குதுன்னு புகழ் மட்டுமே தான் பாடப் போகிறது அரசு என்பது வெட்டவெளிச்சமான விஷயம் தானே.