நம்பிக்கையில்லா தீர்மானம் மீது கடைசி வரை விவாதம் இல்லை... கவனத்தை திசை திருப்பவா பாஜக உண்ணாவிரதம்!
Recommended Video
சென்னை : மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடிந்தது. இந்நிலையில், தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டை மறைக்க பாஜக போடும் திட்டமா உண்ணாவிரதம் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு மார்ச் மாதம் 5ம் தேதி முதல் ஏப்ரல் 6ம் தேதியுடன் முடிந்தது. இந்தக் கூட்டத்தொடரின் பெரும்பாலான நாட்கள் செயல்படாமலே முடங்கின. லோக்சபாவில் இந்த கூட்டத்தொடரின் போது 5 மசோதாக்கள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. ஏறத்தாழ 23 நாட்கள் இரு சபைகளும் செயல்படாமலேயே முடங்கிப்போயின.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி அந்த மாநில எம்பிகளும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழக எம்பிகளும் அமளியில் ஈடுபட்டனர். கடைசியாக எஸ்சி, எஸ்டி சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அளிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து பஞ்சாப் மாநில எம்பிகளும், வங்கி மோசடியாளர்கள் தொடர்பான விவாதம் நடத்தக் கோரி காங்கிரஸ் கட்சி எம்பிகளும் சபையில் முழக்கங்களை எழுப்பினர்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததைக் கண்டித்து தெலுங்குதேசம் கட்சி பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறியது. இதோடு ஒய்எஸ்ஆர், காங்கிரஸ் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியினர் இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படுமா என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிமுக எம்.பிகள் காவிரி மேலாண்மை வாரியத்திற்காக என்ற பெயரில் அமளிகளில் ஈடுபட்டனர்.
பாஜக மீது காங். குற்றச்சாட்டு
இதனால் நம்பிக்கையில்லா தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் இருப்பதற்காக பாஜக அதிமுக எம்.பிகளை வைத்து அமளி நாடகமாடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. அதிமுக எம்பிகளும், ஆந்திர எம்பிகளும் கடைசி நாள் வரை காவிரி, ஆந்திர சிறப்பு அந்தஸ்து விவகாரத்தில் விவாதம் கோரினர். ஆனால் கடைசி வரை அதற்கான அனுமதி கிடைக்காத நிலையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் எந்த விவாதமும், மசோதா தாக்கல் இன்றியும் முடிந்தது.
பாஜக திடீர் உண்ணாவிரதம்
இந்நிலையில் நாடாளுமன்ற முடக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் தான் காரணம் என்று கூறி பாஜக சார்பில் நாளை திடீரென உண்ணாவிரதத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய அலுவல்களை தொடர்ந்த படியே உண்ணாவிரதம் இருப்பார் என்றும், பாஜக தலைவர் அமித்ஷா கர்நாடகாவில் உண்ணாவிரதம் இருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திசைதிருப்பவா உண்ணாவிரதம்?
பாஜக எம்பிக்கள் அவரவர் தொகுதிகளில் உண்ணாவிரதம் மேற்கொள்ள உள்ளனர். ஆனால் பாஜகவின் இந்த உண்ணாவிரதம் எதற்காக என்பது தான் இப்போதைய கேள்வியே. நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்க முக்கியக் காரணமே காவிரி, ஆந்திரா சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அரசு விவாதம் நடத்த ஒத்துழைப்பு தராததே.
மவுனம் காத்த பாஜக
கூட்டத்தொடர் முடியும் வரை விவாதத்திற்கு நாங்கள் தயார் என்றோ, நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த அச்சமில்லை என்றோ தெரிவிக்கவில்லை பாஜக. நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் என எங்குமே இதுபற்றி வாய் திறக்காமல் தற்போது மக்களின் கேள்விகளையும், கோபத்தையும் திசை திருப்புவதற்காகவே எதிர்கட்சிகளால்தான் நாடாளுமன்றம் முடங்கியதாக ஒரு உண்ணாவிரதத்தை அரங்கேற்றப் பார்க்கிறார்களோ என்று மக்களிடையே பேச்சு எழுந்துள்ளது.