ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க ஏன் அதிரடிப் படை அமைக்கக் கூடாது? ஹைகோர்ட் கேள்வி
சென்னை: தமிழகத்தில் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்பதற்காக அதிரடிப்படையை ஏன் அரசு அமைக்கக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை வழக்கறிஞர் வி.பி.ஆர்.மேனன் உயர்நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அதில், ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்கும் ஆய்வுகள் 30 ஆண்டுகளாக நடைபெறுகிறது. ஆனால் முடிவடையவில்லை.
ஆனால் கர்நாடக மாநிலத்தில் அரசு நிலத்தை மீட்க 2008-ல் அதிரடி படை உருவாக்கப்பட்டது. இதனடிப்படையில் ஒரு அதிரடிப்படை அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஆண்டு ஜூலை 27-ந்தேதி கோரிக்கை மனு அனுப்பினேன். ஆனால் இதுவரை அரசு பரிசீலிக்கவில்லை எனக் கூறியிருந்தார்.
இம் மனு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இம் மனுவுக்கு 4 வாரத்துக்குள் தமிழக அரசு பதிலளிக்கவேண்டும். கர்நாடகா மாநிலத்தில் அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளதால், அங்கு ஏராளமான அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது. அதுபோல, தமிழகத்திலும் ஆக்கிரமிப்புப்பாளர்களிடம் இருந்து அரசு நிலத்தை மீட்க ஒரு அதிரடிப்படையை ஏன் அமைக்கக்கூடாது? என்பதை தமிழக அரசு தெளிவுபடுத்தி பதில் மனு தாக்கல் செய்யவேண்டும் என நீதிபதிகள் கூறினர்.