ஓபிஎஸ்சுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி
Recommended Video
சென்னை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீதான சொத்துக்குவிப்பு புகாரை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிட கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி, மகன்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்துள்ளதாக, திமுகவின் ஆர்.எஸ்.பாரதி சார்பில், சென்னை ஹைகோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்தார்.
அதில், துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம், அவரது மனைவி விஜயலட்சுமி, மகன்கள் ரவீந்திரநாத், ஜெயபிரதீப், மகள் கவிதாபானு மற்றும் சகோதரர்கள் பெயர்களில் சொத்துகளை வாங்கி குவித்துள்ளார். அதேநேரம், வருமானம் குறித்த தவறான தகவல்களை தேர்தல் வேட்புமனுக்களில் கொடுத்துள்ளார்.
வெளிநாடுகளில் முதலீடுகள்
அமெரிக்கா, துருக்கி, இந்தோனேசியா நாடுகளில் உள்ள நிறுவனங்களிலும், இந்திய நிறுவனங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் வாரிசுகள் முதலீடு செய்துள்ள நிலையில், 2011 தேர்தலின்போது தனது மனைவிக்கு 24.20 லட்சம் ரூபாய் சொத்துகள் இருப்பதாக குறிப்பிட்ட பன்னீர்செல்வம், 2016ம் ஆண்டு தேர்தலில், 78 லட்ச ரூபாய்க்கு சொத்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது சந்தேகத்தை எழுப்புகிறது.
சேகர் ரெட்டி டைரி
ஓபிஎஸ் மகன் ஜெயபிரதீப் மூன்று நிறுவனங்களில் இயக்குனராக உள்ளார். பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் சொத்துகளை வாங்கியுள்ளார். சேகர் ரெட்டி டைரியில் பன்னீர்செல்வம் 6 மாதங்களில் 4 கோடி ரூபாய் பணம் பெற்றுள்ளதாக டைரியில் குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற உத்தரவு
இதன்மூலம் தனக்கு வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளார் பன்னீர்செல்வம். இதுதொடர்பாக மார்ச் 10ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தோம். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. சொத்துக் குவிப்பு தொடர்பான விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
ஏன் விசாரிக்கவில்லை
இதுகுறித்து இன்று ஹைகோர்ட் விசாரணையை ஆரம்பித்தது. அப்போது புகார் அளித்த பிறகும், 3 மாதங்களாக லஞ்ச ஒழிப்புத்துறை இந்த வழக்கில் விசாரணையை துவக்காதது ஏன் என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பியது. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க ஏன் உத்தரவிட கூடாது என்று தமிழக அரசு வக்கீலிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
விடாது துரத்தும் சொத்துக்குவிப்பு வழக்கு
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 23ம் தேதியான திங்கள்கிழமைக்கு ஒத்தி வைத்துள்ளது ஹைகோர்ட். ஏற்கனவே சொத்துக் குவிப்பு வழக்கு ஒன்றால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடும் உளைச்சலுக்கு உள்ளானார். இறுதியில் அதில் அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. இப்போது துணை முதல்வர் மீது இதுபோன்ற ஒரு புகார் கோர்ட்டுக்கு சென்றுள்ளது. ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்பிரமணியன் சுவாமி சொத்து குவிப்பு விவகாரத்தை முதலில் கிளப்ப, பிறகு அந்த வழக்கில் திமுக சார்பில் அன்பழகன் இணைந்த பிறகு இன்னும் வலுவடைந்தது. இதிலும் திமுகதான் வழக்கு தொடர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.