அருவருப்பான கார்டூன் வரைந்ததால் பாலா கைது... நெல்லை எஸ்.பி. விளக்கம்
அரசு அதிகாரிகளை மோசமாக சித்தரித்து கார்ட்டூன் வரைந்ததாலேயே பாலா கைது செய்யப்பட்டதாக நெல்லை எஸ்.பி கூறியுள்ளார்.
Recommended Video
நெல்லை : மோசமான கார்ட்டூன் வரைந்ததாலேயே பாலா கைது செய்யப்பட்டதாக நெல்லை எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்.
கந்துவட்டி கொடுமை காரணமாக தீக்குளிப்பு குறித்து கார்ட்டூன் வெளியிட்டதற்காக ஓவியர் பாலா நேற்று சென்னையில் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நெல்லை கொண்டு செல்லப்பட்டார்.
நெல்லை மாவட்டம் காசிதர்மம் கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்பவர், தான் வாங்கிய கடன் தொகையை செலுத்திய பின்னரும் பணம் கேட்டு கந்துவட்டி கொடுத்தவர்கள் மிரட்டியதால் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், அக்டோபர் மாதம் 23ம் தேதி மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நெல்லை ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக இணையத்தில் கேலிச் சித்திரம் வரைந்த லைன்ஸ் மீடியா நிறுவனத்தைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா நேற்று கைது செய்யப்பட்டு உள்ளார். நெல்லையைச் சேர்ந்த போலீஸார் சென்னையில் அவரைக் கைது செய்து நெல்லை அழைத்துச் சென்றனர்.
ஏற்கெனவே,மணல் கொள்ளை குறித்து செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடர்ந்தது, கூடங்குளம் போராட்டத்தில் சமூக செயற்பாட்டாளர் முகிலன் கைது செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றால் நெல்லை மாவட்ட காவல்துறையினருக்கு கெட்ட பெயர் ஏற்பட்டு உள்ளது.
இந்த நிலையில், காவல்துறைக்கு எதிராக செயல்பட்ட வழக்கறிஞர் செம்மணியை நேற்று முன்தினம் நள்ளிரவு இரும்புக் கம்பியால் காலில் அடித்து நடக்க முடியாத அளவுக்கு காயத்தை ஏற்படுத்திய சம்பவம் சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.
இந்தச் சூழலில், கார்ட்டூனிஸ்ட் பாலா கைது விவகாரமும் நெல்லை மாவட்ட காவல்துறையினர் மீது கடும் விமர்சனத்தை கிளப்பி இருக்கிறது. இதையடுத்து, கைது தொடர்பாக நெல்லை மாவட்ட எஸ்.பி-யான அருண்சக்தி குமார் விளக்கம் அளித்து உள்ளார்.
அதில், ''நெல்லை மாவட்ட அரசு உயரதிகாரிகள் பற்றி அருவருப்பான கார்ட்டூன்களை வரைந்து சென்னையைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் பாலா என்பவர் சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளார்.
இது தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ளார். அதன் மீது கடந்த நவம்பர் 1-ம் தேதி நெல்லை மாவட்ட குற்றப்பிரிவில் சட்டப்பிரிவுகள் 501 ஐ.பி.சி மற்றும் 67 ஐ.டி சட்டம் ஆகியவற்றின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகே நெல்லை மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் பாலாவைக் கைது செய்தனர்'' என்று தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் பாலா இன்று நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி பாலாவிற்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றம் செல்லும் வழியில் பேட்டி அளித்த பாலா, 'ஒரு தந்தையின் மனநிலையில் இருந்து தான் அந்த கார்ட்டூனை வரைந்தேன். அதற்காக வருத்தப்படப்போவது இல்லை. மேலும் மோடி, எடப்பாடி அரசுகளின் அவலங்களை கார்ட்டூன்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்வேன்' என்று குறிப்பிட்டு உள்ளார்.