தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்க கூடாது? சாட்டையை சுழற்றும் ஹைகோர்ட்!
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை ஏன் சிபிஐ விசாரிக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மே மாதம் நடைபெற்ற போராட்டத்தின் போது வன்முறை வெடித்தது. அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதைத்தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலை இழுத்து மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டது.
ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது?
இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்கை ஏன் சிபிஐக்கு மாற்றக்கூடாது என கேள்வி எழுப்பியது.
உயர்நீதிமன்றம் உத்தரவு
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக போலீசாரின் வசம் உள்ள வீடியோ பதிவுகள் மற்றும் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்குகளை மாற்ற முடியாது
சிபிஐ விசாரிக்க மறுப்பு தெரிவித்த தமிழக அரசு ஏன் வேண்டாம் என்பது குறித்து விரிவான பதில் மனுத்தாக்கல் செய்கிறோம் என தெரிவித்தது. மதுரை கிளையில் நிலுவையில் உள்ள வழக்குகளை மாற்றம் செய்ய முடியாது என்றும் சென்னை ஹைகோர்ட் தெரிவித்தது.
9ஆம் தேதிக்கு ஒத்தி வைப்பு
அத்துமீறலில் யார் ஈடுப்பட்டாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்தது. தமிழக அரசுக்கு பதிலளிக்க அவகாசம் அளித்து வரும் 9-ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.