சிபிஐ ரெய்டு: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருந்த நிலையில் சிபிஐ அதிகாரிகள் இன்று அவரது வீட்டில் அதிரடி சோதனை நடத்தி உள்ளனர்.
சென்னை: ஏர்செல்- மேக்சிஸ் ஒப்பந்த முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விசாரிக்கப்படுவார் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருத நிலையில் இன்று சிபிஐ அதிரடி சோதனைகளை நடத்தியுள்ளது.
சென்னையை தலைமையிடமாக கொண்ட ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நெருக்கடி கொடுத்தார் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்பது வழக்கு. இந்த வழக்கு டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
குற்றப்பத்திரிகை தாக்கல்
மேக்சிஸ் நிறுவனத்துக்கு ஏர்செல் நிறுவனப் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்குச் சொந்தமான சன் குழுமம் ஆதாயமடைந்தது என்பதும் வழக்கு. இதனால் கலாநிதி மாறன் உள்ளிட்டோரும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக அமலாக்கப் பிரிவும் வழக்குகள் பதிவு செய்து குற்றப்பத்திரிகைகளைத் தாக்கல் செய்துள்ளன.
சிதம்பரம்
இதனிடையே ஏர்செல் நிறுவனப் பங்குகளை மேக்சிஸ் நிறுவனம் வாங்குவதில் விதிகளை மீறி அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் அனுமதி அளித்தார் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. அதாவது ரூ.600 கோடிக்கு மேல் முதலீடு உள்ள திட்டங்களை மத்திய பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவின் அனுமதிக்கு அனுப்ப வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் இதை மீறி மேக்சிஸ் நிறுவனம் ரூ4,000 கோடி பங்குகளை வாங்க சிதம்பரத்தின் கட்டுப்பாட்டில் இருந்த வெளிநாட்டு முதலீட்டு வாரியம் அனுமதி அளித்தது என்பதுதான் புகார்.
கார்த்தி சிதம்பரம்
இப்படி ப.சிதம்பரம் அனுமதி அளித்ததன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான அட்வான்டேஜ் ஸ்ட்டாடெஜிக் கன்சல்டிங் என்ற நிறுவனம் பெருமளவில் ஆதாயம் அடைந்தது என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாகவும் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அமலாக்கத்துறையினரும் கார்த்தி சிதம்பரத்தை விசாரணைக்கு அழைத்திருந்தது.
சிபிஐ விசாரணை
அண்மையில் ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற போது, இவ்வழக்கில் ப.சிதம்பரத்தின் பங்கு குறித்து விசாரணை நடத்தப்படும் என உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்திருந்தது.
சிபிஐ ரெய்டு
இந்நிலையில் சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோரது வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட 12 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனை எதற்காக என்ற விவரங்களை சிபிஐ அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவிக்கவில்லை.