'நீட்' மூலம் குலக் கல்வி முறையை மறைமுகமாகக் கொண்டு வருகிறதா மத்திய அரசு?
வசதி வாய்ப்பில் முன்னேறிய வகுப்பினர் மட்டுமே தேர்வு பெறக்கூடிய வகையில் நீட் தேர்வைக் கொண்டு வந்துள்ள மத்திய அரசு, குலக் கல்வியை மறைமுகமாகக் கொண்டு வருகிறதா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை: நீட் தேர்வை நாடு முழுவதும் எல்லா தரப்பு மாணவர்களுக்கும் கட்டாயமாக்குவது, பொறியியல் படிப்புக்கும் நீட் போலவே பொதுத்தேர்வு கொண்டு வருவது என்கிற முயற்சி, மத்திய அரசு குலக் கல்வித் திட்டத்தை கொண்டு வர நினைக்கிறதோ என்கிற அச்சத்தையும் பீதியையும் மக்களிடம் உருவாக்கியுள்ளது.
இந்தியா முழுவதும் நீட் தேர்வை மாணவர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை எழுதினார்கள். தமிழகத்தில் மட்டும் 88, 000 மாணவர்கள் எழுதினார்கள். தேர்வு எழுதச் என்ற மாணவர்களை சோதனை என்ற பெயரில் மன உளைச்சலுக்கு ஆளாக்கினர். மாணவர்களின் முழுக் கை சட்டையை வெட்டி, அரைக் கை சட்டையாக்கியது, அனைவரையும் மெட்டல் டிடெக்டர் மூலம் சோதனை செய்தது, தலைமுடியை பிரித்துவிடச் சொன்னது என இதுவரை மாணவர்கள் அனுபவித்திராத விசித்திரமான பல சோதனைகளை எதிர்கொண்டனர்.
கேரளாவில் மாணவி ஒருவரின் உள்ளாடையைக் கூட அகற்றச் சொன்ன அக்கிரமம் நீட் தேர்வு எழுதச் சென்றபோது நடைபெற்றது. ஆனால் இதனை எதிர்த்து எந்த அரசியல் கட்சி தலைவர்களும் உக்கிரமாக குரல் கொடுக்கவில்லை என்பதுதான் துயரம். பரீட்சை எழுதச் சென்ற மாணவர்களை தீவிரவாதிகள் போல் நடத்தினர். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்ற கேள்விக்கு, விண்ணப்பப் படிவத்தில் நாங்கள் இவற்றைப் பற்றி கூறியிருந்தோமோ என அலட்சியமாக பதில் கூறுகின்றனர்
சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பரீட்சை
இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களில் நூற்றுக்கு 99 சதவீதம், மாணவர்கள் ஸ்டேட் போர்டு கல்வித் திட்டத்தின் கீழ் தான் படிக்கிறார்கள். ஆனால், நீட் தேர்வில் வெறும் 1-2 சதவீதம் மாணவர்கள் படிக்கும் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் தான் கேள்விகள்கேட்கப்பட்டுள்ளன. இந்த வருடம் நீட் தேர்வை 8,46,947 மாணவர்கள் எழுதியுள்ளனர். அவர்களில் 1.56 சதவித மாணவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்தில் படித்தவர்கள்.
நாளை தேர்வில் அதிகளவு வெற்றி பெற்று வெளியேறுபவர்கள் இந்த 1.56 சதவிகிதத்தில் இருந்துதான் வருவார்கள்.
யார் படிக்கிறார்கள்?
மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகள்,முப்படையைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள், வசதி வாய்ப்பில் முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள். இதனால் வறுமையில் வாடும் முதல் தலைமுறையைச் சேர்ந்த மாணவர்களோ, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வகுப்பினரோ படிக்க மாட்டார்கள்.
யாருக்குப் போய்ச் சேரும்?
நீட் தேர்வு, வெறும் கேள்வி பதில்கள் தான் என்றாலும் அதில் பயிற்சி பெற்ற மாணவர்களால்தான் வெற்றி பெற முடியும். அப்படி என்கிற நிலையில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் படித்த மத்திய அரசு ஊழியர்களின் குழந்தைகளும் வசதி வாய்ப்பில் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் மட்டுமே மருத்துவர்களாக முடியுமென்னும் நிலை உருவாகும். இதன் மூலம் இட ஒதுக்கீட்டின் மூலம் முதல் தலைமுறையாக டாக்டர் பட்டம் பெறுவது ஏழைகளுக்கும் பிற்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் சாத்தியமில்லாத விஷயமாக மாறும். அதன்படி வசதி வாய்ப்பில் முற்பட்ட வகுப்பினர் மட்டுமே டாக்டர் ஆக முடியும் என்ற சூழல் உருவாகும்.
என்ஜினியரிங் படிப்புக்கும் தேர்வு?
நீட் தேர்வு நடத்தி, அதன் மூலம் வெற்றியைக் கண்டு மத்திய அரசு, இனி நாடு முழுவதுக்குமான பொது நுழைவுத் தேர்வை என்ஜினியரிங் படிப்பிலும் கொண்டு வர உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒருவேளை அப்படி கொண்டுவரப்பட்டால், அங்கும் சிபிஎஸ்.இ மாணவர்களே வெற்றி பெறக் கூடிய சூழல் உருவாகும்.
குலக்கல்வித் திட்டம்?
குடும்பத்தின் குலத்தொழில்களில் தங்கள் குழந்தைகளை ஈடுபடுத்துவதை பெற்றோர்கள் சட்டபூர்வ உரிமையாகக் கொள்ளலாம், அதாவது பள்ளி நேரத்துக்கு பிறகும் விடுமுறை நாட்களிலும் பணியாற்றலாம் என மத்திய அரசு 2015ஆம் ஆண்டு குழந்தை தொழிலாளர்கள் சட்டத்தில் திருத்தம்கொண்டு வந்தது. அப்போதே மத்திய அரசு மீண்டும் குலக் கல்வித்திட்டத்தை கொண்டு வருகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
தற்போது , நீட் தேர்வை கட்டாயப்படுத்தியிருப்பதன் மூலம் மறைமுகமாக குலக் கல்வித் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வருகிறதோ என்கிற சந்தேகம் வலுத்துள்ளது. கல்வியாளர்களும் மனித உரிமை செயல்பாட்டாளர்களும் உரக்க குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது!