போட்டுக் கொடுத்த சேகர் ரெட்டி! களத்தில் குதித்த மத்திய அரசு! ஓகே சொன்ன ஓபிஎஸ்!போயஸ் கார்டன் மவுனம்!
சேகர் ரெட்டியிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில்தான் ராமமோகன் ராவ் வீட்டில் சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.
சென்னை: கான்டிராக்டர் சேகர் ரெட்டி தந்த தகவல்களின் அடிப்படையில்தான் தமிழக அரசின் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்துவதாக கூறப்படுகிறது.
தமிழக அரசின் ரூ10,000 கோடி மதிப்பிலான கான்டிராக்ட் பணிகளை பெற்றவர் சேகர் ரெட்டி. இந்த ஒப்பந்தங்கள் மூலம் அதிகாரிகள் தொடங்கி அமைச்சர்கள் பலரும் ஆதாயமடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இத்தகவல்களை மாஜி தலைமைச் செயலர் ஒருவர் முழு ஆதாரங்களுடன் மத்திய அரசிடம் கொடுத்ததாராம். இதனடிப்படையில்தான் சேகர் ரெட்டியை முதலில் குறி வைத்தது வருமான வரித்துறை.
அவரது வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த சோதனைகளில் ரூ171 கோடி ரொக்கம், 130 கிலோ தங்கம் சிக்கியது. இவை அனைத்தும் அரசு அதிகாரிகள் மற்றும் 5 அமைச்சர்களுக்கும் சொந்தமானது என சேகர் ரெட்டி வாக்குமூலம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் சிபிஐ, அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சேகர் ரெட்டி மீது வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் முதல்வர் பன்னீர்செல்வம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழகம் சார்ந்த கோரிக்கைகளை மோடியிடம் பன்னீர்செல்வம் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே சென்னை அண்ணாநகரில் தலைமை செயலர் ராமமோகன் ராவ் வீடு உள்ளிட்ட 13 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். இச்சோதனை குறித்த தகவல் தெரிந்தபோதும் போயஸ் கார்டன் தரப்பு எந்த எதிர்வியூகமும் வகுக்காமல் மவுனமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.