சினிமா டிக்கெட்டுக்கு வரி விதித்த போது கொந்தளித்த ஹீரோக்களே.. பேருந்து கட்டணத்துக்கு 'கப் சிப்' ஏன்?
சினிமா டிக்கெட் கட்டணம் உயர்ந்த போது நடிகர் விஷால் குதி குதி என குதித்தார், ஆனால் பேருந்து கட்டண உயர்வு பற்றி நடிகர்கள் யாருமே வாய் திறக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: சினிமா டிக்கெட்டுகளுக்கு கேளிக்கை விரி விதிக்கப்பட்ட போது தயாரிப்பாளர்கள் பாதிப்பார்கள் என்று முண்டியடித்து அரசை சந்தித்த நடிகர்கள், பேருந்து கட்டண உயர்வில் கப் சிப் என மவுனமாக இருப்பது ஏன் என்ற கேள்வி எழுகிறது. மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று சொன்ன நடிகர் ரஜினி, கமல், விஷால் என ஒருவர் கூட வாய் திறக்காமல் மவுனமாக இருப்பதன் பின்னணி என்ன?
தமிழக அரசியல் களமும், மக்களும் சந்திக்கும் புதிய விஷயமல்ல நடிகர்கள் அரசியலுக்கு வருவது. நடிகர் ரஜினி தனது 22 ஆண்டு கால அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வருவேன் என்றார். ஆனால் 3 ஆண்டு அவகாசம் கேட்டதோடு, அதுவரை அரசைப் பற்றிவிமர்சிக்கக் கூடாது என்று தனது ரசிகர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டோர்.
அரசியலில் தீவிரம் காட்டி வரும் கமலும் அடுத்த மாதம் ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் வைத்து தன்னுடைய அரசியல் கட்சியை அறிவிப்பதாக கூறி இருக்கிறார். அதற்கான வேலைகளிலும் ஜரூராக இறங்கி விட்டார். அவ்வபோது கமலாவது டுவிட்டரில் மக்கள் படும் அவலங்களுக்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து பதிவிட்டு வந்தார். ஆனால் தமிழக மக்களையே கொந்தளிப்பில் ஆழ்த்தியுள்ள பேருந்து கட்டண உயர்வு குறித்து கமலும் வாய் திறக்காமல் இருப்பது ஏன். அரசியல் கட்சி தொடங்கும் முன்னரே மக்கள் பிரச்னையை விட கட்சிக்கான பணிகள் தான் முக்கியம் என்பதை உணர்த்துகிறாரா கமல்.
ஏன் ஒரு டுவீட் கூட இல்லை?
அரசு நடவடிக்கை எடுக்கிறதோ இல்லையோ அரசியல் கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்வேன் என்று சொன்ன கமல் இந்த விஷயத்திலேயே கோட்டை விட்டது ஏன். அப்படியானால் பேருந்து கட்டண உயர்வால் பாதிப்பை சந்திக்கும் மக்கள் பற்றிய அக்கறை இல்லையா கமலுக்கு என்ற கேள்வி எழுகிறது.
சினிமா டிக்கெட் உயர்வின் போது கூப்பாடு
மற்றொரு புறம் ஆர்கே நகர் இடைத்தேர்தலின் போது தன்னை ஜனநாயகப் பாதுகாவலராக காட்டிக் கொண்ட நடிகர் விஷால். ஆர்கே நகர் மக்களுக்கு நல்லது செய்வதற்காக அரசியலுக்கு வருகிறேன் என்று கூறி வேட்பு மனு தாக்கல் வரை நடந்த விஷயங்களே 2 சினிமாப் படம் எடுக்கும் அளவிற்கு ஓடியது. இறுதியில் தேர்தலில் போட்டியிடாவிட்டாலும் நான் ஜெயித்து விட்டேன் என்று அடங்கிப் போய்விட்டார் விஷால்.
கேளிக்கை வரிக்கு மட்டும் குரல் கொடுத்தீர்கள்
சினிமா டிக்கெட்டுகளுக்கு 28 சதவீத ஜிஎஸ்டி வரியோடு மாநில அரசின் 10 சதவீத கேளிக்கை வரியும் சேர்ந்ததால் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கூப்பாடு போட்டார் விஷால். உடனே தமிழக முதல்வரை சந்தித்து கேளிக்கை வரி உயர்த்தப்பட்டால் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படும் அந்தச் சுமையானது தயாரிப்பாளர்கள் மீது தான் இறக்கி வைக்கப்படும் என்று குய்யோ முறையோ என்று கத்தி முதல்வரை சந்தித்து கேளிக்கை வரியை 8 சதவீதமாகக் குறைத்தனர்.
மக்களை ஏமாற்றும் நடிகர்கள்
ஆனால் சினிமா டிக்கெட்டுக்கு வரி விதித்த போது கொந்தளித்த விஷால், தமிழகம் முழுவதும் மக்கள் தங்களின் அன்றாட வாழ்க்கையை பாதித்துள்ளது பேருந்து கட்டண உயர்வு என்று போடும் கூப்பாடு அவர் காதிற்கு விஷவில்லையா? அப்படியானால் நடிகர்களும் அரசியல்வாதிகளைப் போன்றவர்கள் தான் என்பதைத் தான் அரசியலுக்கு வரத் துடிப்பவர்களும் காட்டுகிறார்கள். தேவை ஏற்படும் போது மக்களை பயன்படுத்திக் கொள்ளலாம், அவர்கள் ஏமாளிகள் சென்டிமென்டாக ஏதேனும் விஷயத்தை அரங்கேற்றினால் வாக்களித்துவிடுவார்கள் என்று எண்ணினார்களா?