தீபாவை தாக்கி விரட்டும்படி போயஸ் கார்டனில் அப்படி என்ன தான் நடக்கிறது?
சென்னை: ஜெயலலிதாவின் உண்மையான வாரிசான தீபாவுக்கு போயஸ் கார்டனுக்குள் செல்ல அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதாவின் வீடு வேதா நிலையம் என்ற பெயரில் போயஸ் தோட்டத்தில் உள்ளது. இந்நிலையில் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த வீட்டில் சசிகலா மற்றும் குடும்பத்தினர் வாழ்ந்து வந்தனர்.
ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூர் சிறைக்கு சென்றனர். எனினும் சசிகலாவின் சொந்தக்காரர்கள் அங்கு வசித்து வருகின்றனர்.
நினைவு இல்லமாக...
இந்நிலையில் போயஸ் கார்டனை நினைவு இல்லமாக மாற்ற வேண்டும் என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த போயஸ் கார்டன் தனக்கு தான் சொந்தம் என்று கூறிக் கொண்டு ஜெ.வின் அண்ணன் மகள் தீபா போயஸ் தோட்டத்துக்கு வந்தார்.
ஜெ.வின் ரத்த சொந்தங்கள்
மேலும் கார்டனுக்குள் நுழைய முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் தீபா, மாதவனின் ஆதரவாளர்களும் குவிந்தனர். சட்டப்படி ஜெயலலிதாவின் வாரிசாக உள்ளவர்கள் தீபாவும், தீபக்கும் தான். அவர்களுக்கு ஜெயலலிதா முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்றாலும் சட்டப்படி வாரிசுகள் அவர்கள் தான்.
உயில் எழுதவில்லை
இது ஜெயலலிதாவுக்கும் நன்றாக தெரியும். அவ்வாறு தனது சொத்துகள் தீபாவுக்கும், தீபக்கிற்கும் செல்லக் கூடாது என்று ஜெயலலிதா நினைத்திருந்தால் அவ்வாறு உயில் எழுதி வைத்திருக்கலாமே. ஏன் செய்யவில்லை.
யாருக்கும் உரிமை இல்லை
ரத்த சொந்தங்களான தீபாவுக்கு உரிமையில்லை எனில் அங்கு கொட்டம் அடித்து கொண்டிருந்த சசிகலாவுக்கும், தினகரனுக்கும், தற்போது உள்ள அவர்களது உறவினர்களுக்கும் சொந்தம் கொண்டாட என்ன உரிமை உள்ளது. ஒரு வாரிசுதாரர் சம்பந்தப்பட்டவரால் ஒதுக்கி வைக்கப்பட்டவர் என்று கூறப்பட்டாலும், அவராக சொத்துகளுக்கு உரிமை இல்லை என்று எழுதி வைத்தால் ஒழிய அவர்களுக்கு உரிமை இல்லை என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.