சபரிமலை செல்ல விரும்பும் பெண்களை தடுக்க முயல்கிறதா தேவசம் போர்டின் புதிய விதிமுறைகள்?
சென்னை: பெண்கள் சபரிமலைக்கு வரக் கூடாது என்பதற்காகவே தேவசம் போர்டு புதிய விதிகளை வகுத்துள்ளது போல் தெரிகிறது. பெண்களுக்கு இத்தனை விதிகளை வகுக்கும் தேவசம் போர்டு ஆண்களுக்கு எத்தனை விதிமுறைகளை வகுத்துள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இதற்கு தேவசம் போர்டு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
எனினும் உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தும் நடவடிக்கைகளில் தேவசம் போர்டு ஈடுபட்டுள்ளது.
சாமி கும்பிடும் முறை
இந்த நிலையில் பெண்களும் சபரிமலைக்கு வரவுள்ளதால் புதிய வழிமுறைகளை வகுத்துள்ளது. அவை என்னவெனில், பெண்களுக்கென்று தனி வரிசை கிடையாது, தனியார் வாகனங்கள் நிலக்கல்லில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும். பம்பை வரை தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. நீண்ட வரிசையில் காத்திருந்து ஐயனை தரிசிக்கும் உடல்வாகு உள்ள பெண்கள் மட்டுமே வரவேண்டும். கரடு முரடான பாதையில் நடக்க முடிந்தோர் மட்டுமே வாருங்கள் என்பன உள்ளிட்ட விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. பெண்களுக்கு தனி வரிசை இல்லை என்ற விதியை கூட ஏற்கலாம். திருப்பதி உள்ளிட்ட கோயில்களில் பெண்களுக்கு தனி வரிசை இல்லை. பொது வரிசையில் நின்று சாமி கும்பிடும் முறைதான் கடைப்பிடிக்கப்படுகிறது.
அதிர்ச்சி
ஆனால் விழா காலங்களில் சபரிமலையில் அதிகபடியான கூட்டம் இருந்தால் தரிசனத்துக்கு தாமதம் ஏற்படும். இது போன்ற காலதாமதத்தை ஏற்கும் உடல் அமைப்பை கொண்ட பெண்கள் மட்டுமே வர வேண்டும் என்று தேசவம் போர்டு வெளிப்படையாக தெரிவித்துள்ளது கவனிக்க வேண்டியதாக உள்ளது.
கோபித்து கொள்ளும் பெண்கள்
அதுபோல் பம்பையிலிருந்து சன்னிதானத்துக்கு செல்லும் 7 கி.மீ. தூரம் கொண்ட கரடு முரடான சாலைகளில் நடக்க முடியும் என்ற பெண்கள் மட்டும் வரலாம் என்று வகுக்கப்பட்டுள்ளது. 10 வயதில் என்னை ஏன் சபரிமலைக்கு அழைத்து செல்லவில்லை என்று தன் தகப்பனாரிடம் செல்லமாக கோபித்து கொள்ளும் சிறுமிகளை நாம் காண்கிறோம். 10 வயதுக்குட்பட்ட சிறுமிகளும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் கரடு முரடான சாலையை கடந்துதான் கல்லும், முல்லும் காலுக்கு மெத்தை என்று ஐயப்பன் கோயிலுக்கு செல்வது வழக்கத்தில் உள்ளபோது, இப்போது அச்சுறுத்துவதை போல கருத்து தெரிவித்துள்ளது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சபரிமலைக்கு
இப்படி ஐயப்பனை பார்க்க வேண்டும் என வரும் பெண்களை பயமுறுத்தும் வகையில் விதிகளை போடும் தேசவம் போர்டு ஆண்களுக்கு என்ன விதிகளை வகுத்தார்கள்? வயது வித்தியாசமின்றி, ஆண்கள் சபரிமலைக்கு செல்கின்றனர்.
வரிசையில் நிற்க முடியாதா
இவர்களுக்கு கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தையாக இருக்கும் நடைபாதை பெண்களுக்கு அதேபோன்று இருக்காதா என்ன? பிரசவம் என்பது பெண்களுக்கு மறுஜென்மம், அத்தகைய தாள முடியாத பிரசவ வலியை தாங்கிக் கொண்டு ஓரிரு வருடங்களில் இன்னொரு குழந்தைக்கு ஆயத்தம் ஆகும் பெண்கள் வரிசையில் நிற்க முடியாதா, இல்லை கற்கள், முட்கள் நிறைந்த சாலையில் நடக்க முடியாதா. 10 முதல் 50 வயதுக்குள் கிடைக்காத சக்தி, 10 வயதுக்குள்ளும் 50 வயதுக்கு மேலும் கிடைத்து விடுமா என்ன?
பெண்களால் ஏன் முடியாது
9 வயது , 10 வயது குழந்தைகளை யாராலும் தூக்கி கொண்டு செல்ல முடியாது. அது போல் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களையும் யாரும் சுமந்து கொண்டு செல்வதில்லை. அப்படியிருக்கையில் அக்குழந்தைகள் சர்வ சாதாரணமாக கல்லிலும் முள்ளிலும் நடந்து ஐயனை தரிசிக்கும் போது 50 வயதுக்குள்பட்ட பெண்களால் ஏன் முடியாது.
உத்தமம்
பெண்களுக்கென வழிபாடு ஏற்பாடுகளை செய்துவிட்டு பின்னர் அவர்களை அச்சுறுத்தும் வகையில் பேசுவது எந்த வகையில் நியாயம். இந்த ஒரு முறை வந்து பார்த்துவிட்டு அவர்களால் முடியாவிட்டால் அடுத்த முறை போகாமல் விட்டு விட போகிறார்கள். இதில் என்ன இருக்கிறது. மேலும் காட்டு பகுதியை சுட்டி காட்டியும் அச்சுறுத்தப்படுகிறார்கள். அவர்கள் என்ன தனியாகவா வர போகிறார்கள். மற்ற கோயில்களுக்கு செல்வதை போல் ஆண் துணையுடன் தானே வர போகிறார்கள். எனவே சபரிமலை தீர்ப்பை முழு மனதுடன் அமல்படுத்தினால் மிகவும் உத்தமமாக இருக்கும்.