சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கிய ஜெயலலிதா: கருணாநிதி குற்றச்சாட்டு
சென்னை: அண்ணாவின் கனவு திட்டமான சேதுக்கால்வாய் திட்டத்தை முடக்கியவர் தமிழக முதல்வர் ஜெயலலிதான் என்று திமுக தலைவர் கருணாநிதி சாடியுள்ளார்.
தஞ்சாவூரில் திமுக வேட்பாளர் டி.ஆர். பாலுவை ஆதரித்து நேற்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் கருணாநிதி பேசியதாவது:
மாபெரும் பொதுக்கூட்டத்தில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்றுகேட்டு கொண்டு, உங்களை எல்லாம் சந்திக்கின்ற நல்ல வாய்ப்பு பெற்றமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன்.நேரம் இடம்தரவில்லை
இந்த கூட்டணியில் தி.மு.க.வும், இஸ்லாமிய மக்கள் சார்பாக மனிதநேய மக்கள் கட்சியும், இன்றைக்கு புதிதாக ஒரு அறிவிப்பு வந்து இருக்கிறது. அந்த அறிவிப்புபடி தவ்ஹீத் ஜமாத் என்ற இயக்கமும் நமக்கு ஆதரவு தந்து, இந்த தேர்தலில் நம்முடன் இணைந்து செயல்படுவதாக அறிவித்து இருக்கிறார்கள்.
அவர்களை இருகரம் கூப்பி, வணங்கி இருகரம் நீட்டி வரவேற்கிறேன். தேர்தலில் ஈடுபடுவதற்கு தமிழ்நாட்டை உயர்த்த வேண்டும். மக்களை செழிப்படைய செய்ய வேண்டும். மக்கள் முகத்தில் சிரிப்பை காண வேண்டும் என்று தான் ஜனநாயக தேர்தலில் ஈடுபடுகிறோம்.
கை கோர்த்த பழனி மாணிக்கம்- பாலு
இந்த தொகுதியில் எனது அருமை தம்பி டி.ஆர்.பாலு நிற்கிறார் என்றால் அவரை நீங்கள் எல்லாம் ஆதரிக்கிறீர்கள் என்பது மாத்திரம் அல்ல. பத்திரிகைகள் இங்கே யார் வேட்பாளர்கள் இன்று அறிவிப்பதற்கு முன்பே, தி.மு.க.வில் ஏதாவது பிளவு ஏற்படுத்த வேண்டும் என்று பாலுவா அல்லது இந்த தொகுதி பழனிமாணிக்கமா?. ‘பா'வா, ‘ப'வா. என்று இந்த தொகுதியிலே தி.மு.க. பிளவு கண்டு கிடப்பதை போலவும், பாலுவும், பழனிமாணிக்கமும் தெருச்சண்டை போட்டுக்கொள்வது போலவும், 2 பேரும் கட்டிப்பிடித்து சண்டை போடுவதைபோலவும் விழா எடுத்து கொண்டாடுகிறார்கள். \
நான் அவர்களுக்கு எல்லாம் சொல்வேன். என்னுடைய தம்பிகளை பொருத்தவரை, பாலு, பழனிமாணிக்கத்தை பொருத்தவரை யார் மக்களுக்காக தொண்டாற்றுவது? யார் மக்களிடத்தில் போய். (அப்போது 2 பேரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டு உயர்த்தி காண்பித்தனர்) இப்போது மேடையில் கண்ட காட்சி தான் இந்த இயக்கத்திலே என்னுடைய தம்பிமார்களிடத்தில் நான் விரும்பி, வேண்டி காணுகின்ற காட்சி.
இந்த காட்சி. நம்முடைய ஒற்றுமைக்கு சாட்சி. இந்த காட்சியின் காரணமாக எதிரிகளின் சூழ்ச்சிக்கு வீழ்ச்சி.
சேதுக் கால்வாய் திட்டம்
இந்தியாவில் பிரபலமாக பேசப்படுகின்ற சேதுசமுத்திர திட்டத்தை, நான் அல்ல பாலு அல்ல. பழனிமாணிக்கம் அல்ல நம்மை எல்லாம் உருவாக்கிய பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றபோது, தம்பி மார்களுக்கு எழுதிய மடலில் மட்டும் குறிப்பிட்டது அல்ல, வெளிப்படையாக பகிரங்க அறிக்கையாக சொன்ன கருத்து என்னவென்றால் தம்பி நீண்ட காலமாக கனவு காண்கிறேன். அது தான் சேதுசமுத்திர திட்டம். அந்த திட்டத்தை செயல்படுத்தினால் இந்தியா வளம்பெறும் நாடாக மாறும். இலங்கையை சுற்றி செல்ல வேண்டிய நீளம் குறையும். வர்த்தகம் அதிகரிக்கும்.
கப்பற்படைத்தளம், துறைமுகம், வியாபாரம் செழிக்கும். நம்முடைய வணிகம் பெருகும். சாமானிய மக்கள் சிரிப்பு ஓங்கி நிற்கும். அப்படிப்பட்ட சேதுசமுத்திர திட்டத்தை நீண்டநெடுங்காலமாக நிறைவேற்ற ஆலோசனை செய்து, இதுவரையில் அந்த முயற்சியில் பல தடைகளை தாண்டி, அந்த திட்டத்தை நிறைவேற்றும் கட்டத்திற்கு வந்து இருக்கிறோம்.
அதை நிறைவேற்றினால் தமிழகம் வாழும். வெளிநாடுகளுக்கு எல்லாம் வணிபசந்தையாக மாறும். வளம் பெருகும். வாணிபம் செழிக்கும். இங்கே உள்ள மீனவர்கள் வாழ்வும், மீனவர்களுக்கு நன்மையாக முடியும். அந்த திட்டத்தை நிறைவேற்ற நமது ஆட்சியின் தொடக்கத்தில் கால்கோள் நடத்த வேண்டும் என்று அண்ணா கேட்டு கொண்டார்.
அவர் கேட்டு கொண்டபடி அந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்ட, முன்செயல்பாடுகளை எல்லாம் செய்ய வேண்டும். ஆனால் அதற்குள் அண்ணா மறைந்துவிட்டார்.
அண்ணாவின் கனவை நிறைவேற்றுவது தான் அண்ணனுக்கு தம்பி என்று நிரூபிக்கின்ற காரியம் தான் இந்த தேர்தல். நமது முதல் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டோம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த திட்டத்தை நிறைவேற்றுவோம் என்றோம். அப்போது எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆரும் நம்முடன் இருந்தார்.
அவரும் ஆதரித்து பல கூட்டங்களில் பேசி இருக்கிறார். அண்ணா மறைவுக்கு பிறகும் அண்ணா கண்ட கனவு சேதுசமுத்திர திட்டம். அந்த திட்டத்தை நிறைவேற்றினால் வளம் கொழிக்க, வாணிபம் செழிக்க, வியாபாரிகள் தங்களது பொருட்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவார்கள் என்று தேர்தல் அறிக்கையில் அறித்து, அதை நிறைவேற்றுவதற்கான முயற்சியில் ஈடுபட்டோம். அப்போது டி.ஆர்.பாலு அந்த திட்டத்தை எப்படி நிறைவேற்ற வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டார் என்பதை நினைத்து பார்க்கும்போது அது என் நினைவில் பசுமையாக இருந்தது.
டி.ஆர்.பாலு போன்ற இளைஞர்கள் காத்து இருக்கிறோம் என்று கூறுவதைபோல் அன்றைக்கு இந்த சேதுசமுத்திர திட்டத்திற்கு அடிக்கல் நாட்டு விழா மதுரையில் நடந்த போது இந்திய அரசு இந்த திட்டத்தை ஆதரித்தது என்று மேடையில் இருந்தவர்கள் பேசினர்.
திமுகவுக்கு பெயர் வந்துவிடும் என்பதற்காக..
எனக்கு வெற்றி தந்தால் அ.தி.மு.க. சார்பில் அந்த திட்டத்தை கொண்டு வருவேன் என்று சொல்லி இருந்தார். ஒரு மாதத்திற்கு முன்பு டெல்லிக்கு அம்மையார் சென்றார். ஏன் செல்கிறார் என்று பார்த்தால் உச்சநீதிமன்றத்தில் தடை வாங்க சென்று, தடையும் பெற்று இருக்கிறார். முழுமையான தடை அல்ல. அதை நிறைவேற்றுகின்ற முயற்சியை முடக்குகின்ற வரையில், தாமதப்படுத்தும் வகையில் தடை பெற்று இருக்கிறார்.
தமிழர்களே தமிழர்களே தஞ்சை வாழ் தமிழர்களே, வளம் கொழிக்க வேண்டும் என்று காத்து இருக்கிற தமிழர்களே உங்களுக்கு சொல்கிறேன். அம்மையார் தான் சேதுசமுத்திர திட்டம் நிறைவேற்ற தேவையில்லை. அந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் மீனவர்கள் கெட்டுபோவார்கள். அவர்களுக்கு துன்பம் ஏற்படும். ஆகவே அந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த அம்மையார் டெல்லிக்கு செய்தி அனுப்பினார். நீங்கள் தயவு செய்து எண்ணிப் பாருங்கள். மத்திய அரசு, தமிழகத்திற்கு தருகின்ற நல்ல திட்டத்தை வேண்டாம் என்று யாராவது சொல்வார்களா. வேண்டாம் என்றால் பராவாயில்லை. உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை பெற்று இருக்கிறார்கள் என்றால் அவர்கள் தமிழகத்தை நேசிப்பார்களா. இவர்கள் தமிழகத்துக்காரர்கள் இல்லை என்பதற்கு இது போதாதா. தமிழகத்தில் ஆளும் கட்சி, தமிழகத்திற்கு என்ன தேவை என்று கேட்டு பெறக்கூடிய கட்சி, நீ கொடுத்து நான் வாங்கிக்கொள்ள மாட்டேன் என்பதைப்போல அந்த திட்டத்தை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
அந்த திட்டத்தை நிறைவேற்ற டி.ஆர்.பாலு, மன்மோகன்சிங், சோனியாவையும், தமிழகத்தில் உள்ள எல்லா தலைவர்களையும் அழைத்து மதுரை நகரில் பெரும் விழாவை நடத்தினார். அதில் பேசியவர்கள் இந்த திட்டம் நிறைவேற வேண்டும். அண்ணாவின் கனவு திட்டம். தமிழர்களை வாழ வைக்கின்ற திட்டம். இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிற மன்மோகன்சிங், சோனியாவுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன் என்று கூறியது தம்பி டி.ஆர்.பாலு என்று கூறி கொள்கிறேன்.
ஜெயலலிதா இந்த திட்டம் ஏன் வேண்டாம் என்று சொல்கிறார் என்றால் இந்த திட்டம் நிறைவேறினால் தி.மு.க.விற்கு பெயர்வந்துவிடும். டி.ஆர்.பாலுவுக்கு புகழ் வந்துவிடும். அ.தி.மு.க.வுக்கு புகழ் கிடைக்காது என்பதால் தான் அவர்கள் நல்ல திட்டத்தை தடுத்து இருக்கிறார்கள். உச்சநீதிமன்றத்திற்கு சென்று தடை வாங்கி இருப்பதால் அந்த திட்டத்தை தொடங்கவே முடியவில்லை. மத்தியஅரசுக்கு இந்த திட்டத்தை தொடங்க வேண்டும் என்ற நல்ல எண்ணம் இருந்தாலும் கூட இந்த அம்மையார் உச்சநீதிமன்றம் மூலம் அணை போட்டு வைத்து இருக்கிறார்.
நல்லதை யார் செய்தாலும் அது காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சியாக இருந்தாலும் ஏன் அ.தி.மு.க.வாக இருந்தாலும் நல்லது கிடைக்கும் என்றால் நான் வரவேற்பேன். ஜெயலலிதாவை போல குறுகிய புத்தி கொண்டவன் அல்ல. பெரியோர்களே, தாய்மார்களே, படித்தவர்களே சேதுசமுத்திர திட்டம் நல்ல திட்டம். எல்லோரும் கூட்டம் முடிந்தவுடன் நீங்கள் வீட்டிற்கு சென்று பேசிபாருங்கள். கருணாநிதி கொண்டு வந்தால் கருப்பட்டியும், இனிக்கதானே செய்யும். போன தேர்தலில் தேர்தல் அறிக்கையில் இடம் பெற செய்த திட்டத்தை, இந்த தேர்தலில் அந்த திட்டத்தை இருட்டடிப்பு செய்துவிட்டார் என்றால் கருணாநிதிக்கு பெயர் வந்துவிடும் என்பதற்காக இப்படி செய்துவிட்டார்.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.