அமெரிக்க தேர்தலின்போது அதிரடி காட்டிய மோடி... ஏதாவது ஸ்பெஷல் காரணம் இருக்குமா?
அமெரிக்க அதிபர் தேர்தல் நாளன்று 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று பிர தமர் மோடி அறிவிக்க ஏதாவது விசேஷ காரணம் இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்னை: அமெரிக்கா மட்டுமல்லாமல் உலகமே நேற்று அதிபர் தேர்தல் பரபரப்பில் இருந்தபோது யாரும் எதிர்பாராத வகையில் அதிரடி காட்டினார் பிரதமர் மோடி. ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பக்கம் திருப்பி விட்டார். இந்த "மாஸ்டர் ஸ்டிரோக்"கை யாருமே எதிர்பார்க்கவில்லை.
ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலின்போது மோடி இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட என்ன காரணம் என்பதுதான் யாருக்குமே புரியவில்லை. இது எதேச்சையானதா அல்லது ஒட்டுமொத்த இந்தியாவையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க மோடி போட்ட பிளானா என்றும் புரியவில்லை.
வெல்லப் போவது யார் ஹிலரியா அல்லது டிரம்ப்பா என்றுதான் நேற்று மாலை வரை ஒட்டுமொத்த இந்தியாவின் கவனமாக இருந்தது. ஊடகங்களும் கூட அதுகுறித்துதான் அதிகமாக பேசிக் கொண்டிருந்தன. ஆனால் திடீரென ஒரு புயலைப் போல கிளம்பி வந்தது மோடி அறிவிப்பு.
காட்டுத் தீ போல பரவிய அறிவிப்பு
இன்று இரவு முதல் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று வெளியான செய்தியை முதலில் மக்கள் நம்பவில்லை. ஆனால் அந்த செய்தி காட்டுத் தீ போல பரவத் தொடங்கியதும் ஒட்டுமொத்த நாடும் அல்லோகல்லப்பட்டு விட்டது.
மக்களிடம் பயம் நிம்மதி
இந்த ரூபாயை வச்சிக்கிட்டு என்ன செய்வது என்ற பெரும் குழப்பத்தில் மக்கள் மூழ்கினர். பணமெல்லாம் போச்சா என்ற பயமும் மக்களுக்கு வந்து விட்டது. பிறகுதான் மோடி அறிவிப்பு குறித்த விவரம் முழுமையாக வந்த பிறகே மக்களிடம் நிம்மதி திரும்பியது.
பெரும் தாக்கம்
ஹிலரி, டிரம்ப் என்று விவாதித்து வந்த வாய்களை ஒரே ஒரு அறிவிப்பால் தன் பக்கம் திரும்ப வைத்து விட்டார் மோடி. இன்னும் கூட மக்களிடமிருந்து அந்த விவாதம் விலகவில்லை. அந்த அளவுக்கு மோடியின் அறிவிப்பு மிகப் பெரிய தாக்கத்தையும், பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி விட்டது.
இந்தியாவுக்கு அமெரிக்கா முக்கியம் இல்லை
அமெரிக்காவில் அதிபர் தேர்தலே நடந்தாலும் கூட இந்திய மக்களுக்கு அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைதான் முக்கியம் என்பதையும் மக்கள் நேற்று நிரூபித்து விட்டனர். அத்தனை பேரும், ஹிலரி, டிரம்ப்பைத் தூக்கிப் போட்டு விட்டு நம்ம ரூபாயை எப்படி மாத்தலாம் என்ற கவலைக்குப் போய் விட்டனர்.
நம்ம பிரச்சினை ஹிலரி அல்ல!
இந்தியாவின் கவலை ஹிலரியோ அல்லது டிரம்ப்போ அல்ல, மாறாக கருப்புப் பணமும், கள்ள ரூபாய் நோட்டுகளும்தான் என்பதை உலகுக்கு குறிப்பாக அமெரிக்காவுக்கு உணர வைக்கவே இப்படி மோடி அதிரடியான அறிவிப்பை அமெரிக்க அதிபர் தேர்தலின்போது வெளியிட்டாரோ என்னவோ!