என்ன கொடுமை இது... விஜயகாந்த்தை ஒரு தலைவரும் நேரில் பார்த்து நலம் விசாரிக்கலையாமே..!
விஜயகாந்த்தை அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்திக்க வரவில்லை.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் கூர்மையற்று போய் மங்கிவருகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எவ்வளவோ பேர் உடல்நலிவுற்று விஜயகாந்த்தை நேரில் சந்தித்து நிதியுதவி கேட்பார்கள்.. அள்ளி கொடுத்தார். எவ்வளவோ பேர் விஜயகாந்த் கட்டி கொடுத்த இலவச மருத்துவமனையில் உயிர்பிழைத்து ஆரோக்கியத்துடன் நடமாடி வருகிறார்கள். இப்படி பல உயிர்களை பிழைக்க விஜயகாந்த், தற்போது உடல்நிலை சரி இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
தள்ளாமையில் இருக்கும் விஜயகாந்த்தை பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு நெஞ்சை அடைத்துவிட்டு செல்கிறது. ஆனாலும் இவரது உடல்நலம் குறித்து அறிந்து கொள்ள எந்த அரசியல் கட்சி தலைவர்களும் நேரில் போய் சந்திக்கவே இல்லை.. அக்கறை காட்டவும் இல்லை!!
நடிகர் விஜய்
எத்தனையோ விதமான சறுக்கல்கள், இன்னல்கள், ஏமாற்றங்கள் துரோகங்களை கடந்துதான் சினிமாவில் வெற்றி பெற்றவர் விஜயகாந்த். அதனால்தான் சாதிக்க துடிக்கும் பல திரைப்பட கல்லூரி மாணவர்களுக்கு பெரிய படங்களில் தொடர்ந்து வாய்புகள் வழங்கியவர் விஜயகாந்த். அதில் பலர் புகழ்பெற்ற இயக்குனர்களாக வளர்ந்துவிட்டனர். இதுபோல எத்தனையோ இயக்குனர்கள், நடிகர்களின் வாழ்வில் விளக்கேற்றியவர் விஜயகாந்த். ஆனால் ஒருவருமே விஜயகாந்த்தை சென்று பார்க்கவில்லை. தன்னை தூக்கி விட்ட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரனின் மகன் என்பதற்காக, நடிகர் விஜய்-க்காகவும் நடித்து கொடுத்து உதவியவர் விஜயகாந்த். ஆனாலும் இந்த இப்படி தந்தை, மகன் உள்ளிட்ட யாருமே திரையுலகில் விஜயகாந்த்தை சென்று நலன் விசாரிக்கவில்லை.
கரையேறியவர்
அதேபோல, இன்று பலர் தமிழக அரசியலில் வெற்றிடம் உள்ள நிலையில் அரசியல் கட்சி துவங்குகின்றனர். ஆனால் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இருவரும் அரசியலில் உச்ச நிலையில் இருந்த வேளையில் தன்னுடைய நடிகர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்து விட்டு, அரசியலில் ஈடுபட்டு மிகக் குறைந்த காலத்திலேயே எதிர்கட்சித் தலைவராக உயர்ந்த பெருமை பெற்றவர் விஜயகாந்த் மட்டுமே. இரு ஜாம்பவான்களையும் எதிர்த்து கரையேறியவர் விஜயகாந்த்.
ஏன் நலம் விசாரிக்கவில்லை?
ஆனால் பலமுறை அமெரிக்கா சென்று திரும்பும் விஜயகாந்த்தை, அரசியல் தலைவர்கள் இதுவரை நேரில் சென்று பார்க்கவில்லை. மு.க.ஸ்டாலின் தொடங்கிய சிறிய தலைவர் வரை யாருமே விஜயகாந்த்தைப் பார்க்கவில்லையாம். பெரும் வருத்தத்தில் இருக்கிறது விஜயகாந்த் குடும்பம். இத்தனைக்கும் கடந்த வாரம் சென்னை மருத்துவமனையில்தான் அனுமதிக்கப்பட்டிருந்தார். இதேபோலதான் சென்னை மருத்துவமனையில் கம்யூனிஸ்ட் தலைவர் தா.பாண்டியன் அனுமதிக்கப்பட்டார், முதல்வர் போனார், ஸ்டாலின் போனார். மற்றவர்களும் போனார்கள். திருமாவளவன் அனுமதிக்கப்பட்டபோதும் நலம் விசாரிப்பு நடந்தது. ஆனால் விஜயகாந்த்தை மருத்துவமனைக்கு சென்று பார்க்கவோ, அல்லது வீடு தேடி சென்று உடல்நலம் குறித்து அறிந்து வரவோ ஏன் அரசியல் கட்சிகள் தயங்குகின்றன?
உணர்ச்சிக் குவியல்கள்
ஸ்டாலின் ட்விட்டரில் பதித்த அக்கறை வாழ்த்து என்பது ஒரு அரசியல் பதிவீடு. அவ்வளவுதான். கருணாநிதி மறைந்தபோது விஜயகாந்த் ஒரு குழந்தை போல அழுது வெளியிட்ட வீடியோவை பார்த்து மனம் வருந்தாத தமிழர்கள் யார்? விஜயகாந்த் அழும்போதெல்லாம் நமக்கும் கண்ணீர் துளிகள் எட்டிப் பார்க்க காரணம் என்ன? அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பியபோது வீட்டிற்கு கூட போகாமல், நேராக கருணாநிதி சமாதிக்கு வந்த தள்ளாமை நடையையும், துக்கம் அடைத்து தொண்டை வெடித்து அழுத விஜயகாந்த்தை கண்டு மனம் கலங்காதவர்கள் யார்? இதுபோன்ற உணர்ச்சிகுவியல்கள் அனைத்தும் ஒருவருக்கு சொல்லி கொடுத்து வரக்கூடியதா?
வைகோ கூடவா?
2016ல் மக்கள் நலக்கூட்டணியில் விஜயகாந்த் இருந்தார். இந்தக் கூட்டணிக்கு வித்திட்ட வைகோ கூட விஜயகாந்த்தைப் போய்ப் பார்க்கவில்லையே. இதே வைகோ விஜயகாந்த்தை கூட்டணிக்கு அழைக்க எத்தனை முறை அவரிடம் நடையாய் நடந்தார். விஜயகாந்த்தை இழுக்க எப்படியெல்லாம் அழைத்தார். ஆனாலும் அவரும் விஜயகாந்தை புறக்கணித்து விட்டது ஆச்சரியம்தான்.
ஈரமனசுக்காரன்
தேமுதிக என்ற கட்சி தலைதூக்கி இருந்தபோதும் சரி, தற்போது தேய்ந்து போன போதும் சரி, விஜயகாந்த் மீது தமிழக மக்களுக்கு என்றுமே பாச உணர்வு சற்று ஜாஸ்தியாகவே உள்ளது. மற்ற கட்சிக்காரர்கள் மீது காட்டும் விரோதம், பகை, எரிச்சல், குரோதம், வன்மம், ஆத்திரம் இது எதுவுமே விஜயகாந்த் மீது தமிழக மக்களுக்கு காட்ட மனசு வருவதில்லை. இதுபோன்ற எந்த எதிர்மறை உணர்வும் விஜயகாந்த் மீது வந்ததும் கிடையாது. அதற்கு காரணம் விஜயகாந்த்தின் வெள்ளை மனசு. அவரது இதயத்திற்கும் செயல்பாட்டுக்கும் இடைவெளி மிகவும் குறைவு. மனசு சொல்வதைதான் பேசுவார், செய்வார். ஒரு கட்சியே அடியோடு காணாமல் போய் கொண்டிருந்தாலும் ஒரு தலைவர் மீது அலாதி பிரியமும், பரிவும், பாசமும், அன்பும், இனம்புரியாத உற்சாகமும் வருகிறது என்றால் அது ஈரமனசு உடைய விஜயகாந்த் மீது மட்டும்தான்.