சட்டசபைக்கு வர வேண்டியதுதானே.. நான் எதிர்பார்த்தேனே... கருணாநிதிக்கு ஜெ. கேள்வி!
சென்னை: மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் இன்று தெரிவித்தார்.
2006ம் ஆண்டு அதிமுக எம்.எல்.ஏக்கள் சட்டசபையில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது தனி ஆளாக சட்டசபைக்கு வந்து தான் பேசியதைப் போல சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக உறுப்பினர் கருணாநிதி உள்ளிட்ட 10 எம்.எல்.ஏக்கள் இன்று பங்கேற்று பேசாதது ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக தலைவர் கருணாநிதி இன்று சட்டசபைக்கு பேச வருவார் என்று தான் எதிர்பார்த்து தயாராக வந்ததாகவும், ஆனால் கருணாநிதி வரவில்லை என்றும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்
சட்டசபையில் இன்று காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்பு பணித்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபையில் காவல்துறை கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்தார். மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு எந்த குந்தகமும் ஏற்படாத வகையில் காவல்துறை செயல்பட்டு வருகிறது என்று குறிப்பிட்டுள்ள ஜெயலலிதா, தமிழக காவல்துறையினர் அமைதியை பேணிக் காத்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள், கூட்டங்கள், பேரணிகள் நடத்த காவல்துறை அனுமதி தந்துள்ளது என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா பதிலுரை
சட்டசபையில் காவல்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று முதல்வர் ஜெயலலிதா பேசினார். அப்போது அவர், எதிர்கட்சியினர் இன்றைய விவாதத்தில் பங்கேற்கவில்லை என்று கூறினார். நாள்தோறும் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி நடந்து கொள்கிறார் என்பதை மக்கள் அறிவார்கள் என்றும் கூறினார்.
மன்னிப்பு கேட்ட ஸ்டாலின்
எதிர்கட்சித்தலைவர் ஸ்டாலின் அவர்கள் கடந்த 16ம் சட்டசபையில் பேசும் போது, சில நேரங்களில் திமுக உறுப்பினர்களின் நடவடிக்கைகளால் வெட்கமும், வேதனையும்படுவதோடு, மன்னிப்பு கோருவதாகவும் சபாநாயகரிடம் கூறினார்.
மக்கள் நிராகரிப்பு
சட்டசபை தேர்தலின் போது ஊர் ஊராக சென்று வீதி வீதியாக சென்று வீடு வீடாக சென்று பாட்டு பாடி மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்களை மக்கள் நிராகரித்து விட்டனர் என்றும் ஜெயலலிதா கூறினார். 32 ஆண்டுகளுக்குப் பின்னர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக அதிமுக ஆட்சியை தேர்வு செய்ததாகவும் சட்டசபையில் ஜெயலலிதா தெரிவித்தார்.
79 பேர் சஸ்பெண்ட்
திமுக உறுப்பினர்கள் அவைக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டதால் 79 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
இதனை திரிக்கும் விதமாக திமுகவினரை காவல்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில் பங்கேற்க விடாமல் தடை செய்து விட்டதாக கூறி வருகின்றனர்.
10 பேர் பேசியிருக்கலாமே
அவர்களுக்கு உண்மையிலேயே விவாதங்கள் மீது நம்பிக்கையும் அக்கறையும் இருந்திருந்தால் சஸ்பெண்ட் செய்யப்படாத 10 திமுக உறுப்பினர்கள் பங்கேற்றிருக்கலாமே. வந்தார்கள் வந்த உடன் வெளிநடப்பு செய்து விட்டார்கள்.
பேசத்தெரியாதா?
அவர்களில் 2 பேர் தங்களின் கருத்தை சொல்லியிருக்கலாமே முன்னாள் அமைச்சர்கள் 2 பேர் இருந்தார்களே அவர்களுக்கு சட்டசபையில் பேசத் தெரியாதா? அவர்களில் இருவராவது சட்டசபையில் பேசியிருக்கலாமே என்றும் கேள்வி எழுப்பினார்.
ஒரே ஆளாக வந்தேன்
2006ம் ஆண்டு நாங்கள் எதிர்கட்சி வரிசையில் இருந்த போது 60 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். அப்போது ஒரே ஒரு உறுப்பினராக நான் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பங்கேற்று பேசினேன் என்றும் ஜெயலலிதா கூறினார்.
கருணாநிதி வராதது ஏன்?
2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து இருந்தது. அதைப்பற்றி நான் இன்று பேச தயாராக வந்தேன். திமுக எம்.எல்.ஏக்கள் இன்று பேசினார் அதற்கு பதிலடி கொடுப்பதற்கான தான் தயாராகவே வந்தேன். ஆனால் எதிர்கட்சி வரிசையில் சஸ்பெண்ட் செய்யப்படாத திமுக தலைவர் கருணாநிதி சட்டசபைக்கு வராதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
துணிச்சல் இல்லையா?
கருணாநிதிக்கு துணிவிருந்தால் வந்திருக்கலாம். வந்திருக்க வேண்டும், சட்டசபைக்கு வந்து பேசியிருக்க வேண்டும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார். தொடர்ந்து அவர் திமுக உறுப்பினர்களின் செயல்பாடுகளை விமர்சித்தார். 2006 - 2011ம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற குற்றச்சம்பவங்கள் குறித்து பேசினார்.