நச்சென.. நட்டா கையை பிடித்த அன்புமணி.. யாரும் எதிர்பார்க்கலையே.. அடுத்து நடந்த மெகா ட்விஸ்ட்
சென்னை: பாஜக தலைவர் ஜெ. பி நட்டாவை பாமக அன்புமணி ராமதாஸ் சந்தித்த விவகாரம் தமிழ்நாடு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லியில் புதிய நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி கடந்த ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்தார். தமிழ்நாட்டில் இருந்து 1947-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட செங்கோல் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. அதற்கு முதல்நாள் நடந்த நிகழ்வில் பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தனர் ஆதீனங்கள்.
இதையடுத்து தமிழ்நாட்டு ஆதீனங்கள் புடைசூழ, திருமறை முழங்க செங்கோலை புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு கொண்டு சென்றார் பிரதமர் மோடி. அதன்பின் தமிழ்நாட்டு செங்கோல் முன்பாக நெடுஞ்சாண் கிடையாக கீழே விழுந்து வணங்கினார் பிரதமர் மோடி .
பூஜைக்கு பின் புதிய நாடாளுமன்றத்தில் லோக்சபா சபாநாயகர் இருக்கை அருகே தமிழ்நாட்டின் 1947-ம் ஆண்டு செங்கோலை நிறுவினார் பிரதமர் மோடி. செங்கோல் நிறுவிய பின்னர் தமிழ்நாட்டு ஆதீனங்களிடம் தலைவணங்கி ஆசீர்வாதம் பெற்றார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி இன்று மிகவும் பக்திமயமாகவும் காணப்பட்டார்.
அதன்பின் புதிய நாடாளுமன்றத்தில் கல்வெட்டுகளை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. அதோடு புதிய நாடாளுமன்ற கட்டிட கட்டுமான பணியாளர்களை சிறப்பித்தார் பிரதமர் மோடி. இதை தொடர்ந்து புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவில் சர்வ மதத் தலைவர்கள் பிரார்த்தனை நடைபெற்றது.
பாமக அன்புமணி ராமதாஸ்: புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவினை தமிழ்நாட்டின் திமுக உள்ளிட்ட அதன் தோழமைக் கட்சிகள் புறக்கணித்த நிலையில், பாமக கலந்து கொண்டது. அக்கட்சியின் தலைவரும் எம்.பி.யுமான டாக்டர் அன்புமணி, விழாவில் கலந்து கொண்டார். விழா முடிந்ததும் பாஜக தலைவர்கள் பலரிடமும் நெருங்கி அலாவுலாவினார் அன்புமணி.
குறிப்பாக ஜே.பி.நட்டாவை அன்புமணி சந்தித்துள்ளார். அந்த சந்திப்பில், தமிழக அரசியல் சூழல் பற்றி விசாரித்தார் நட்டா. இந்த சந்திப்பில் அன்புமணியிடம் நட்டா "பாஜக கூட்டணியில் நீங்கள் இருக்க வேண்டும்" என வலியுறுத்தினாராம்.
அதற்கு அன்புமணியோ, " அதிமுகவுடன் முரண்பட்டிருக்கிறோம். அதிமுக பாஜக கூட்டணி நீடித்தால் நாங்கள் எப்படி அதில் இருக்க முடியும் ? " என தயக்கத்துடன் சொன்னதற்கு, " தேர்தல் நெருக்கத்தில் அதை விவாதிக்கலாம். நீங்கள் எங்களோடு இருக்கிறீர்கள்" என்று அழுத்தமாகச் சொல்லியிருக்கிறாராம் ஜே.பி.நட்டா.
அதிமுகவுடன் கூட்டணியை முறித்துகொண்டதற்கு பிறகு, பாஜகவுக்காக அந்த கூட்டணிக்கு எப்படி செல்ல முடியும் ? அது சரிபட்டு வராதே என அன்புமணி குழம்பிப்போயிருக்கிறாராம் என்று பாமக தரப்பில் சொல்லப்படுகிறது.
அதிமுக பாமக மோதல்:
தமிழ்நாடு அரசியலில் புதிய திருப்பமாக பாமக, அதிமுக இடையே கடந்த சில காலமாக மோதல் நிலவி வருகிறது. தமிழ்நாட்டில் பாமக - அதிமுக மீண்டும் கூட்டணி வைப்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை. மாறாக இரண்டு கட்சிகளுக்கும் இருக்கும் விரிசல் மேலும் அதிகரித்து உள்ளது.
சமீபத்தில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார் என்று வெளிப்படையாக திமுகவிற்கு ஆதரவாக கூறினார்.
இந்த நிகழ்வில் பேசிய ராமதாசும், விடியலுக்காக நாம் காத்திருக்கிறோம். விடியலுக்கு வெகு நேரம் இல்லை. பாமகவின் சாதனைகளை மக்களிடம் கொண்டு செல்லுங்கள். நம் மக்கள் பாமகவின் தேவையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவிகித உள் ஒதுக்கீடு நம்முடைய மிகப்பெரிய சாதனை. அந்த உள் ஒதுக்கீட்டை அமல்படுத்த நாம் பாடுபட வேண்டும். அதை கொண்டு வர போதிய அழுத்தத்தை நாம் கொடுக்க வேண்டும், என்று ராமதாஸ் பேசி இருந்தார். இவர்கள் இருவரின் பேச்சிலும் திமுகவை விமர்சனம் செய்யவில்லை. பொதுவாக பாமக பொதுக்குழுவில் பாமக ஆளும் கட்சி கூட்டணியில் இல்லை என்றால், ஆளும் கட்சியை பாமக கடுமையாக விமர்சனம் செய்யும்.
ஆனால் இந்த முறை பாமக திமுகவை விமர்சனம் செய்யவே இல்லை. மாறாக விடியலுக்காக காத்திருக்கிறோம்.. விடியல் வெகு தொலைவில் இல்லை என்று கூட்டணிக்கு சிக்னல் கொடுப்பது போல பேசி இருக்கிறார் ராமதாஸ். அதிமுகவை கடுமையாக எதிர்க்கும் பாமக, ஏற்கனவே திமுகவுடன் நெருங்கி வருவதாக ஒரு பிம்பம் உள்ளது. இந்த நிலையில்தான் பொதுக்குழு கூட்ட பேச்சு.. திமுக + பாமக கூட்டணிக்கான விதையாக அமையுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு கட்சிகளும் கூட்டணி வைக்கிறதோ என்ற சந்தேகம் வந்தது.